பதிவில் உள்ளனவற்றைச் சிற்றிதழ்-பேரிதழ்களில் வெளியிட விரும்புவோர் - நெடுநாள் நண்பர் எனினும் - முன்-அனுமதி பெற்றாக வேண்டும்.

நிலம் எழுத்து நீர் கலை தீ வரலாறு வளி செயல் விசும்பு சிந்தனை சூன்யம் மோனம் --- நாகார்ஜுனன் வலைத்தளம்

26.5.09

மருத்துவர் பினாயக் ஸென் பிணையில் விடுதலை

இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் வைத்து, தடைசெய்யப்பெற்ற மாவோயிஸ்ட் அமைப்புடன் தொடர்பில் இருந்தவர், அவர்களுடைய வன்முறையை ஊக்குவித்தவர் என்ற குற்றச்சாட்டுகளின் பேரில் இரண்டு ஆண்டுகள் ராய்ப்பூரில் சிறைவாசம் அனுபவித்த மருத்துவர் பினாயக் ஸென் அவர்களை நேற்று இந்திய உச்சநீதி மன்றம் பிணையில் விடுவித்தது. இதையடுத்து இன்று மருத்துவர் ஸென் விடுதலை செய்யப்பட்டார்.

விடுதலையான மருத்துவர் ஸென்னுடன் சற்றுமுன் தொலைபேசியில் உரையாடினேன். தம்முடைய விடுதலைக்காகக் குரல்கொடுத்த அனைத்துலகப் பொதுமன்னிப்பு ஸ்தாபனம் மற்றும் பிற அமைப்புகளுக்கு நன்றி தெரிவித்தார். சத்தீஸ்கர் அரசாங்கம் தொடர்ந்து அவர் மீதான வழக்கை நடத்தும் என்று கூறியிருப்பது பற்றிக் கேட்டதற்கு, தம்மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் ஏதும் இதுவரை அரசு முன்வைக்கவில்லை, தாம் குற்றமற்றவர் என்பது விரைவில் உறுதியாகிவிடும் என்று தெரிவித்தார். மருத்துவர் ஸென் இருதய நோய் சிகிச்சைக்காக தாம் மருத்துவம் படித்த அதே வேலூர் கிறித்தவ மருத்துவக்கல்லூரிக்குச் செல்வார் என்றும் தெரிந்தது.

மருத்துவர் ஸென் வன்முறை-அரசியலில் நம்பிக்கையற்றவர் என்பதால் அவரை மனச்சாட்சிரீதியான கைதி (Prisoner of Conscience) என அனைத்துலக்ப் பொதுமன்னிப்பு ஸ்தாபனம் வரையறுத்து அவரை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தது. அவரை விடுதலை செய்யக்கோரி கடந்த மே பதினான்காம் நாள் - அதாவது அவர் கைதான இரு ஆண்டு நிறைவை ஒட்டி - இந்தியா நெடுகிலும் உலகெங்கும் போராட்டங்கள் நடந்தன். இங்கே லண்டனில் இந்தியததூதரகத்தின் முன் நடந்த போராட்டத்தில் நானும் பங்கேற்றேன்.

மருத்துவர் ஸென் அவர்களை நான் முதலில் சந்தித்தது, கால் நூற்றாண்டுக்கும் முன்பு. அப்போது மும்பை நகரில் வசித்த நான், அன்றைய மத்தியப்பிரதேசத்தின் தல்லி-ராஜ்ஹரா பகுதிகளில் ஒப்பந்தத்தொழிலாளர்களின் தொழிற்சங்கத்தலைவராக உழைத்துவந்த சங்கர் குஹா நியோகி அழைத்ததன் பேரில் அங்கு சென்று அவர்கள் நிலை பற்றி எழுதினேன்.

எட்டாண்டுகளுக்குப் பிறகு சுரங்க முதலாளிகளின் அடியாட்கள், நியோகி அவர்களைச் சுட்டுக்கொன்றனர். அதையடுத்து மருத்துவர் ஸென் அவர்களை சென்னையிலும் பெங்களூரிலும் வைத்துச் சந்தித்தேன். அப்போது அவர் ஷஹீத் (மாவீரர்) மருத்துவ மனையை எழுப்புவதில் மும்முரமாக இருந்தார். ஆதிவாசிகள், ஒப்பந்தத்தொழிலாளர்களின் உடல்நலம் பேணுவதற்காகவே உருவான மருத்துவ மனை இது.

நான் லண்டன் வந்த பிறகு, மாவோயிஸ்ட அமைப்புக்கும் ஆந்திர மாநில அரசுக்கும் சமாதானப் பேச்சுவார்த்தை தொடங்கியதை அடுத்து, வழக்கறிஞரும் மனித உரிமை ஆர்வலருமான கே.ஜி. கண்ணபிரான் மற்றும் மருத்துவர் ஸென் ஆகியோரை பிபிசி சார்பில் பேட்டி கண்டு ஒலிபரப்ப முடிந்தது. பிறகு மருத்துவர் ஸென்னுடன் அவ்வப்போது எனக்குத் தொடர்பு இருந்தது. சத்தீஸ்கர் அரசு-மாவோயிஸ்ட் அமைப்புக்கு இடையில் நடைபெறும் மோதல்கள் முடிவுக்கு வர வேண்டும் என்ற நோக்கமும் ஆதங்கமும் அவருக்கு உண்டு. தவிர, சங்கர் குஹா நியோகி படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பெற்றவர்களில் ஒரே ஒரு அடியாள் தவிர முதலாளிகள் அனைவரையும் இந்திய உச்சநீதி மன்றம் விடுதலை செய்தபோதும் மருத்துவர் ஸென்னுடன் தொடர்புகொண்டு பேசினேன்.

ஸென் விடுதலை சாத்தியமானதற்கு அவர் பெயர்பெற்ற மருத்துவர், மனித உரிமை ஆர்வலர் என்பதும் பன்னாட்டு அளவில் மருத்துவர்கள், மனித உரிமை அமைப்புகள் பிரச்சாரம் நடத்தியதும் முக்கியக்காரணம். ஆனால் அவரைப்போல விடுதலையாகாமல் இருப்பவர்கள் எத்தனையோ பேர். இவர்களில் பலர் பொய்க்குற்றச்சாட்டுகள் மற்றும் போலி வழக்குகளைச் சந்தித்தவாறு இந்தியச்சிறைகளில் வாடுகிறார்கள் என்பதை யார்தான் மறுக்க முடியும்!

படம் - லண்டன் இந்தியத்தூதரகம் முன்பு நடந்த போராட்டம்.

முந்தைய பதிவுகள்

இந்தியாவின் அரசியல்-கைதிகள்
மருத்துவர் ஸென் - சிறை தேடி வரும் விருது
அரசியல்-கைதிகள் யார் என்பதும் மேலும் - 1
அரசியல்-கைதிகள் யார் என்பதும் மேலும் - 2

6 கருத்துகள்:

Suresh said...

மருத்துவர் சென் பிணையில் விடுதலை செய்யப்பட்டது மகிழ்ச்சி தரும் அதே வேளையில் அவர் இரண்டு ஆண்டு காலம் எந்த வித ஆதாரமும் இன்றி சிறை வைக்கப்பட்டிருந்தார் என்பது குலை நடுங்கச் செய்கிறது. அவருக்கு பின Amnesty முதற்கொண்டு பல உள்நாட்டு வெளிநாட்டு தொண்டு நிறுவனங்கள் போராடியும் இரண்டு ஆண்டுகள் ஆகியுள்ளது.

இந்தியா போன்ற நாடுகளில் சமூகப் போராளிகள் எவ்வளவு எளிதாகக் ஒடுகப்ப்டுகிறார்கள் என்பதற்கு இது இன்னொரு உதாரணம். சென் தொலைத்த இரண்டாண்டுகளுக்கு இந்த அரசு எந்த நட்ட ஈடும் வழங்கபோவதில்லை. இந்திய ஊடகங்களின் கயைமைத்தனம் இனியும் வளரும்.

vasu said...

சத்தீஸ்கர் மாநில அரசால் மாவோயிஸ்ட் அமைப்புக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட சல்வா ஜுடும் என்ற அமைப்பை மருத்துவர் சென் கடுமையாக எதிர்த்தார். ஆனால் Amnesty International சல்வா ஜுடுமை ஆதரித்ததாக கேள்விப்படுகிறேன். Amnesty International கூற்றுப்படி, மாவோயிஸ்டுகள், பன்னாட்டு கம்பெனிகள் தொழில் தொடங்கவதற்கு இடையூறூக இருக்கிறார்கள். முக்கியமாக, மாவோயிஸ்டுகள் இயற்கை வளங்களை சுரண்டுவதை எதிர்த்தார்கள். AI இன் இந்த நிலைப்பாடு எனக்கு ஆச்சிரியமாக இருக்கிறது.

நாகார்ஜுனன் said...

1. அம்னெஸ்டி இன்டர்நாஷனலோ வேறு எந்த மனித உரிமை அமைப்போ ஸல்வா ஜுடும் போன்ற ஓர் ஆயுதக்குழு அமைப்பை ஆதரிக்காது, ஆதரிக்க வாய்ப்பில்லை. அரசின், ஸல்வா ஜுடுமின், மாவோயிஸ்டுகளின் மனித உரிமை மீறல்களை விமர்சிப்பதே அதன் பணி. நீங்கள் கேள்விப்பட்டதாகக் கூறுவது எங்கே என்று ஆதாரத்துடன் கூறவும்.

2. பன்னாட்டுக் கம்பெனிகள் தொழில் தொடங்குவது பற்றி அம்னெஸ்டி இன்டர்நாஷனல் போன்ற ஓர் அமைப்புக்கு நேரடிக் கருத்தில்லை. தொழில் நடத்துவது பன்னாட்டுச்சட்டங்களுக்கு, மனித உரிமைப் பாதுகாப்புக்கு ஏற்ப இருக்கிறதா என்று ஆராய்வதே அதன் பணி.

vasu said...

விளக்கத்திற்கு நன்றி. டெக்கான் க்ரானிக்கல், பெங்களூர், பதிப்பில், 27.05.09 அன்று Ms.Patralekha Chatterjee எழுதியது,( Binayak sen-Why dissent matters in democracy )

" Amnesty International says that Salwa Judum is actually a state sponsored attempt to clear Maoists out of chaattisgarh, ultimately giving companies better access to the state's abundant natural resources"
Ms.Patralekhஅ ப‌ற்றி என்னிட‌ம் அதிக‌ த‌க‌வ‌ல் இல்லை. ஆகையால் உங்க‌ளிட‌ம் கேட்டு விள‌க்க‌ம் பெற்றேன்.

நாகார்ஜுனன் said...

நீங்கள் கூறியிருக்கும் வாசகம் கீழ்க்கண்ட அம்னெஸ்டி இன்டர்நாஷனல் இணைய தளத்திலிருந்து எடுக்கப்பெற்றது.
http://asiapacific.amnesty.org/appeals/index/ind-010208-wwa-eng

..human rights defenders have gathered evidence showing that the Salwa Judum is actually a state-sponsored attempt to clear Maoists out of Chhattisgarh, ultimately giving companies better access to the state’s abundant natural resources.

இதில் கம்பெனிகளை ஆதரிக்கும் போக்கு எங்கிருக்கிறது!

vasu said...

நீங்கள் கொடுத்த சுட்டியை படித்தேன். இந்த சுட்டியில் ( AI ) தெளிவான நிலைப்பாடு தெரிகிறது. ஆனால் நான் படித்த கட்டுரை ( http://www.deccanchronicle.com/dc-comment/binayak-sen%3A-why-dissent-matters-democracy-291 ) கொஞ்சம் குழுப்பமாக எழுதியிருக்கிறார் என்று தோன்றுகிறது.

பதிந்தவை