பதிவில் உள்ளனவற்றைச் சிற்றிதழ்-பேரிதழ்களில் வெளியிட விரும்புவோர் - நெடுநாள் நண்பர் எனினும் - முன்-அனுமதி பெற்றாக வேண்டும்.

நிலம் எழுத்து நீர் கலை தீ வரலாறு வளி செயல் விசும்பு சிந்தனை சூன்யம் மோனம் --- நாகார்ஜுனன் வலைத்தளம்

19.5.09

உரப்பும் முகடுகள் - ஸில்வியா ப்ளாத்

தடிப்பொதியாய் என்னைச் சுற்றும்
தொடுவான் பலவும்
சாய்ந்து வேறாகி
எற்றைக்கும் நிலைதவற
தீக்குச்சி தொட்டு
இழைக்கோடு பல
என்னைச் சூடாக்கி
காற்றை ஆரஞ்சாக்கி
வாட்டும்,
வெளிர்வான்தனைச் சிப்பாயின் நிறமாய்
பாரித்துத்
தான் குத்தும் தூரம் பல
ஆவியாகுமுன்பே.
ஆயின்
கரையும் கரையும்
உறுதிமொழியின் வரிசையாய்
யான் முன்னே வர.

மலையுச்சிப் புல்வெளியினின்றும்
செம்மறியாடுகளின் இதயத்தினின்றும்
உயர்ந்த உயிரும் ஏது!
விதியாயப் பொழியும் வளியும்
யாவற்றையும் ஓரேதிசையில் சாய்த்து.
என் சூட்டைப் புனலாக்க
முயலுமதை உணர்வேன்.
ஹெதர்ச்செடியின் வேர்பலதை
நன்றாய்க் கவனித்தால்
என்பிலெனதும்
தம்மிடை வெளுக்க
எனையழைக்கும் இவை.

செம்மறியாட்டு மந்தையும்
தாமெங்கே என அறியும்,
வானிலை போல் சிமிட்டிநிறமாம்
தம் அழுக்குக் கம்பளி-முகிலில்
மேய்ந்து.
கண்மணி இவற்றின்
கருந்துளியும்
எனையழைக்கும்.
மெல்லிய சில்லறைச்செய்தியாய்
விண்வெளியில் அனுப்பிய அஞ்சலாய்
உணர்வேன்.
பாட்டிவேடத்தில்
நிற்கும் கூட்டம்
முடிச்சுருளும் மஞ்சள்பல்லும்
கடும்பளிங்குக் குரலுமாய்.

தேய்பாதையில் வளையம்
உருட்ட வந்தேன்.
என் விரல் வழி
நீரென வீழும்
தெளிந்த தனிமைவாசம் பலதும்.
புல்முதல் புல்வரை
உட்துளையான வாயிற்படிதான்.
விட்டமும் நிலையும் கழன்றுவிடும்.
வளியில் மனிதரில்
ஒற்றையசை ஒருசில மட்டும்
நினைக்குமிது,
இவற்றை
முனகி ஒத்திகை பார்க்கும்
கருங்கல் கருங்கல்லென.

கிடந்தவை யாவற்றிடை
தனித்தே நிற்கும்
என்மேல்
வானும் சாயும்.
எங்கோ கவனம் அலையும்
புல்லும் தலையசைக்கும்.
உடன் இவைதான்
எனில்
உடைந்தே போகும்
வாழ்வும்.
இருள் அதைப் பயமுறுத்தும்.
இப்போது
தாழக் குறும்பள்ளம் பலதில்
பர்ஸ் போல் கறுப்பாய்
சில்லறை நாணயமென
ஓளிரும் வீட்டு விளக்கும்.

-- Sylvia Plath, Wuthering Heights, 1959.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் எமிலி ப்ரான்ட எழுதிய நாவலின் அதே தலைப்பில் ஸில்வியா ப்ளாத் எழுதிய கவிதை. இங்கே பிரிட்டனின் யார்க்‌ஷயர் பகுதியில் எமிலி-ஷார்லட் ப்ரான்ட சகோதரிகளின் இல்லத்துக்குச் சென்று எழுதிய கவிதை.

கொலை, தற்கொலை, சாவு குறித்த ஸில்வியா ப்ளாத்தின் கவிதைகள், நிலப்பரப்பில் தன்னை எற்றைக்குமாய் வரையும் ஸில்வியா ப்ளாத்தின் கவிதைகள் பல, கடந்த ஃபிப்ரவரி மாதம் தொடங்கித் தமிழில் இந்த இணைய தளத்தில் வெளியாகியிருக்கின்றன. இதுவரை வெளியான கவிதைகள், முப்பத்தைந்து.

படம் - தமிழ்மக்களின் இன்றைய நிலையைக் குறிக்கும் விதமாக மரண முகம் கொண்ட தம்பலப்பூச்சி.

1 கருத்துகள்:

சர்வோத்தமன் said...

தொடுவான், புல்வெளி, மேயும் செம்மறி ஆடுகள் , வளி இவற்றின் இடையே கரைந்துபோகாமல் தனித்தே நிற்கிறான் மனிதன்.

பதிந்தவை