பதிவில் உள்ளனவற்றைச் சிற்றிதழ்-பேரிதழ்களில் வெளியிட விரும்புவோர் - நெடுநாள் நண்பர் எனினும் - முன்-அனுமதி பெற்றாக வேண்டும்.

திணை இசை சமிக்ஞை

நிலம் எழுத்து நீர் கலை தீ வரலாறு வளி செயல் விசும்பு சிந்தனை சூன்யம் மோனம் --- நாகார்ஜுனன் வலைத்தளம்

12.11.09

மறைந்த அறிஞர் மா(ங்)ஸாஞ் பற்றி வாசுவின் தமிழாக்கம் - 3

மா(ங்)ஸாஞ்சுக்கும் ஃபூக்கோவுக்கும் நடந்த கடிதப்போக்குவரத்தில் இன்னொரு விஷயமும் வருகிறது. அது ஜெர்மன் அறிஞர் ஃப்ரைட்ரிக்ஹ் நீட்ஷ பற்றியது; அதிகாரத்துக்கான விருப்புறுதி (Wille zur Macht) என்ற கருத்தாக்கத்தை நீட்ஷ எங்கிருந்து எடுக்கிறார் என்பதே அந்த விஷயம். இது தொடர்பாக, தத்துவத்தில் தம்முடைய ஆசிரியர் என்று நீட்ஷ போற்றும் ஜெர்மன் அறிஞர் ஆர்தர் ஷோப்பன்ஹர் எழுதிய பிரபஞ்ச விருப்புறுதியும் குறிப்புமாக உலகு (Die Welt als als Wille und Vorstellung) என்ற நூலை மேற்கோள் காட்டி மா(ங்)ஸாஞ் ஃபூக்கோவுக்கு எழுதியிருக்கிறார். ஃபூக்கோவும் இதை ஏற்கிறார் என்பது அவர் மா(ங்)ஸாஞ்சுக்கு எழுதிய கடிதங்களில் தெரிகிறது. மேலும் ஃப்ரெஞ்சு அறிஞர் பியர் ஹடோ (Pierre Hadot) எழுதிய பண்டைக்காலத் தத்துவம் என்பதென்ன? (Qu'est-ce que la philosophie antique?) என்கிற முக்கிய நூலை ஃபூக்கோவுக்கு அறிமுகப்படுத்தியதும் மா(ங்)ஸாஞ்சே. தவிர, மா(ங்)ஸாஞ்சுக்கு எழுதிய இன்னொரு கடிதத்தில், அதிகாரம் என்பதன் ஆணிவேரே இந்தியப்பரப்பின் தத்துவ மரபில்தான் இருக்கிறது என்கிற ஃபூக்கோ, குறிப்பாக ஆசிரியன் யார், எங்கே என்ற பிரச்னையே எழாமல் தம்மைத்தாமே என்றோ எழுதிக்கொண்டுவிட்ட நான்மறைகள் மற்றும் உபநிஷத்துகளில் தன்னிலைத்தொடர்பற்று வந்து உடல் நீங்கி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் சர்வாகர்ஷண சக்தி அல்லது ஆற்றலே அதிகாரம் என விவரிக்கிறார்.

பியர் ஹடோ எழுதிய கிரேக்க,ரோமானிய இலக்கியங்கள் பற்றிய ஆய்வுக்கட்டுரைகள் மற்றும் இந்தியப்பரப்பின் பண்டைக்கால காம சூத்திரம் நூல் ஆகியவை வழி அதிகாரம்-உடலரசியல்-பாலியல்நிலை குறித்த சிந்தனைகள் தம்மை வந்தடைந்தன என்று ஒப்புக்கொள்ளும் ஃபூக்கோ, இதை மா(ங்)ஸாஞ்சுக்கு எழுதிய கடிதத்தில் பலமுறை குறிப்பிடுகிறார். இதன் அடிப்படையில் பாலியல்நிலையின் வரலாறு (Histoire de la sexualité) என்ற பெரும் ஆய்வுநூலைப் பல தொகுதிகளாக எழுதிய ஃபூக்கோ, அதன் முதல் தொகுதியின் முன்னுரைக்காக மா(ங்)ஸாஞ்சை அணுகியபோது, மா(ங்)ஸாஞ் அதை மறுத்திருக்கிறார் என்ற அரிய உண்மையும் இந்தக் கடிதப்போக்குவரத்திலிருந்து தெரிகிறது.

இப்படிக் கீழையுலகின் தத்துவங்களை வைத்துப் புதிய சிந்தனையை உருவாக்கிய ஃபூக்கோ ஏன் மா(ங்)ஸாஞ்சின் மூல நூல்களைக் குறிப்பிடுவதேயில்லை என்பது நம்மைத் தாக்கும் பெரும் கேள்வி. ஆனால் 1963-ஆம் ஆண்டிலிருந்து ஃபூக்கோவின் நெருங்கிய தோழராக இருந்த டானியல் டெஃபர் (Daniel Defert), தாமும் ஃபூக்கோவும் இணைந்து மா(ங்)ஸாஞ்சைப் பல முறை சந்தித்தோம் என்கிறார். ஃபூக்கோவின் சிந்தனைத்தடத்துக்கு மா(ங்)ஸாஞ்சும் கீழைத்தத்துவங்களுமே அடிப்படைகள் என்று ஃப்ரெஞ்சு வானொலியொன்றில் சென்ற மாதம் இவர் கூறியுமிருக்கிறார். மேலும் காம சூத்திரம் நூலைப்பற்றி, ஃபூக்கோ, இதுவரை வெளிவராத தம்முடைய பாலியல்நிலையின் வரலாறு நூலைச் சார்ந்த, சதையின் கொம்பசரிப்புக்கள் (Les aveux de la chair) எனப் பெயர்கொண்ட, நான்காம் தொகுதியில் விவரித்திருக்கிறார் என்றும் டெஃபர் குறிப்பிடுகிறார்.

மா(ங்)ஸாஞ்சுக்கு ழாக் லெக்கனுடன் கடிதத்தொடர்பு இருந்ததாகத் தெரிய வருகிறது. ஸர்ரியலிஸ எழுத்தாளர்களுடன் இணைந்தும் பிரிந்தும் செயல்பட்ட ழார் பத்தாய்யின் துணைவியாக இருந்து பின்னர் லெக்கனுடன் வாழ்ந்த ஸில்வீ என்பவர்தான் மா(ங்)ஸாஞ்சுக்கு லெக்கனை அறிமுகம் செய்து வைத்தார் என்று தெரிகிறது. ஆனால் லெக்கனுக்கும் மா(ங்)ஸாஞ்சுக்கும் கடிதத்தொடர்பு அவ்வளவாக இருக்கவில்லை என்றும் தெரிகிறது. கிடைத்திருப்பவை என்னவோ நான்கு கடிதங்கள்தாம். ஒரு கடிதத்தில் லெக்கன் உலைவுக்கோட்பாட்டை (pain principle) விவரித்து jouissance என்ற ஃப்ரெஞ்சுச் சொல்லைப் பயன்படுத்தியதை மா(ங்)ஸாஞ் சிலாகித்துப் பதில் எழுதுகிறார். இந்தச் சொல்லுக்கு இணையாக ஆங்கிலத்தில் எழுதவே முடியாது, மொழிக்கு வரையறைகள், எல்லைகள் உண்டு என்று மா(ங்)ஸாஞ் கூறப்போக, அதற்குப் பதிலளிக்கும் லெக்கன், வடமொழியிலும் தமிழிலும் சைவ மரபில் சத்-சித்-ஆனந்தம் அதாவது சச்சிதானந்தம் என்று எழுதுவதைக் குறிப்பிட்டு, இதேபோல ஆங்கிலத்திலும் புதிய சொல்லொன்றை உருவாக்கலாம் என்கிறார். லெக்கானுக்குச் சீன மொழி தவிர, வடமொழி மற்றும் தமிழ்ப் பரிச்சயமும் உண்டு என்பது அவர் மா(ங்)ஸாஞ்சுக்கு எழுதின இந்தப் பதிலிலிருந்து தெரிகிறது. ஆனால் இன்றுவரை jouissance என்ற சொல்லுக்கு இணையான சொல் ஆங்கிலத்தில் வரவில்லை என்பதால் அந்தச்சொல் ஏற்கனவே ஒரு மொழியில் இல்லை என்றால் அதைப் புதிதாக உருவாக்குவது எளிதல்ல என்று கூறலாம். ஆக, மா(ங்)ஸாஞ் கூறியதில் உண்மையுண்டு எனத் தெரிகிறது.

ழாக் தெர்ரிதாவுடனும் நெடிய விவாதங்களை நேரடியாகவும் கடித வழியும் நிகழ்த்தியவர் மா(ங்)ஸாஞ். ஆதியில் iteration என்ற சொல்லின் வேர் itera என்ற வடமொழிச்சொல்லே என்று மா(ங்)ஸாஞ் அடித்துச் சொல்வதை இறுதியில் தெர்ரிதா ஏற்கவேண்டி வருகிறது. அதாவது itera என்ற சொல்லுக்கு இருபொருள் உண்டு. ஒன்றில் வேறு (other) என்ற பொருளில் வரும், அன்றில் பிற (again) என்ற பொருளில் வரும் மீண்டும். இதற்குத் தமிழிலிருந்தும் பல எடுத்துக்காட்டுக்களை முன்வைக்கிறார், மா(ங்)ஸாஞ். முதலில் திருமந்திரத்தின் தொடக்கத்திலேயே மரத்தில் மறைந்தது மாமத யானை என்ற சொற்றொடர் இருமுறை வருவதைச் சொல்லி, இங்கே மரம், மறைதல், மதம், யானை யாவும் itera என்பதற்கான எடுத்துக்காட்டுக்களே என்கிறார். இப்படி இருமுறை இருபொருளில் வந்து பெருகிச்செல்வதே iteration என்பது மா(ங்)ஸாஞ்சின் துணிபு.

தவிர, தொல்காப்பியத்தில் வரும் எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்ற சூத்திரத்தையும் மா(ங்)ஸாஞ் மேற்கோள் காட்டுகிறார். மூலத்தில் இந்தச் சூத்திரம் இருமுறை வந்திருக்க வேண்டும், ஆனால் ஏடெடுத்தெழுதியோர் itera என்பதைப் புரிந்துகொள்ளும் அறிவின்றி ஒருமுறை இருந்தால் போதும் என விட்டிருக்கலாம் என்கிறார். அதாவது பொருளாயது, முதன்முறை சொல் சுட்டும் பல்பொருளாகவும் மறுமுறை அந்தச் சொல்லின் பல்பொருளாகவும் மூன்றாம் முறை எல்லாச்சொல்லையும் வி்ஞ்சும் உண்மைப்பொருளாகிய பரம்பொருளையும் குறித்து அமைந்து பெருகிச்செல்லும் என்கிறார் மா(ங்)ஸாஞ்ச். தெர்ரிதா தம்முடைய அதிமுக்கிய Of Grammatology நூலில் கலையும் சாவும் - கலையும் அதன் சாவும் என்ற தலைப்பில் விரிவாக அலசுவதும் மா(ங்)ஸாஞ் கூறும் itera என்பதைத்தான்.

தெர்ரிதாவுக்கும் மா(ங்)ஸாஞ்சுக்கும் நல்ல நட்பு நிலவியது. எழுபதுகளில் ஃப்ரெஞ்சு அரசானது இனிவரும் யுகத்தில் யாவரும் மென்பொருள்-வன்பொருள் பயின்றால் போதும் என்ற தொலைநோக்குடன் அந்நாட்டுப் பல்கலைக்கழகங்களிருந்து தத்துவம்-மொழியியல்-இலக்கியம்-மனோவியல்-சமூகவியல்-மானுடவியல் போன்ற துறைகளைப் படிப்படியாக நீக்க முடிவெடுத்தபோது மா(ங்)ஸாஞ்சும் தெர்ரிதாவும் இணைந்து GREPH என்ற எதிர்ப்பியக்கத்தை நடத்தியிருக்கிறார்கள். அல்ஜீரியாவின் யூதக்குடும்பத்தில் பிறந்த தெர்ரிதாவும் மா(ங்)ஸாஞ்சும் பிற்பாடு ஒருமுறை அல்ஜீரியா சென்றார்கள். அங்கு பாலைவனத்தில் மா(ங்)ஸாஞ் சுழன்றுசுழன்று ஸூஃபி நடனமாடிப் பிறகு யோகப்பயிற்சியும் செய்தார். அதைப் பார்த்துக்கொண்டிருந்த தமக்கே தலை கிறுகிறுத்துவிட்டதாக, தம்மைப்பற்றிய தெர்ரிதாவை முன்வைத்து (2002) என்ற படத்தில் சொல்கிறார், தெர்ரிதா. அதைவிடப் பிரமாதமான யோகப்பயிற்சியை, வஜ்ராயனம் என்ற தாந்திரீக பௌத்தத்தைப் பயின்றவர்களிடமிருந்து கற்றதாக மா(ங்)ஸாஞ் தம்மிடம் தெரிவித்ததாகவும் இதே படத்தில் சொல்கிறார் தெர்ரிதா.

மா(ங்)ஸாஞ்சைப் பற்றிய இன்னொரு தகவல் - இவர் பொடானி என்ற பெயரில் போர்ஹெவுக்குப் பல கடிதங்கள் எழுதியவர். போர்ஹெவின் கதைகளை விமர்சிக்கும்போது அவற்றில் பெண் பாத்திரங்களே இல்லை என்று கூறி, போர்ஹெ தீவிர ஆணாதிக்க மனப்பான்மை உடையவர் என்று குற்றம் சாட்டுகிறார் பொடானி. இன்னோர் இடத்தில், பிரதியே பெண்தான் என்றும் அந்தப்பெண்ணைச் சுற்றி வருபவர்தான் தம் வாழ்நாள் முழுதும் எழுதிய போர்ஹெ என்றும் சிலாகித்துக்கூறும் பொடானி, இந்தியப்பரப்பின் தத்துவ மரபுகள் எத்தனையோ இருக்கும்போதும் அவற்றில் தமக்கு ஏற்புடையது சக்தி வழிபாடான சாக்தமே என்று சொல்லி, கொல்கொத்தா பெருநகரில் ஹௌரா பகுதியில் துர்க்கையம்மனு்க்கு நடந்த பலிபூஜையில் தாம் பங்கேற்றதையும் விவரிக்கிறார்.

இப்போது வெளியாகியிருக்கும் மா(ங்)ஸாஞ்சின் நூல்கள் மூன்றையும் வாசித்தவுடன் ஃப்ரெஞ்சு அறிவுலகத்தார் தம்முடைய தன் அதிமுக்கிய அறிஞர்களில் ஒருவரை வரலாற்றிலிருந்தே மறைத்துவிட்டார்கள் என்றும் அவருடைய கருத்துக்களைத் திருடி தத்தம் பெயர்களில் வெளியிட்டிருக்கிறார்கள் என்றும் சட்டென்று புலப்பட்டுவிடுகிறது. இவை மன்னிக்கவே முடியாத குற்றங்கள்.

தம்முடைய பெயர் வெளியில் தெரிவதை, பிரபலமாவதை மா(ங்)ஸாஞ் விரும்பவில்லைதான். மற்ற ஃப்ரெஞ்சு அறிஞர்களோ, அந்த விருப்பத்தை நிறைவேற்றுவதைப் போல, அவருடைய பெயரையே வரலாற்றிலிருந்து சுத்தமாகத் துடைத்தெடுத்து விட்டிருக்கிறார்கள். இது ஃப்ரெஞ்சு அறிவுலக வரலாற்றில் நடந்த முக்கிய மோசடி. தவிர, இவர்கள் யாவரும் கீழையுலகின் தத்துவம் பற்றி, குறிப்பாக இந்திய தத்துவம் பற்றி, ஒரு சொல்லும் சொல்லவில்லை. நேர்மையற்றது ஃப்ரெஞ்சு அறிவுலகம் என்பதற்கு இது சரியான சான்று!

ஆக, இதுவரை நாமறிந்த அமைப்பியல், அதற்குப் பிறகான-அமைப்பியல், பிறகான-நவீனத்துவம் போன்றவற்றை மீள்பரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயம் நமக்குண்டு. மா(ங்)ஸாஞ்சின் மூன்று நூல்களையும் பல மொழிகளில் ஆக்கி, ஃப்ரெஞ்சு அறிவுலகத்தின் இந்த மோசடியை அம்பலப்படுத்த வேண்டிய கடமை யாவருக்கும் உண்டு. மேலும் ஃப்ரெஞ்சு அறிவுலக வரலாற்றையே இந்த நூல்களின் பின்புலத்தில் மாற்றி எழுதியாக வேண்டிய கடமையும் உண்டு. தவிர, இந்த நூல்கள் வெளிவந்த பின், அதாவது கடந்த இரண்டு மாதங்களாக, மேற்குலகத் தத்துவம் கீழை நோக்கி திரும்பிவிட்டது என்றால் மிகையன்று!

பதிந்தவை