பதிவில் உள்ளனவற்றைச் சிற்றிதழ்-பேரிதழ்களில் வெளியிட விரும்புவோர் - நெடுநாள் நண்பர் எனினும் - முன்-அனுமதி பெற்றாக வேண்டும்.

நிலம் எழுத்து நீர் கலை தீ வரலாறு வளி செயல் விசும்பு சிந்தனை சூன்யம் மோனம் --- நாகார்ஜுனன் வலைத்தளம்

29.5.09

இலங்கைப்படுகொலைகள் இருபதாயிரத்துக்கும் மேல் - லண்டன் டைம்ஸ் ஏடு

கீழ்க்கண்டவை இங்கே லண்டனில் இன்று காலை வெளியாகியிருக்கும் செய்திகள். நேற்றிரவே இணையத்தில் வாசித்துவிட்டேன். உறக்கமே இன்றி வெதும்பினேன்... மிக மிக அடிப்படையான கேள்விகளை இனி எமக்குள் கேட்டாக வேண்டும் என்பது இந்தப்படங்கள் கூறும் செய்தி. இவற்றில் டைம்ஸ் ஏட்டின் தலையங்கத்தை மட்டும் தமிழாக்கியிருக்கிறேன்.

இலங்கைப்படுகொலைகள் - உண்மை அம்பலமாக வேண்டும்
டைம்ஸ் ஏடு தீட்டியிருக்கும் தலையங்கம்


நேற்று ஐக்கிய நாடுகள் மன்ற மனித உரிமைக்குழுவில் நடந்த வாக்கெடுப்பில், விடுதலைப்புலிகளுடன் இலங்கை அரசு நடத்திய போரில் அதற்குக் கிட்டிய வெற்றியைப் புகழ்ந்து தீர்மானம் நிறைவேறியிருப்பதைக் கண்டு மனம் வெறுத்துப்போன மனித உரிமை ஆர்வலர் ஒருவர் தாம் கடும் விரக்தி அடைந்ததாகக் கூறினார். ரொம்ப குறைத்துக் கூறியிருக்கிறார். உண்மையில் இந்தத் தீர்மானம், பாரிய அவமானமாகும்.

முன்பிருந்த ஐக்கிய நாடுகள் மன்ற மனித உரிமை ஆணையம் ஊழல் நிறைந்த அமைப்பாகிவிட்டது, செயல்படத் தவறிவிட்டது என்பதால் அதற்கு மாற்றாக 2006-ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் மன்ற மனித உரிமைக்குழு கட்டமைக்கப்பெற்றது. இதில் 47 நாடுகள் உறுப்பினர்களாக இருக்கின்றனர். இலங்கையில் நடந்த போரின்போது நிகழ்ந்த பாரிய மனித உரிமை மீறல்கள்தாம், இந்தக்குழு முதலில் எதிர்கொண்ட அதிமுக்கிய சவால். அதை நேர்மையாக எதிர்கொள்வதில் இந்தக்குழு தோல்வி கண்டிருக்கிறது.

இலங்கைப்போரின் இறுதி வாரங்களில் அரச படையினர் மற்றும் விடுதலைப்புலிகள் இருதரப்பும் நிகழ்த்திய கொடூரச்செயல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் பற்றிப் பரவலாக வெளியான செய்திகளை இந்தக்குழு விசாரிக்க வேண்டும் என இதில் உறுப்பினராக இருக்கும் ஐரோப்பிய நாடுகள் கேட்டுக்கொண்டன. ஆனால், இந்தக்குழுவோ இலங்கை அரசு ஒருதலைப்பட்சமாக, உண்மைக்குப்புறம்பாக, தன்னையே பாராட்டிக்கொள்ள வேண்டிக் கொணர்ந்த ஒரு தீர்மானத்தை விவாதிக்க முடிவுசெய்தது. இந்தத் தீர்மானம், இலங்கை அரசு பல்லாயிரக்கணக்கான மக்களை விடுதலை செய்ததை வரவேற்பதாகக் கூறுகிறது, போரில் தோல்வியுற்ற விடுதலைப்புலிகளுக்குக் கண்டனத்தைத் தெரிவிக்கிறது, சாமானியத் தமிழ் மக்கள் மீது நடந்த ஷெல்லடித்தாக்குதல்கள் பற்றி வாய்திறக்கவில்லை, சுமார் இரண்டு லட்சத்து எழுபதாயிரம் சாமானியத் தமிழ் மக்களைத் தற்போது இலங்கைப் படையினர் தடுத்து வைத்திருக்கும் முகாம்களுக்கு செஞ்சிலுவைச்சங்கம் மற்றும் பிற நிவாரண அமைப்புகளுக்கு அனுமதி இல்லை என்பது குறித்தும் வாய்திறக்கவில்லை.

பிழைகள் மலிந்த இந்தத் தீர்மானத்தை ஆதரித்த நாடுகள், வழக்கமாக இத்தகைய தவறுகளைச் செய்யக்கூடிய அதே சீனா, இந்தியா, ருஷ்யா, பாகிஸ்தான் மற்றும் சில ஆசிய- மற்றும் இஸ்லாமிய-நாடுகள்தாம். தம்முடைய நாட்டிலும் ஏன் எந்த நாட்டிலும் நடக்கும் பாரிய மனித உரிமை மீறல்கள் பற்றி இந்தக்குழு எப்போதும் விசாரணை செய்துவிடக்கூடாது என்பதை உறுதிசெய்ய விரும்பும் நாடுகள் இவை.

ஐக்கிய நாடுகள் மன்றத்தின் மனித உரிமைகள் ஆணையர் நவநீதம் பிள்ளை அம்மையார் மாத்திரம் இந்தப்போரில் மிக மோசமான மனித உரிமை மீறல்கள் நடந்திருக்கின்றன, இவை குறித்து காத்திரமான, பக்கச்சார்பற்ற பன்னாட்டு விசாரணை வேண்டும் என்று வலியுறுத்தி உரையாற்றினார். இலங்கையில் நடந்திருக்கும் இந்த மனித உரிமை மீறல்கள், கொடூரங்கள் வெளியுலகம் கற்பனை செய்திருந்ததைவிட மிகமிக மோசமானவை என்று இப்போது தெரிய வந்திருக்கிறது. இந்தப் போரில் இவ்வாண்டு தொடங்கி ஏப்ரல் மாத முடிவுவரை சுமார் ஏழாயிரம் சாமானிய மக்கள் பலியாகியிருக்கலாம் என ஐக்கிய நாடுகள் மன்ற அலுவலர்கள் கணித்திருந்தனர். மாறாக இப்படி இருபதாயிரம் பேர் வரை பலியாகியிருக்கலாம் என்று இப்போது தெரிகிறது. குறிப்பாக, ஆயிரக்கணக்கான மக்கள் இலங்கைப்படையினர் நடத்திய ஷெல்லடித்தாக்குதலில் அடிபட்டு உயிர்விட்டிருக்கலாம், இவர்கள் அனைவரும் விடுதலைப்புலிகள் தம்முடைய இறுதி எதிர்ப்பைக் காட்டிய முல்லைத்தீவு கடற்கரைப்பகுதியில் அவர்களுடன் இருந்ததால் போரில் சிக்கியவர்கள் என்று தெரிகிறது.

தொண்ணூறுகளின் இடைப்பகுதியில் பால்கன் வட்டகையில் ஸெரப்னிட்ஸா என்ற இடத்தில் இஸ்லாமிய மக்கள் ஏழாயிரம் பேர் வரை செர்பியக்குடிப்படையால் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள். மூன்றாண்டுகள் முன்பு சூடானின் டார்ஃபுர் பகுதியில் கறுப்பின மக்கள் மூன்று லட்சம் பேர் வரை அரபுக்குடிப்படையால் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள். இப்படி இந்தப் படுகொலைகளுடன் ஒப்பிடவல்ல மோசமான கொடூரம் இலஙகையிலும் நடந்திருக்கிறது. இது டைம்ஸ் ஏடு இப்போது எடுத்திருக்கும் புகைப்படங்கள், விடியோ படங்களிலிருந்து தெரிகிறது.

இலங்கை அரசு ஒரு மணற்பகுதியை பாதுகாப்புப்பகுதி என அறிவித்தது, அரச படையினரின் கொடூர ஷெல்லடியிலிருந்து தப்பி்ப்பிழைக்க வேணடுமென்றால் அங்கே போக வேண்டும் என்று போரில் சிக்கிய சாமானியத் தமிழ் மக்களுக்குக் கூறப்பட்டது. இதே பகுதியில் நூற்றுக்கணக்கான புதிய சவக்குழிகள் தோண்டப்பட்டதற்கான அடையாளங்களை, ஷெல்தாக்கி விளைந்த குழிகளை, ஷெல்லடியால் யாவும் சின்னாபின்னமானதன் அடையாளங்களை இந்தப் புகைப்படங்கள் காட்டுகின்றன. இங்கேதான் சாமானிய மக்கள் கூடாரமடித்துத் தங்கியிருந்தார்கள். இந்தப்பகுதி பாதுகாப்பான பகுதியாக இருக்கவில்லை. இந்தப்போரில் கனரக ஆயுதங்களை இனி பாவிக்கப்போவதில்லை என இலங்கை அரசு அறிவித்த அதே கடந்த ஏப்ரல் இருபத்தேழாம் நாளுக்குப் பிறகாக இந்தப்பகுதியை ஷெல்கள் கடுமைபாகத் தாக்கின, குலைநடுங்கிப்போயிருந்த மக்கள் பலர் இறக்க, தப்பித்தவர்கள் இறந்தவர்களை இங்குதாம் புதைத்திருக்கிறார்கள்.

இந்தப்போரின்போது சாமானிய மக்களில் சிலர் விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டிருக்கின்றனர் எனக் கூறலாம். கடந்த இருபத்தெட்டு ஆண்டுகளில் விடுதலைப்புலிகள் கைக்கொண்ட கொடூரமும் தாட்சணியமற்ற அடக்குமுறையும் பயங்கரவாதிகள் என்ற அவர்களைப் பிறர் வர்ணிப்பதை நியாயப்படுத்தி வந்திருக்கின்றன. அதே நேரம் இந்தப்போரில் என்னதான் நடந்தது என்பதை முற்றாகக் கண்டறிவது சாத்தியமில்லாமல் போயிருக்கிறது என்றே கூற வேண்டும். போர்ப்பகுதியில் வெளியார் யாரும் செல்ல இலங்கை அரச படையினர் தடை விதித்திருந்தனர். உணவுப்பற்றாக்குறை நீடித்தது. சுகாதார வசதிகள் இருக்கவில்லை. போரில் சிக்கிக் குலைநடுங்கிப்போன, அதில் காயம்பட்ட மக்களுக்கு உடனடி உதவி தேவைப்பட்டது. இதையெல்லாம் அங்கிருந்து தப்பியோடி வர முடிந்தவர்கள் தெளிவாகவே தெரிவிக்கிறார்கள்.

இதைவிடப் பயங்கரமான செய்திகள் இப்போது வந்துகொண்டிருக்கின்றன. படிப்படியாகப் பலர் காணாமல் போயிருக்கிறார்கள், குடும்பத்தார் பிரிக்கப்படுகிறார்கள், இளைஞர்கள் எங்கோ அழைத்துச் செல்லப்படுகிறார்கள் என்றெல்லாம் செய்திகள். இந்தப்பகுதிகளுக்கும் தடுப்பு முகாம்களுக்கும் நிவாரண அமைப்புக்கள் சுதந்திரமாகச் சென்றுவர இலங்கை அரசு அனுமதி வழங்காத வரை, அங்கே என்னதான் நடக்கிறது என்பதை யாரும் காணக்கூடாது, கேட்கக்கூடாது என்று அது முடிவு செய்திருப்பதாக்வே கருத வேண்டும்.

விடுதலைப்புலிகளைத் தான் தோற்கடித்த இறுதிப்போரின் போதும் இலங்கை அரச படை இதே உத்தியைத்தான் கையாண்டது. இந்தப்போருக்கு சாட்சிகள் யாரும் தேவையில்லை, பத்திரிகைக்காரர்கள் யாருக்கும் அனுமதியில்லை, மனித உரிமை மீறல்கள் பற்றி வெளியுலகுக்கு யாரும் செய்தியனுப்பி எச்சரித்துவிடக் கூடாது, மக்கள் அனுபவிக்கும் துயரை யாரும் புகைப்படம் பிடித்துவிடக் கூடாது என்று அரச படையினர் உறுதியாக இருந்தார்கள்.

இப்போது வெற்றியில் திளைத்துக்கொண்டிருக்கும் இலங்கை, ஆயுதக்கிளர்ச்சிகளை ஒடுக்கத் துடிக்கும் பிற நாடுகளுக்கான முன்னுதாரணமாக அமையலாம, இவர்களைப் பொறுத்தவரை போரில் வெற்றி ஒனறே குறிக்கோள்.

இலங்கையை ரத்தக்களரியாக்கிய உள்நாட்டுப்போர் முடிவதில் அங்குள்ள பலரும் மகிழ்ச்சியடைகிறார்கள், இருக்கலாம். ஆனால் அதற்கு என்ன விலை தந்தார்கள் என்பது குறித்த ஆதாரங்களை மறைப்பதில் இலங்கையுடன் ஐக்கிய நாடுகள் மன்றமும் கள்ளக்கூட்டணி அமைக்க முடியாது. போரில் என்ன நடந்தது என்ற உண்மை அம்பலமாக வேண்டும்.

டைம்ஸ் ஏட்டில் வெளியான செய்திகள்

இலங்கைப்படுகொலைகள் இருபதாயிரத்துக்கும் மேல் -
யாருக்கு எத்தனைப் பொறுப்பு? - லண்டன் டைம்ஸ் ஏட்டின் செய்தியும் ஆய்வும்

இலங்கை அரசின் பொய்களும் டைம்ஸ் ஏடு பிடித்திருக்கும் படமும்
நந்திக்கடல்-முல்லைத்தீவு நிலை பற்றிய டைம்ஸ் ஏட்டின் வான்-படங்கள்
மேலும் படங்கள்
இலங்கையின் போர்க்கள வரைபடங்கள் - லண்டன் டைம்ஸ் ஏட்டில்
போர்க்குற்றங்களுக்கான விசாரணை வேண்டும் என்ற தீர்மானம் தோல்வி - செல்லாக்காசாகி விட்டதா ஐ.நா. மன்றம்? - டைம்ஸ் ஏடு ஆய்வு

ஃப்ரெஞ்சு லெ மாந்த் ஏட்டில் வெளியான செய்திகள்

படுகொலை எண்ணிக்கையை ஐ.நா. சிறப்புத்தூதுவர் விஜய் நம்பியார் வேண்டுமென்றே குறைக்கச்சொன்னார் -
ஐ.நா. வட்டாரத்தை ஆதாரம் காட்டி லெ மாந்த் கட்டுரை

லெ மாந்த் ஃப்ரெஞ்சு ஏட்டில் வந்த படங்கள்

6 கருத்துகள்:

றஞ்சினி said...

அந்த அழகிய நந்திக்கடல் எத்தனை ஆயிரம் உயிர்களின் கடசிக்கதறலை உள்வாங்கி அழுவதற்க்கு அலைகள் வற்றி மொனித்திருக்கிறது..
படங்களைப்பார்த்து நடந்திருக்கும் நிகழ்வுகள் நெஞ்சையடைக்கிறது .. அந்த அழகிய கடலுடன் வாழ்ந்த மனிதர்களின் உயிர் ,வாழ்வு இனித்திரும்புமா ..

இவ்வளவு போர்குற்றங்களை ,மனித உரிமைமீறல்களைச் செய்துவிட்டு இலங்கை அரச தரப்பினர் சுதந்திரமாக நடமாடுகிறார்கள்..

எந்தக்குற்றமுமே செய்யாத எம் மக்கள் உறவுகளை இழந்து உறுப்புக்களை இழந்து ,எதிர்காலத்தை இழந்து ,இக்கொடிய வெய்யிலில் நிக்க இருக்ககூட இடமில்லாமல் பட்டினியாலும் நோய்களாலும் வேறு பல கொடுமைகளுடனும் முகாம்களில் சிறைப்பட்டுள்ளார்கள் ...தாங்கமுடியவில்லை .

vasu said...

இன்று காலையில் வந்த Times of india சென்னை பதிப்பை தவிர எந்த ஏடுகளும், இந்த விடயத்தை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை.
தொலைக்காட்சி ஊடங்களும் ( தமிழ்/ஆங்கிலம் செய்தி சான்ல்கள்) செவ்வனெ தங்களுடைய நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்புகிறது. shame on indian media!! கேவலம்!!!! வெட்க்ககேடு!!!! அறுவெருப்பாக இருக்கிறது எம்மாதிரியான சூழலில் நாம் வாழ்கிறோம்!

sugan said...

comஇருபத்தையாயிரம் என சூசை கடைசியாகச் சொன்னார்.
அவர்களுக்குத்தான் ஓரளவு சரியான கணக்குத்தெரியும்.
அவ்வளவு மக்களூக்கு என்றில்லாவிட்டாலும் அரைவாசிப்பேருக்காகுதல்
பிணைக்கு ஆள் வைக்க வேறு எவரும் இருந்தால் வெளீயேறியிருப்பார்கள் முன்னரே.
ஆட்பிணை வைத்தல் இரண்டு வருடங்களுக்கு முன்னரே தொடங்கிவிட்ட ஒன்று.
ஒருகுடும்பத்தில் மூத்தவளைக் கொண்டுபோகிறார்கள்.
அடுத்தவன் சின்னவன் ,அவன் தன் தாயைக்கேட் கிறான் " அம்மா! நானாம்மா போகவேணும் அக்காவை எடுக்க "

பிணைக்கு ஆள்வைத்தல் இப்படி முடிந்தது.

பதி said...

ஐயா,

ஃப்ரெஞ்சு லெ மாந்த் ஏட்டில் வெளியான செய்திகளை தமிழில் மொழிமாற்றம் செய்து வலையேற்றியுள்ளோம்.

உங்களது பார்வைக்கு,

http://kaiyedu.blogspot.com/2009/06/blog-post.html

http://pathipakkam.blogspot.com/2009/06/blog-post_05.html

கையேடு said...

திரு. நாகார்ஜூனன் அவர்களுக்கு,
உங்களது லெமாந்த் பத்திரிக்கையின் சுட்டியை எனது நண்பருடன் இணைந்து தமிழாக்கம் செய்திருக்கிறோம்.

பிரெஞ்சிலிருந்து ஆங்கிலத்துக்கும், பின்னர், தமிழுக்கும் மொழிமாற்றம் செய்யப்பட்டது.
உங்களுக்கு அவகாசம் இருந்தால், செய்திகள் சிதைவுறாமல் இருக்கின்றனவா என்று சரி பார்க்க இயலுமா. உங்களிடம் இவ்வுரிமையை எடுத்துக் கொள்ளலாமா என்று தெரியவில்லை.

உங்களுக்கு அவகாசமும் விருப்பமும் இருக்குமானால்.. சுட்டிகள் இங்கே

1.http://kaiyedu.blogspot.com/2009/06/blog-post.html

2.http://pathipakkam.blogspot.com/2009/06/blog-post_05.html

நன்றி.

நாகார்ஜுனன் said...

பதி, கையேடு இருவருக்கும் - வாசித்துப்பார்க்கிறேன்.

பதிந்தவை