பதிவில் உள்ளனவற்றைச் சிற்றிதழ்-பேரிதழ்களில் வெளியிட விரும்புவோர் - நெடுநாள் நண்பர் எனினும் - முன்-அனுமதி பெற்றாக வேண்டும்.

நிலம் எழுத்து நீர் கலை தீ வரலாறு வளி செயல் விசும்பு சிந்தனை சூன்யம் மோனம் --- நாகார்ஜுனன் வலைத்தளம்

12.5.09

கருங்கரட்டுப் பாறைபல - ஸில்வியா ப்ளாத்

தீக்கல்லாய்
தன் கால்பட்டுக் கேட்பாள் -
எஃகுத்தெருவினின்று இரையும்
இத்தனை எதிரொலியும்
கறுப்பினின்று தொடுக்கும்
நிலாநீலமடித்த வளைவில்
கல்லெழுப்பும் நகரமதன்
கட்டையதில் தீமூட்டி விரையும்
வாடையும் ஆட்டும்

சிறுகுடிலின்
இருளின்
சுவர்முதல் சுவர்வரை கேட்ட
வெடிவாண எதிரொலியும்
ஆயின்
இவள் பின்னே இறக்க,
சுவர் மறையத் தோன்றும்
விளைநிலமும்
விடாமல் சீறும் புல்லும்
முழுநிலவில் ஏறும்

வாடைக்குப் பிடரி தந்து
ஓயாமல்
நிலவெய்தும் கடலாய்
தன் வேரிலாட.
பிளவுண்ட பிலமதில்
எழும்பும் பனிபூதம்
முன்னே தோள்வரை
தொங்கினும் வீங்கும்.

இவள் நடந்த வெற்றுணர்வும்
சுற்றத்தார் கதைக்கும்
பூதத்துக்கல்ல,
பெயர் கொண்ட
எழுத்துரு எதற்குமல்ல.
கனாமாந்தர் கிடந்த
புலமிதும் தாண்டியுடன்
தன் கண் காணாள்
கனாவும் மணலான தூசியும்.

தொலைந்த ஒளி
இவள் அடித்தாற்றின் அடியில்.
நெடுநல்வாடையும்
அழல்துளியாய் வாரிக்கிடத்தும்
இவளுடல்.
தன் பாரிய சீழ்க்கையுமடிக்கும்
இவள் செவிப்பிடரியில்.
கலந்த ஒலியும்
கிள்ளியெடுத்த பூசணிமுடியாய்
அள்ளும்
இவள் தலை.

இவள் பேருடல் எனும்
போதாப்பரிசுக்கும்
விரையும்
இதயத்துடிப்புக்கும்
பதிலென இவ்விரவும் தந்ததோ
தன் மலையின்
திமிலான
பாராமுக இரும்பே,
கரும்பாறையில் தொடும்
கரும்பாறையென அமைந்த
புல்வெளியே.

களஞ்சியம் பல.
மூடிய கதவின் பின்
அடைகாப்பும் பொரிப்பும் பல.
கறவைப்பசுக்கூட்டம்
புல்வெளியில்
மௌனப்பாறையாய் முழந்தாளிட
செம்மறியாட்டு மந்தையும்
தம் கம்பளிப்பற்றையுடன்
கல்நோக்கிக் கண்மயங்கும்
வளார் கூட்டி ஓயும்
பறவைக்கூட்டம் அணியும்

கருங்கற்பாறை பல.
இவற்றின் நிழலும்
இலைபோல் வேடமிட
நிலப்பரப்பு யாவும்
கண்கண்டும் மாறாமல்
ஒருகாலம்
மரச்சாறும் பாலும்
முன்னாண்ட
முற்றான
பழம்-உலகாய்

இவள்தன்
சிறுசூட்டின் விரைவை
உறிஞ்சிடப் போதுமாய்.
ஆயின்
திரும்புவாள்
பாரிய மலைதன் பாறையும்
கல்லொளியில் தன்னை
ஸ்படிகமாய் நொய்யாய்
நொறுக்கும் முன்.

-- Sylvia Plath, Hardcastle Crags, 1956.

இங்கே பிரிட்டனில் நான் இன்னும் போகாத இடம், யார்க்‌ஷயர் மேற்குப்பகுதியில் உள்ள பெயர்பெற்ற Hardcastle Crags.

இங்கே ஸில்வியா ப்ளாத் முதன்முதல் சென்றபோது எழுதிய கவிதை இது. தொல்காப்பியம் கூறும் திணைமரபில் வருவது போல, நிலப்பரப்பின் உள்ளுறை மற்றும் இறைச்சியாக ஒன்றை முன்வைத்து ஸில்வியா ப்ளாத் எழுதிய முக்கியக்கவிதை இது எனத் தெரிகிறது. அதேவேளை, மனிதரற்ற இயற்கை என்ற பழம்உலகை ஒருகணம் தொட்டுத் திரும்பும் ரொமான்டிக் அலகும் வருவதைக் குறித்துக்கொள்ளலாம்.

மீண்டும் இதே பகுதிக்கு ஸில்வியா திரும்பி எமிலி-ஷார்லட் ப்ரான்ட சகோதரிகளின் இல்லம் செல்கிறார். அப்போது எழுதிய கவிதைக்கு எமிலி ப்ரான்ட எழுதிய பெயர்பெற்ற Wuthering Heights நாவலின் பெயரையே சூட்டுகிறார். அந்தக்கவிதையைப் பிறகு முயல்கிறேன்.

0 கருத்துகள்:

பதிந்தவை