பதிவில் உள்ளனவற்றைச் சிற்றிதழ்-பேரிதழ்களில் வெளியிட விரும்புவோர் - நெடுநாள் நண்பர் எனினும் - முன்-அனுமதி பெற்றாக வேண்டும்.

நிலம் எழுத்து நீர் கலை தீ வரலாறு வளி செயல் விசும்பு சிந்தனை சூன்யம் மோனம் --- நாகார்ஜுனன் வலைத்தளம்

11.5.09

ஒப்பாரி - ஃபெடரிக்கோ கார்ஸியா-லோர்க்கா

காளைவிரட்டு வீரர் இஞ்ஞாசி சாஞ்செஸ் மெயாஸ் சாவுக்கு ஒப்பாரி

1. கொந்திய சாவு


மாலை மணி ஐந்து.
சட்டென வெண்போர்வை
கொணர்ந்தான் சிறுவன்.
கூடை எலுமிச்சையும் தயார்.
மாலை மணி ஐந்து.
மீதம் சாவு
சாவு மட்டுமென
மாலை மணி ஐந்து.

காற்றில் அகலும் பஞ்சும்
ஸ்படிகம் நிக்கல்
உலோகமென மேலும்
சிதறிடும் ஆக்ஸைடும்.
புறாவுடன் சிறுத்தை பொருத,
விரக்தியின் கொம்பாய்த்
தொடையும் வர,
கித்தாரின் கீழ்க்கம்பி இசைக்க,
அர்ஸெனிக் மணியுடன்
புகையும் கலக்க
மாலை மணி ஐந்து.

மூலை பலதில்
குழுக்கள் மௌனம் காக்க,
நெஞ்சம் நிமிர்த்தி்ய
காளை மட்டும் சுற்ற,
பனியின் வியர்வை வர,
களத்தில் அயோடின் மணக்க,
காயத்தில்
சாவும் முட்டையிட
மாலை மணி ஐந்து.

சக்கரப்படுக்கையில்
இவன் சவப்பெட்டி தயாரென,
எலும்பும் பலகுழலு மிசைக்க,
நெற்றியூடே காளையும்
துளைத்துச்செல்ல
மாலை மணி ஐந்து.

வலியில் அறையும்
பல்நிறமாய் மிளிர,
தூரத்தே அழுகும் விரணம்
பச்சை அரையின் ஊடே
பாலை-லில்லியாய் இனி வர,
காயம் பலவும்
ஒளிஞாயிறாய் எரிய
மாலை மணி ஐந்து.

கடிகாரங்கள் யாவிலும்
விதியாய்
மாலை மணி ஐந்து.
மாலை மணி ஐந்தின்
நிழல்.

2. சிந்திய குருதி

காணேன்!
மணலில்
இஞ்ஞாசியின் குருதி
காண விழையேன்
நிலவை
நீ
வரச்சொல்.

அதைக் காணேன்!
நன்கு திறந்த நிலவு.
நின்ற மேகம் பலதின்
குதிரை.
கனவு பலதின்
காளை பொருதரங்கும்
ஆற்றுப்பாலைமர
இடைச்சுவருடன்.

இதைக் காணேன்!
என் நினைவும்
மீளட்டும்,
நுண்வெண்மை
இத்தனை கொண்ட
முல்லை மலரை
நீ
வெதுவெதுப்பாக்கு!

இதைக் காணேன்!
பழம் உலகின் பசு
தன் சோக நாக்கை
மணற்சிந்திய
மூக்கிலான குருதியை
நக்க,
பகுதி சாவும்
பகுதி கல்லுமாய்
கிஸாண்டோவின் காளை பல
இரு நூற்றாண்டெனக்
கனைக்கும்
புவியை இழையாக்குவதில்
தெவிட்டி.

வேண்டாம்.
இதையும் காணேன்!
தன் தோளில் சாவையும்
ஏந்திப் படியேறும்
இஞ்ஞாசி.
இவன் விழைந்த
அதிகாலையும்
இல்லை இனி.

வீரப்புகழ் தேடுமவன்
கனவும் தன்னை வெருட்ட
அழகுடல் விழையுமவன்
எதிர்கொள்வதும் குருதி!

கேட்காதே.
இதைக் காணேன்.
அடுத்தடுத்து வலுக்குறைய
குருதி பீறிடக் கேட்கிலேன்.
அரங்கப் படியிருக்கையும்
ஒளிர வைத்து
என்னை அருகில் வா
என்று கதறிக் குரலெழுப்பும்
தாகமுற்ற திரள்தன்
பட்டுத்துணியும் தோல்வாரும்
தாண்டிச் சிந்தும்
குருதி பீறிடக் கேட்கிலேன்.
வேண்டாம்.
இதைக் காணேன்.

கொம்பும் அருகில் வர
மூடவில்லை இவன் கண்ணும்.
பயமுற்ற தாய்மாரோ
தம் தலை தூக்க,
பண்ணை பல தாண்டி
காற்றாய் ரகசியக்குரல் பல
விண்காளை பல நோக்கி எழும்.
வெளிறி மூடிய பனியில்
மேய்ப்போர் இவர்.

ஸெவில் இளவரசனாய்
இவனொப்ப
யாருமில்லை.
இவன் வாளொப்ப,
நிஜமாய்
இவன் இதயமொப்ப
வேறில்லை.
சிங்கம் பல நீந்தும்
ஆறுபோல்
இவன்
பொலிவும் வலிவும்.
பளிங்குச்சிலையாய்
இவன் எடுத்த
நடுநிலையும்.

அந்துலேசியப்பரப்பில்
ரோமாபுரிக்காற்று வருடும்
தலையுடையான்.
அறிவில், நுட்பத்தில்
செம்பஞ்சாய்ப் புன்னகைப்பான்.
வேல்வீச்சில் வலிவுடையான்.
தெண்பனியில் மெல்லியல்பான்.
பொருதரங்கில் பெருவீரன்.
விளைநிலத்தின் தோழன்.
விழாவில் ஒளிர்பவன்.
இருளின் இறுதியெனும்
வேல்வீச்சில் வெல்வான்!

ஆனால் இப்போதோ
முடிவற்று உறங்கும்
இவன் கபால மலர் திறக்கும்
பாசியும் புல்லும்
தம் நிச்சய விரல் கொண்டு.
இவன் குருதி பாயும்
சதுப்புநிலம் புல்வெளியென
வழி நெடுகப் பாடி
உறைகொம்பின் ஊடே வழுக்கி
ஆன்மாவின்றிப் பனியில் நடுங்கி
ஆயிரம் குளம்பும் தடுக்கி
கறுத்த நீள்சோக நாக்காய் நீண்டு
கடுந்துயர்க் குளம் அமைக்கும்
விண்மீன் பல ஒளிரும்
குடால்குவிவர் ஆற்றின் அருகில்.

ஓ, ஸ்பெயினின் வெண்சுவரே!
துயரின் கரும்காளையே!
இவனின் கடும்குருதியே!
நாளத்தின் வானம்பாடியே!
வேண்டாம்.
இதைக் காணேன்.

பூசைப்பாத்திரம் எதிலும் அடங்காமல்
மிடக்கெதிலும் விழுங்கப்பெறாமல்
உறையொளி எதிலும் குளிராமல்
பாட்டென்றி
வெண்-அல்லிதம் வெள்ளமின்றி
வெண் ஆடியேதும்
வெள்ளியில் மூட முடியாமல்
பாயும் இவன் குருதி.
வேண்டாம்!
இதைக் காணேன்.

3. கிடத்திய உடல்

வளைநீரும் உறையூசியுமன்றிக்
கனவும் துயருறும் நெற்றியே கல்.
கண்ணீர் வளைவால் கிரகம்பிறி்தால் வந்த
மரத்தால் காலம் தாங்கும் தோளே கல்.

அலையும் நோக்கிப் பாயும் வெளிர்நீர்
தம் மெல்லிய புதிராய்க் கரமும் நீட்டும்
கிடக்கும் கல்லில் விழாமல் தவிர்க்கும்
குருதியும் படாமல் கரமும் விரிக்கும்.

விதையும் முகிலும்
எலும்புக்கூட்டில்
வானம்பாடியும்
பிறைநிழல் காணும்
இரவில் ஓநாயும்
சேர்க்கும் கல்லோ
ஒலியும் பளிங்கும்
தீயும் தராமல்
தருமோ தருமோ
சுவரில்லா அரங்கம்
காளையுடன்
பொருதப் பொருத.

யாவும் முடிய,
கல்மீது கிடப்பான்
நற்பிறப்பாம் இஞ்ஞாசி.
சாவும்
வெளிர் கந்தகம்
முகத்தில் பூசக்காண்!
மினோட்டார் கருவிலங்கை
தலையில் வைக்கக்காண்!

யாவும் முடிய,
வாய் நுழையும்
மழை.
வீழ்ந்த மார்பினில்
விலகும்
பித்தங்கொண்ட காற்று.
உச்சியில் வெதுவெதுக்கும்
பனியின் கண்ணீர்
கழுவிய காதல்.

இவை கூறுவதும் யாது?
இங்கே
துர்நாற்ற மௌனம்
கவியக் கிடந்து
மெலிதாய் மறையும்
இவனுடலின்
வானம்பாடிய வடிவத்தூயதை
ஆழம்காணாத் துளையும்
நிரப்பக் காண்போம்.

முகத்துணி இடுவதும் யார்?
நிஜமல்ல இவர் கூற்றும்.
யாரும்
இங்கே பாடார்.
மூலையமர்ந்து அழார்.
போர்முள் பிடுங்கார்.
படநாகமும் பயமுறுத்தார்.
காத்திருக்கும் வாய்ப்பின்றி
இவனுடல்
காண
வேண்டும் கண்ணிரண்டும்.
வேண்டாம் வேறேதும்.

கறார்க்குரலார் எங்கே?
காண வேண்டும்.
குதிரையடக்கி
ஆறும் ஒடுக்குவோர் எங்கே?
காண வேண்டும்.
ஞாயிறும் எரிகல்லும் கொண்ட
வாயால் இசைக்கும்
எலும்புக்கூட்டாரையும்
காண வேண்டும்.

கல்முன்னே
நரம்புநாளமும் அறுந்த
இவனுடல் முன்னே
காண வேண்டும்
இவரைக் கண்டு
சாவு கழற்றியிட்ட
இத்தலைவனுக்கு
வழி யாதென்று
கேட்கவும் வேண்டும்.

இனிதே மூடுபனியும்
ஆழ்கரையும் கொண்ட
ஆறுபோல் ஒப்பாரியும்
காட்டட்டும் இவரெனக்கு.
ஆங்கே
காளையின் இருமூச்சும்
கேளாமல் தனையிழக்க
எடுத்தும் செல்வேன்
இஞ்ஞாசியின் உடலை.

இளமைப்பருவமதில்
சோகம் மௌனமும்
காட்டிய காளையெனும்
வட்ட நிலவொன்றின்
காளைப் பொருதரங்கில்
கேளாமல் தனையிழக்க
எடுத்தும் செல்வேன்
இஞ்ஞாசியின் உடல்.

மீன்பாடல் நிறையாத
இரவுப்பொழுதெனில்
உறைபுகை வெண்புதரில்
கேளாமல் தனையிழக்க
எடுத்தும் செல்வேன்
இஞ்ஞாசியின் உடல்.

கைக்குட்டை வைத்தும் யான்
மறைக்கிலேன் இவன் முகம்.
தன் உறக்கத்தில்
கடலும் சாகும்!
இஞ்ஞாசி!
நீ விழைந்தெடுத்த சாவில்
நீ பழகப்போகாயோ!
வன் சூட்டுறக்கம் உணருமுன்னே
நீ உறங்காயோ, பறக்காயோ!

4. அற்ற ஆன்மா

எந்நாளும் செத்தாய் நீ.
காளையும் ஃபிக் மரமும்
இல்லத்தில் செல்லெறும்பும்
குழவியும் மதியமும்
குதிரையும் யாருமறியார்
எந்நாளும் செத்தாய் நீ.

கல்லான தோளறியார்
எந்நாளும் செத்தாய் நீ.
கறுப்புப்பட்டு தானறியார்
மூடிவிட்ட இடத்தில் நீ.
நினைவின் மௌனமறியார்
எந்நாளும் செத்தாய் நீ.

சிறுவெண் நத்தையுடன்
பனிமூட்டத் திராட்சையுடன்
கூட்டாய்ப் பன்மலையுடன்
இலையுதிரும் காலத்தினும்
யாருமுன் கண்நோக்கார்
எந்நாளும் செத்தாய் நீ.

செத்தோர் புவியின் யாவர்
உயிர்போய்க் குவியும் நாயென
செத்தும் யாம் மறந்தோர்
எந்நாளும் செத்தாய் நீ.

யாருமறியார் எனினும்
வருங்காலம் கண்டேனென்
பாட்டுடைத்தலைவன் நீ.
பாடுவேன் எந்நாளும்
உன் புகழும் உன் அருளும்
அறிவுனதும் பெருமுதிர்வும்
சாவென்ப உன் பசியும்
வாயென்ப அதன் சுவையும்
ஒருகாலம் நீ பயின்ற
வீரநடையின் சோகமும்.

இத்தனையும் நிஜமாய்
சாகசத்தில் வளமாய்
உன்னையும் போலுமோர்
அந்துலேசியன் பிறக்கவும்
இனியுண்டு எக்காலம்.

முணங்கும் சொல்கொண்டு
இவனிசையும் பாடுவேன்
ஒலிவ மரம்பல ஊடே
துயர்காற்றும் நினைவெனதாய்.

- Federico Garcia-Lorca, Llanto por Ignacio Sanchez Mejias.
ஸ்பானிஷ் மொழியிலிருந்து தமிழாக்கம் - நாகார்ஜுனன்,
பாப்லோ பிக்காஸ்ஸோவின் காளைவிரட்டுப் படங்களுடன்.

ஸ்பானிஷ் செம்புலத்தில் உறங்கும் கவிஞர் - ஃபெடரிக்கோ கார்ஸியா-லோர்க்கா பற்றி
அந்தோனியோ மச்சாதுவின் இறுதிக்கவிதை

0 கருத்துகள்:

பதிந்தவை