25.6.09

நெஞ்சத்து அவலம் இலர் - 1

ஈழத்தில் நடந்தேறிய இனப்படுகொலை நிகழ்வுகள், போர்க்குற்றங்கள், தொடரும் மனித உரிமை மீறல்கள் பற்றியெல்லாம் பன்னாட்டு அளவில் விசாரணை நடக்கும் சாத்தியமுண்டா என்று கேட்டு நான் எழுதிய பதிவு, இந்தியாவைச் சேர்ந்தவன் என வெட்கித் தலைகுனிகிறேன். பிறகு காலச்சுவடு ஜூன் மாத இதழில் இது வெளியானது. அப்போது அதிலிருந்த சில விஷயங்களையொட்டி நடந்த விபரங்களை என்னால் சேர்க்க முடிந்திருக்கவில்லை. காரணம், அந்தக்கட்டுரையை எழுதிமுடித்த பிறகுதான் மே 26-27 நாட்களில் இலங்கை குறித்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் குழுவின் விசேட அமர்வு ஜெனிவா நகரில் நடைபெற்றது.

மனித உரிமைக்குழு தன் முடிவை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் பரிந்துரைக்கு அனுப்ப முடியும், ஆனால் நேரடி விசாரணையில் ஈடுபட முடியாது என்பதைக் கவனிக்க வேண்டும். இந்தக்குழுவில் மொத்த உறுப்பினர்கள், 47 நாடுகள். இங்கே ஒரு தீர்மானம் விவாதத்துக்கு வரவேண்டுமானால் அதை உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கினர் ஆதரிக்க வேண்டும் என்ற நிலை.

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் குறித்த பன்னாட்டு விசாரணை வேண்டும் என ஐரோப்பிய நாடுகள் சார்பில் ஸ்விட்ஸர்லாந்து கொணர்ந்திருந்த தீர்மானத்தைப் பன்னிரண்டு நாடுகள் வரை ஆதரித்திருந்தன. இலங்கை அரசு கொணர்ந்த தீர்மானத்தை இந்தியா, சீனா, பாகிஸ்தான், இந்தோனேஷியா, மலேஷியா, ஃபிலிப்பைன்ஸ் ஆகிய ஆசிய நாடுகள், சவுதி அரேபியா, பஹ்ரைன், எகிப்து ஆகிய அரபு நாடுகள், க்யூபா, நிகராகுவா, பொலிவியா போன்ற லத்தீன் அமெரிக்க நாடுகளும் எனப் பன்னிரண்டு நாடுகள் வழிமொழிந்திருந்தன.

விசேட அமர்வின் இறுதியில், இலங்கையில் மனித உரிமைகள் பாதுகாப்பு என்ற பிரச்னை பின்னுக்குப் போய், உலகமே மேற்குலகச்சார்பு அணி, அதற்கு மாற்று-எதிர்நிலை அணி எனக் கறாராக இரண்டாகப் பிரிந்து செயல்பட்ட விநோதத்தைப் பார்க்க முடிந்தது. இறுதியில் ஐரோப்பிய நாடுகள் கொணர்ந்த தீர்மானம் விவாதத்துக்கே வராமல் போய், இலங்கை, தான் கொணர்ந்த தீர்மானத்தைப் பெரிய விவாதமின்றி நிறைவேற்றியது. இப்படி இருபத்தோராம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நடந்திருக்கும் பெரும் துயரங்களில் ஒன்றான ஈழத்தமிழர் போர்ப்படுகொலைகளின் அவலத்தை நெஞ்சில் சுமக்காதோராய் உலக நாடுகள் பல சிறுத்துப் போயிருக்கின்றன. இவற்றில் இந்தியாவும் அடக்கம்.

நான் பணிபுரியும் அம்னெஸ்டி இன்டர்நாஷனல் அமைப்பின் சார்பில் ஜெனிவா சென்று திரும்பிய முக்கிய மனித உரிமை ஆய்வாளர் ஒருவர், இலங்கை அரசு கொணர்ந்த தீர்மானம் நிறைவேறியதை ஒரு நிஹிலிஸ நிகழ்வு என்று சோகத்துடன் விவரித்தார். ருவாண்டா, சூடான், ஈராக், ஆஃப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஜார்ஜியா, காஸா பகுதி என உலகின் பல பகுதிகளிலும் போரின்போது நடந்துவரும் குற்றங்கள் பற்றிய விசாரணைச்சாத்தியங்களை முன்னெடுத்துவருபவர் இவர். ஏன் என்று இவரைக் கேட்டபோது இவர் கூறினார்:

"ஐ.நா. மன்றச் செயலாளர்-நாயகம் பன் கி மூன், மற்றும் விஜய் நம்பியார் உள்ளிட்ட அதிகாரிகள், இலங்கையில் பலியான தமிழ்மக்களின் எண்ணிக்கையை வேண்டுமென்றே பலமடங்கு குறைத்துக் கூறிவந்தார்கள் என ஆதாரப்பூர்வமான செய்தியும் இதே வாரம் வரத் தொடங்கிவிட்டது. ஆக, போர் நடக்கும் மற்ற இடங்களைப் போலன்றி இலங்கையைப் பொறுத்தவரை ஐ.நா. மன்ற அமைப்பின் செயல்பாடுகள் மீதே பலத்த ஐயங்கள்-கேள்விகள் எழும்பியுள்ளன என்பதைப் பார்க்கிறோம். இந்த நிலையில் இதே வாரம் இலங்கை சென்ற பன்-கி-மூன் இலங்கை அதிபருடன் இணைந்து சுமுகமான கூட்டறிக்கையை வெளியிடுகிறார், அதில் விசாரணை பற்றி மழுப்புகிறார். இதிலிருந்தே இவரும் மற்ற் அதிகாரிகளும் பன்னாட்டு விசாரணை குறித்து எவ்வித ஆர்வமும் காட்டாமல் இருந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது."

ஜெனிவா நிகழ்வுகள் தெரிவிக்கும் வேறுசில உட்செய்திகளை ஒவ்வொன்றாக நோக்கலாம்.

1. இலங்கைப்போர் குறித்த் விசேட அமர்வு வேண்டும் என ஐரோப்பிய நாடுகள் இரு மாதங்களாகவே முயன்று வந்தன. ஆனால் அதற்கான தயாரிப்புக்களை முழுமையாகச் செய்துமுடித்திருக்கவில்லை. இதேவேளை மே 16-17 நாட்களில் இந்தியத் தேர்தல் முடிவுகள் வெளியாயின, இதே நாட்களில் இலங்கைப்போரில் அரசபடையினர், தாங்கள் விடுதலைப்புலிகளின் தலைமையை அழித்து, போரில் வெற்றி ஈட்டிவிட்டதாக அறிவித்தார்கள். இந்த நிலையில், போர்க்குற்றங்கள் மீதான பன்னாட்டு விசாரணை என்பது, போரில் வெற்றி பெற்ற இலங்கை அரசு மீதுதான் பிரதானமாக நடைபெறும். அப்போது போர்க்குற்றங்களுக்கு உடந்தையாக இருந்தவர்கள் என்ற நிலையில் இலங்கை அரசுக்கு ஆயுத உதவி செய்தவர்களின் பட்டியலும் வெளியில் வரும், அதற்கு யாருமே தயாரில்லை என்பது தெரிந்துவிட்டது. ஆக, இந்த விசேட அமர்வுக்கு சடங்கைப்போன்ற களை தோன்றிவிட்டது.

(இன்னும் வரும்)


படங்கள் - வன்னி முகாமில், கண்ணிவெடியில் சிக்கியோரின் நினைவாக ஜெனிவாவில் சின்னம்.

1 comment:

கானகம் said...

அடுத்த பகுதிகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

ஜெயக்குமார்.