பதிவில் உள்ளனவற்றைச் சிற்றிதழ்-பேரிதழ்களில் வெளியிட விரும்புவோர் - நெடுநாள் நண்பர் எனினும் - முன்-அனுமதி பெற்றாக வேண்டும்.

நிலம் எழுத்து நீர் கலை தீ வரலாறு வளி செயல் விசும்பு சிந்தனை சூன்யம் மோனம் --- நாகார்ஜுனன் வலைத்தளம்

6.7.09

இரவு முகம் மேலே - 3 - ஹூலியோ கொர்த்தஸர்

இரவு முகம் மேலே - 1 - ஹூலியோ கொர்த்தஸர்
இரவு முகம் மேலே - 2 - ஹூலியோ கொர்த்தஸர்


தொடக்கத்தில் ஒரு குழப்பம். இவன் உணர்வெல்லாம் தொட்டிழுத்து சற்றே தன்னில் மழுங்கவோ, குழம்பவோ வைத்தது. இருள் கனத்து, தான் ஓட உணர்ந்தான், மேலே மரங்கள் குறுக்கே பின்னுகிற வானம் சற்றே குறைவாக இருண்டுதெரிந்த போதும்.

"ஓ, இந்த வழியை விட்டு விலகிவிட்டேனே," என்று எண்ணினான். இலையும் சேறுமான ஒருவித மெத்தையில் இவன் கால்கள் அமிழ்ந்தன. பிறகு விலாவிலும் காலிலும் புதர்க்கிளைகள் சாட்டையெனக் கீறாமல் இவனால் ஓரடிகூட எடுத்துவைக்க முடியவில்லை. மூச்சிரைக்க, தான் சுற்றிவளைக்கப்பட்டிருக்கிறோம் என அந்த இருளையும் மௌனத்தையும் தாண்டி உணர்ந்து குனிந்து அமர்ந்தான் - என்ன நடக்கிறது என்பதைக் கேட்கத்தான். ஒருவேளை இந்த வழி மிக அருகில் இருக்கலாம், வைகறையின் முதல் ஒளிக்கீற்றில் தன்னால் அதைக் காண முடியலாம். இப்போது அதைக்காண யாரும் உதவ முடியாது அவனுக்கு. கத்தியின் பிடியைத் தானாகப் பற்றிய கரம், சேற்றுநிலத் தேள் போல மெல்ல தாயத்து தொங்கிய கழுத்துவரை ஊர்ந்துசென்றது. உதடுகளை சற்றும் அசைக்காமலேயே, நேர்த்திக்கடனாக சோளம் அளிக்கும் மந்திரத்தை உச்சரித்தான். நல்நிலவுகளை வருவிக்கிற மந்திரம் அது, மோதெக்கர்களின் உடைமைகள் யாவற்றையும் விநியோகிக்கும் இறைவனுக்கான பிரார்த்தனையும் அடங்கிய மந்திரம் அது. அதேவேளை தன் கணுக்கால்கள் மேலும் சேற்றில் அழுந்த உணர்ந்தான். எங்கோ பசுமை மாறா கடம்ப மரங்கள் கொண்ட தோப்பில் இருளில் காத்திருப்பதை இவனால் தாங்க முடியவில்லை. பிறை வளரத் தொடங்கிய இந்த மலர்தலின் போர் மூன்று நாட்கள் இரவுபகலாகத் தொடர்ந்துகொண்டிருந்தது. காட்டின் அடியாழத்தில் மறைந்துகொள்ள முடிந்ததென்றால், அந்தச் சதுப்புநிலம் தாண்டி வழியிலிருந்து மாறினால், ஒருவேளை இவனை அஸ்டெக் வீரர்கள் பின்தொடர முடியாமல் போகக்கூடும். அவர்கள் ஏற்கனவே சிறைப்பிடித்துவிட்ட பலர் பற்றி யோசித்தான் இவன். இங்கே எண்ணிக்கை முக்கியமல்ல, அந்தக் குடமுழுக்கு விழாக்காலம்தான் முக்கியம். வேட்டையிலிருந்து திரும்பலாம் என விழாப்புரோகிதர்கள் சமிக்ஞை அளிக்கும் வரை வேட்டை தொடரும். யாவற்றுக்கும் எண்ணிக்கையும் எல்லையும் உண்டு என்பதால் இந்தப் புனிதக்காலத்தில் மாத்திரம்தான் வேட்டைக்காரர்களுக்கு எதிர்ப்புறம் இருப்பான் இவன்.

அலறல்கள் கேட்டுத் துள்ளிக்குதித்தான், கையில் கற்கத்தியுடன். தொடுவானம் எரிந்து சிவப்பதைப் போல, கிளைகள் ஊடே தீப்பந்தங்கள் தன் மிக அருகில் நகர்வதைக் கண்டான். போரின் மணம் தாங்க இயலாதபடி இருக்க, முதல் எதிரி இவனிடம் குதித்த போது, அவன் கழுத்து நோக்கிக் குதித்து, அவன் மார்பில் கற்கத்தியைக் கைப்பிடிவரை அமிழுமாறு பாய்ச்சியதில் ஏறத்தாழ ஒருவித சுகத்தை அனுபவித்தான். தீப்பந்தங்களும் மகிழ்ச்சி முழக்கங்களும் இவனைச் சூழந்துகொண்டுவிட்டிருந்தன. இவன் ஓரிருமுறை காற்றில் கத்தி பாய்ச்சிய பிறகு பின்னாலிருந்து இவன் கழுத்தில் கயிறு பாய்ந்து கண்ணியில் வைத்து மடக்கியது.

"காய்ச்சல்தான்" என்றார் அடுத்த படுக்கையில் கிடந்த நோயாளி. "என் இரைப்பையில் அறுவை சிகிச்சை செய்தார்கள். அப்போது எனக்கும் இப்படித்தான் நடந்தது. கொஞ்சம் தண்ணீர் குடி. பிறகென்ன, நல்ல உறக்கம் வரும் பாரேன்."

தான் மீண்டுவந்த இரவின் அடுத்துக் கிடந்த இவனுக்கு அந்த மருத்துவ மனை அறையின் அரைகுறை நிழல் சுவையாகப்பட்டது. தூரச்சுவரிலிருந்து திருஷ்டிக்கண் போல உயரமாய் ஒரு வயலெட் விளக்கு இவனைக் கண்காணித்தது. இருமல், ஆழ மூச்சுவிடல், அவ்வப்போது நடக்கும் முணுமுணுப்பான உரையாடல் ஆகியவற்றைக் கேட்க முடிந்தது. வேட்டை என்பதன்றி யாவும் சௌகர்யமாக, பாதுகாப்பாக அமைந்தன... அந்தக் கொடுங்கனவு பற்றி இவன் மேலும் யோசிக்க விரும்பவில்லை. கேளிக்கைக்குத்தான் எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன அல்லவா! தன் கைக்கட்டை, அதைக் காற்றில் சுகமாகத் தூக்கிப்பிடிக்கும் அந்தச்சக்க்கரங்களை நோக்கத் தொடங்கினான். அருகில் இரவு-மேஜையில் ஒரு போத்தல் தண்ணீரை வைத்திருந்தார்கள். அதை வாயருகே கொண்டுபோய் மிகவும் அரிதாகக் கிடைக்கும் மதுபானம் போலக் குடித்தான். அந்த மருத்துவ மனை அறையின் பலவித வடிவங்களை இப்போது துல்லியமாகக் கண்டான். அதன் முப்பது படுக்கைகளை, கண்ணாடிக்கதவுகள் கொண்ட தனியறைகளைக் கண்டான். தன் முகம் குளிரத் தொடங்கியதை அடுத்து, காய்ச்சல் குறைந்துவிட்டது என எண்ணினான். இமை மேலிருந்த காயம் அவ்வளவு வலிக்கவில்லை. ஒரு நினைவைப்போல ஆகிவிட்டது... அதே ஹோட்டலிலிருந்து தான் மீண்டும் மோட்டார் சைக்கிளை இழுத்துக்கொண்டு கிளம்புவதைக் கண்டான். இது இப்படி முடியும் என யார்தான் நினைத்திருப்பார்? அந்த விபத்தின் தருணத்தைத் துல்லியமாக மனத்தில் நிறுவ முற்பட்டான். ஆனால் அங்கு ஒரு வெற்றிடம் மாத்திரமே இருந்ததால் பெரும் கோபமடைந்தான். அந்த வெற்றிடத்தை இவனால் நிரப்பிவிட முடியவில்லை. விபத்தின் தாக்கத்துக்கும் ந்டைபாதையிலிருந்து பிறர் இவனை எடுப்பதற்கும் இடையில் இவன் மயக்கமடைந்ததோ, என்ன நடந்ததோ, ஏதும் இவனால் பார்க்க முடியவில்லை. அதேவேளை இந்த வெற்றிடம், இந்த இன்மை, நித்தியமாய் நீடித்தது என்றும் உணர்ந்தான்.

இல்லை, இந்த வெற்றிடத்தில் இவன் எதையோ தாண்டிவிட்டதாகவோ பெரும் தூரங்களைப் பின்கடந்து விட்டதாகவோ அந்தக்காலமும் பெரிதாக இல்லை. விபத்தின் அதிர்ச்சி, நடைபாதையில் சட்டென்று விழுந்த கொடூரம்தான் பெரிதாகத் தெரிந்தது. எப்படியிருந்த போதும் பிறர் அவனைத் தரையிலிருந்து தூக்கியபோது அந்தக் கறுப்புக்குழியிலிருந்து வருவதில் பெருத்த ஆசுவாசங்கொண்டான். உடைந்த கையின் வலி, வெட்டிய இமையிலிருந்து சிந்திய ரத்தம், முட்டியில் ஏற்பட்ட காயம் இவை யாவுடன் அந்தப் பகலொளிக்கு, பகலுக்குத் திரும்பியதில்தான் ஆசுவாசம். தன்னை யாரோ தாங்குகிறார்கள், கவனிக்கிறார்கள் என்பதில் ஆசுவாசம். விநோதமாக இருந்தது. தன் அலுவலகத்தில் உள்ள மருத்துவரை இதுபற்றிக் கேட்கவேண்டும், ஒருநாள் கேட்கவேண்டும்.

இவனை மீண்டும் உறக்கம் தழுவத்தொடங்கி மெல்ல இழுத்தது. மிக மிருதுவான தலையணை. காய்ச்சலடித்த இவன் தொண்டையில் தங்கியது, தண்ணீரின் சுவை. மெதுவாக மங்கத் தொடங்கியது, மேலிருந்த விளக்கின் வயலெட் ஒளி.

மல்லாக்கக் கிடந்து உறங்கினான். இந்த உறக்க நிலை இவனுக்கு அதிர்ச்சி தரவில்லை. ஆனால், அந்த ஈர மணம், கல்லினின்றும் நீர் ஊறும் மணம், இவன் தொண்டையைக் கவ்வி, இவனைப் புரிய வைத்தது - கண்களை அகலத் திறந்து பக்கங்கள் எங்கும் பார்க்க வேண்டும், நம்பிக்கையற்று என. அவனைச் சுற்றி முற்றான இருள். எழ முயல, மணிக்கட்டில், கணுக்காலில் யாரோ கயிறு கட்டி இவனை அமுக்குகிறார்கள். தரையில், பசபசத்து ஒட்டும் ஜில்லிட்ட க்ற்பாளங்களில், அடித்தமர்த்தி வைக்கிறார்கள். இவன் அம்மண முதுகில், கால்களில் குளிர் கடிக்க உணர்ந்தான். மந்த நிலையில், தன் தாடைகொண்டு தாயத்தைத் தொட முயன்று அதையும் அவர்கள் அவனிடமிருந்து அகற்றிவிட்டார்கள் என்று கண்டான். இப்போது கதி அதோகதிதான், எந்தப் பிரார்த்தனையாலும் இவனைக் காப்பாற்ற முடியாது. வெகுதூரத்திலிருந்து, அந்த நிலவறையின் பாறைச்சுவர்களின் ஊடே, அந்த விருந்துக்கென முழங்கிய மேளத்தைக் கேட்டான்... இவனைக் கோயிலுக்குக் கொண்டு சென்றிருந்தனர். தியோகால்லிக் கோயிலின் (2) நிலவறைச்சிறையில் கிடந்தான், தன் முறையை எதிர்நோக்கியவாறு.

2. தியோகால்லி: மத்திய அமெரிக்காவில் பிரமிட் வடிவக் கட்டிடம், உச்சியில் இருந்த கோயிலில் நரபலி உள்ளிட்ட சடங்குகள் நடந்ததாகத் தெரிகிறது.

(இன்னும் வரும்)

-- Julio Cortázar, La noche boca arriba, Buenos Aires, 1956. Translated by Paul Blackburn into English as The Night Face Up, 1968.
ஸ்பானிஷ் மூலம் மற்றும் ஆங்கில ஆக்கத்திலிருந்து தமிழாக்கம்.

படங்கள் - அஸ்டெக் இனத்தவர் செதுக்கிய சிறுத்தைப்புலி.
அஸ்டெக் இனத்தவரின் சூரியக்கடிகை, இந்த இளைஞர் குத்திக்கொள்ளும் பச்சையாக.

5 கருத்துகள்:

செந்தழல் ரவி said...

நல்ல பதிவு..டொமைனாக இதனை மாற்றிக்கொள்ளலாமே ?

சன்னாசி said...

கொர்த்தாஸர் கதைகளில் இது ஒரு recurring motif என்று நினைக்கிறேன் - Two Elenas கதையும்கூட இதே Night face-upஐ வேறொரு தளத்தில் நினைவுபடுத்துவது

vasu said...

Two Elenas கதை carlos fuentes எழுதியது. cortazar அல்ல..fuentes எழுதிய burnt water தொகுப்பில் உள்ளது. இந்த கதையை நான் தேடிக்கொண்டிருக்கிறேன்..படித்ததில்லை...

நாகார்ஜுனன் said...

Las dos Elenas, ஃப்யுன்டஸின் கதைதான். அதில் மகள் முற்போக்கு போலவும் தாய் மரபை முன்வைப்பவளாகவும் மாறுபட்டவர்களாக வந்து ஏதோ ஓரிடத்தில் கலந்துவிடுவார்கள். அதாவது எந்த எலெனா மகளின் கணவருடன் உறங்குகிறாள் என்பதாகக் கதை முடியும்.

சன்னாசி said...

வாசு - ஆம், The Two Elenas ஃப்யுண்டஸின் கதை; என் தவறுதான்.

பதிந்தவை