இன்று மே மாதம் பத்தாம் நாள் பாரீஸ் நகரில் அமரர் உயிர்நிழல் கலைச்செல்வன் அவர்களின் நினைவு நாளை ஒட்டிய நிகழ்வில் இடம்பெறும் என் கட்டுரை.
அன்புமிக்க நண்பர்களுக்கு,
வணக்கம். புலம்பெயர்ந்த தமிழ்மக்களின் சார்பில் தீவிரமாக இயங்கிய அமரர் கலைச்செல்வனின் நான்காம் ஆண்டு நினைவுநாளை ஒட்டி நீங்கள் இங்கே கூடியிருக்கிறீர்கள். மனிதகுல வரலாற்றில் அறிஞர்களும் வெகுமக்களும் இணையும் விடுதலைக்கான சந்தர்ப்பங்கள் வெகு அரிதாகவே நடப்பவை. இரண்டு நூற்றாண்டுகளுக்கும் முந்தைய ஒரு காலகட்டத்தில் இப்படி அறிஞர்களும் வெகுமக்களும் இணைந்திருக்கிறார்கள். சுதந்திரம், சமத்துவம், சகோரத்துவம் ஆகிய முழக்கங்களை முன்வைத்து மனிதகுல வரலாற்றில் பெரும் மாற்றத்துக்கு அடிகோலியிருக்கிறார்கள். தன் புதல்வர்களின் குருதியையும் இப்படி வரலாற்றில் படியவிட்ட நகரமான பாரீஸில் நீங்கள் கூடியிருக்கிறீர்கள்.
ஆனால், நானோ, இந்தக்கூட்டத்தில் நேரே வந்து உரையாற்ற முடியாத நிலையில் இருக்கிறேன். காரணம், என்னுடையது இந்தியக் கடவுச்சீட்டு. நான் வசிக்கும் லண்டனிலிருந்து கடல்தாண்டி ஐரோப்பிய நாடுகளுக்கு வரவேண்டுமென்றால் அதற்கு ஒருமாதம் முன்பிலிருந்தே திட்டமிட்டுச் செயல்பட்டாக வேண்டும். அப்போதுதான் எனக்கு நுழைவு அனுமதி கிட்டும். அது உடனே சாத்தியமற்ற நிலையில் - நான் உங்களிடையே வர இயலாத நிலையில் - இப்போது தமிழ்-எழுத்தாக மாத்திரம் உங்களைச் சந்திக்கிறேன்.
ஒருவேளை இந்தக்கூட்டத்துக்கு நான் வர முடிந்திருந்தாலும் நீங்கள் அனைவரும் பேசுவதைக் கேட்கும் நிலையில் இதோ இந்த அரங்கின் இறுதிவரிசையில் அமர்ந்து, அடையாளம் ஏதுமில்லாமல் காணாமல் போவதையே விரும்பியிருப்பேன். இன்று துயர் சூழ்ந்திருக்கிற நேரத்தில் நீங்கள் யாவரும் நிறையப் பேச வேண்டும், அதை என்னைப் போன்றவர்கள் அமர்ந்து கேட்க வேண்டும். அப்படித் தொடர்ந்து செய்ய இயலவில்லையென்றால் நாமிரு தரப்பும் சரி, நம்மை ஒத்தவர்களும் சரி, நம்முடன் தொடர்பு கொண்டவரான தமிழ்பேசும் மக்களின் துயர நிலையை மனத்தில் இருத்தி முதலில் ஓங்கி அழ வேண்டும் என்றே தோன்றுகிறது. தமிழ்பேசும் மக்களின் நிலையில், அகத்திலும் சரி, புறத்திலும் சரி, இவர்கள் உயிராற்றல் முடக்கப்பெற்றும் கொலையையும் தற்கொலையையும் எதிர்கொண்டும் நிற்கிறார்கள். நம்முடைய கனவுகள் யாவையும் தாண்டி இந்தக் கொலையும் தற்கொலையும் நம்முடைய எதிர்-கனவுகளாக நனவாகிக் கொண்டிருக்கும் காலத்தில்தான் இன்று நாம் சந்திக்கிறோம்.
தென்னகத்தோர் என்ற வகையில் கடல்கோள் என்ற இயற்கையின் சீற்றமென்பது நமக்குப் புதிதா? புதிதல்ல. ஓராயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை என வந்தாலும் நம் கூட்டுநினைவில் தொன்மமாகத் தங்கிவிட்ட ஒன்று, கடலின் சீற்றம். இன்றுள்ள சித்திரை நிலவும் எத்தனையோ காலத்துக்கு முன்பாக முழுதாக எழுந்தபோது, மருத-நெய்தல் புலத்தில் வாழ்ந்த மக்கள் மழை வேண்டித் தனக்கு விழா எடுக்காமல் இருந்தார்களே எனச் சீற்றங்கொண்டு தாக்கினான் இந்திரன் என்பது, ஒரு தொன்மம். அதேபோல, போர் என்ற வரலாற்றின் பித்தமும் அதன் வழி தோன்றும் புலக்குலைவும்கூட பலருக்கும் புதிதல்ல. உங்களுக்கு மாத்திரமல்ல, ஈழம் என்ற இலங்கைத்தீவுக்கும் அங்கு வாழும் மக்கட்தொகுதிகளுக்கும் இவை புதிதல்ல. ஏன், தமிழ், சிங்கள, இஸ்லாமிய, இன்னபிற சமுதாயத்தினர் யாவர்க்குமே இவை புதிதல்ல.
இருந்தாலும் இந்தப் புதிய நூற்றாண்டில், இயற்கையின் சீற்றமும் போரெனும் பித்தமும் மீண்டும் நம்மைப் புதிதாகத் தாக்கியிருக்கின்றன. நான்காண்டுக்கும் முன்பு நத்தார் நாள் கழிந்த நிலவற்ற இரவில் கீழ்த்திசை எரிமலையும் வெடித்துச் சீறிய கடலில், அந்த இழப்பில், ஒன்றானோம். அந்தத் தாக்குதல் கழிய, போரென்னும் பித்தமோ இன்னும் நம்மைத் தாக்கிக்கொண்டிருக்கிறது. ஆக, சாவின் முந்தைய சகாப்தங்களிலிருந்து ஏதும் கற்காத நிலை நமக்குத் தோன்றியிருக்கிறது. சாவு என்ற கொடூரமான சடங்கில் மீண்டும் அழியும் நிலையில், நம் மக்களின் வாழ்வையும் சாவையும் யார்யாரோ தீர்மானிக்கும் அவல நிலையில் - இன்று தற்கால நிகழ்வுகளை வரலாற்றின் நிழலில் வைத்து ஆராய்கிற மோசமான, சோகமான செயலில் ஈடுபடும் அவல நிலையில் - நின்றுகொண்டிருக்கிறோம்.
சென்ற இருபதாம் நூற்றாண்டு என்பதன் அதீதத்தன்மை என்ன? அது, முன்னெப்போதையும் விட, உலகுதழுவும்-பொருட்கள் (objets du monde) பலதை - குறிப்பிட்ட சில பண்புகளுடன் - புதிதாக உருவாக்கியிருப்பதாகத் தெரிகிறது. சென்ற நூற்றாண்டை அப்படித்தான் ஃப்ரெஞ்சு அறிஞர் மிஷெல் ஸெர் (Michel Serres) காண்கிறார். குறிப்பாக வேகத்துக்காக ஏவுகணையும் செய்மதியும், அழிவுக்கென அணுகுண்டு போன்றவையும், விரியும் வெளிக்காக இணையமும், அழிவான வருங்காலத்துக்கு என அணுக்கழிவும் என்று இந்த உலகுதழுவிய-பொருட்கள் பலதை முன்வைத்துக் காட்டுகிறார் மிஷெல் ஸெர். இவற்றுடன் இன்னொரு பொருளையும் குறிப்பிட்டுக் கூறுகிறார். அது, குறிப்பிட்ட சிந்தனை என்ற பொருள் - அப்படியே தொடரும் பொருள். ஆக, சென்ற நூற்றாண்டின் புதுப்பொருட்கள் பலவும் புதிய உலகுதழுவும் பண்புகளைக் கொண்டிருக்கையில், சிந்தனை என்ற பொருள் மாத்திரம் உலகுதழுவும் நிலையிருந்தாலும் அதற்கு முந்தைய காலகட்டத்தையே சார்ந்திருக்கிறது, அதாவது பண்டைய பகுதிசார்ந்த தத்துவங்களின் வரையறையில் அமைந்தே தொடர்கிறது என்கிறார் மிஷெல் ஸெர்.
குறிப்பாக, உயிரையும் சாவையும் பிரிக்க விழையும் இந்தச்சிந்தனை அதில் வெற்றி கண்டிருக்கிறதா என்று கேட்டால் இல்லை என்றுதான் கூற வேண்டும். இன்று நம்முடைய உயிர்மீதான உரிமை நமக்கிருக்க வேண்டும், சாவு மீதான அதிகாரம் அரசுக்கும் ஆயுதம் தாங்கிப் போராடும் இயக்கங்களுக்கும் இருக்கிறது என்ற பழக்கத்தில் நாம் சிந்திக்கிறோம். இந்தச் சிந்தனையை சற்றே மாற்றி, கேள்வியையும் பதிலையும் புதிதாகப் போடலாம். அதாவது, உயிர்மீதான அதிகாரம் என்பது யாருக்கு? சாவு மீதான உரிமை என்பது யாருக்கு? என்று இந்தக் கேள்வியை மாற்றிப் போட்டுப் பார்க்கலாம். 
ஃப்ரெஞ்சுப்புரட்சிக்கு முந்தைய காலகட்டத்தில், இந்த உயிர்மீதான அதிகாரமும் சாவு மீதான உரிமையும் இருந்தது அரசனுக்கே எனறு தெளிவாகச் சொல்லிவிடலாம். அதாவது குடிமக்களின் உயிர்மீதான அதிகாரமும் சாவைக் கோருகிற உரிமையும் அரசனுடையவையாக இருந்தன. ஃப்ரெஞ்சுப் புரட்சி கொணர்ந்த அந்த மாற்றத்தின்படி, அரசன் என்பவன் கொலை செய்யப்பெற்றான், வரலாற்றுக்குப் பலியாகி வரலாற்றிலிருந்தே துடைத்தழிக்கப்பட்டான். மனித உரிமைகள், குடிமக்களின் உரிமைகள் (Les droits de l'homme et du citoyen) என்பன வரையறுக்கப்பட்டன. அரசனுக்கு முன்பிருந்த உயிர்மீதான அதிகாரம் என்பது, மனிதனின் இயல்பான உரிமையாக, குடிமக்களின் உயிர்வாழும் உரிமையாக மாறியது, அரசன் முன்பு வைத்திருந்த சாவைக்கோரும் உரிமை என்பது உருமாறி, நவீன அரசு என்பது தோன்றியது. அது, தன்னுடைய குடிமக்கள் உயிர்வாழ்வதற்கு வேண்டி பிறரைக் கொல்வதற்கான ஆற்றலை வளர்த்துக்கொள்ளும் உரிமையைத் தனக்கு வழங்கிக்கொண்டது. இதுதான் நவீன தேச அரசின் தோற்ற அலகுகள் தொடர்பான அடிப்படை-முரண்பாட்டின் முக்கிய அலகு. இந்த முரண்பாட்டு-அலகின் அடிப்படையாக இயங்குவதை, ஒருவித மறைமுக அணி (a hidden matrix) எனலாம். இதைத்தான் மிஷெல் ஃபூக்கோ (Michel Foucault), ஜியோர்ஜியோ அகம்பென் (Giorgio Agamben) போன்ற முக்கிய அறிஞர்கள், தம்முடைய ஆய்வுகளில், விளக்கி எழுதுகிறார்கள்.
நாம் மேலே கண்ட விடுதலை என்ற சந்தர்ப்பம், அதற்கான உணர்வு, வரலாறு ஆகியவையும் இவற்றின் பாற்பட்டவையே. பதினெட்டாம், பத்தொன்பதாம் நூற்றாண்டுகள் அன்றி, இதே சிந்தனைதான் இன்றும் அரசியல் அரங்கில் இன்றும் தொடர்கிறது, இது போதாது என்பதே மிஷெல் ஸெர் முன்வைக்கும் வாதம். இதற்கான உக்கிர நிகழ்வுகளாக சென்ற நூற்றாண்டில் ஐரோப்பாவிலும் பிற கண்டங்களிலும் நடந்தேறிய போர்களும் அழிவுகளும் ஏன் புரட்சிகளும் கூட நம்முன் நிற்கின்றன. இவற்றின் அழியாச்சுவடுகளாக இன-அழிப்பின், புலக்குலைவின் மற்றும் வதைமுகாம்களின் வரலாறுகள் நம் கண்முன் புலமாக விரிந்துகொண்டேயிருக்கின்றன. இரண்டு உலகப்போர்கள் தவிர பால்கன் வட்டகையில் பத்தாண்டுகள் முன்பு நடந்துமுடிந்த போர்களையும் சேர்த்துத்தான் இங்கே கூறுகிறேன்.
இந்தப் பிரச்னையை சற்றே விரிவாகப் பார்க்கலாம்: தேசம் அல்லது நாடு என்பதற்கான நேரடியாகத் தெரியும் அலகுகள் யாவை? Nation என்ற சொல்லுக்கான வினையின் வேரைத் தேடினால், nascere என்ற லத்தீன் சொல்லை அடைகிறோம். அதாவது பிறத்தல் என்ற வினை. (ஏசுநாதர் அவதரித்த கிறிஸ்துமஸ் நாளை நத்தார் திருநாள் என்று அழைப்பதிலும் இந்த வினை தொக்கி நிற்கிறது). ஆக, பிறப்பு, வழங்கும் மொழி அல்லது வழக்குகள்-வெளிப்பாடுகள், வாழும் புலம் ஆகியவற்றை வரையறுக்கும் ஒழுங்குதான் இது. இந்த ஒழுங்கு குறிப்பிட்ட ஒரு புலம் சார்ந்த மனிதர்களுக்கான - அதாவது தன் குடிமக்களுக்கான - உயிர்வாழும் உரிமையை உறுதிசெய்ய வேண்டும், அதற்காக தானற்ற பிறரைக் கொல்வதற்கான அதிகாரத்தை, ஆற்றலை வளர்த்துக்கொள்ளும் உரிமையைக் கொள்ள வேண்டும். இந்த இரண்டையும் பிரிக்க முடியாமல் வைத்திருப்பதுதான், இந்த நவீன தேச-அரசு என்பதை உணரவேண்டும்.
அதாவது, குறிப்பிட்ட புலம் என்ற தீர்மானமான வரையறுப்புக்கும் அரசு என்ற தீர்மானமான ஒழுங்குக்கும் இடையிலான உறவின் அடிப்படையில் இயங்குவது நவீன தேச-அரசு. இந்த தேச-அரசு என்பது, தான் தோன்றிய காலகட்டத்திலிருந்து ஒரு நூற்றாண்டுக்குள்ளாகவே, இப்படியான ஒரு நிரந்தரமான நெருக்கடியைச் சந்திக்கிறது என்கிறார் ஜோர்ஜியோ அகம்பென் என்ற அறிஞர். இதை இவர் ஓர் அசாதாரண-அரசுநிலை (State of Exception) என்கிறார். அதாவது, உயிர்வாழ்தல் என்பதன் முகாமைத்துவத்தை அரசே தன் நேரடிப்பணியாக எடுக்கும் நிலையில், அரசானது தான் வைத்திருக்கும் அசாதாரணக்கால அதிகாரங்களை இயல்பானவையாக மாற்றுவதே இது. அப்போது, பிறத்தல், வழங்கும் மொழி அல்லது வழக்குகள்-வெளிப்பாடுகள், வாழும் புலம் ஆகிய மூன்று அலகுகளைத் தாண்டி இன்னோர் அலகும் இங்கே மறைமுகமாகத் தோன்றிவிடுகிறது: அதுதான் முகாம் என்ற களம் என்கிறார் ஜோர்ஜியோ அகம்பென். அதாவது நவீன தேசிய-அரசு என்பதன் நான்காம் அலகாக இயங்குவதே இந்த முகாம்; இந்த முகாம்களின் வாழ்வோர்மீது கொடுமைகள் நடப்பதற்கான அரசியல்-நீதிபரிபாலன அடிப்படையை அரசு என்பது இப்படித்தான் எழுப்புகிறது. அதாவது, இவர்கள் அம்மண-உயிர்நிலையில் இருப்பவர்கள் என்கிறார் அகம்பென் (அகம்பெனின் nuda vita என்ற இத்தாலிய மொழிப் பிரயோகத்தை அம்மண-உயிர்நிலை என்றே இங்கே தமிழாக்குகிறேன்). இவர்களுக்கு வெற்று மனிதாபிமானம் தவிர வேறேதும் கிட்டாத நிலை தோன்றுகிறது, இவர்கள் மீது கொடுமை நடப்பதும் நடக்காததும் ஆங்காங்கே உள்ள அதிகாரிகளைப் பொறுத்தது, ஆனால் பிரச்னை மனிதாபிமானம் இருக்கிறதா, இல்லையா என்பதல்ல, மாறாக, உலகுதழுவிய புலங்குலைந்த களமாக முகாம் என்பது இயங்கிவருகிறது, இதுவே தேச-அரசு என்பதன் மறைமுக நான்காம் அலகு என்கிறார் அகம்பென்.
இலங்கைத்தீவில் தமிழ்மக்களின் ஒருகாலக்கனவாக முகிழ இருந்த விஷயம், இன்று எதிர்-கனவான முகாமாக, புலக்குலைவாக, உலகெங்குமுள்ள தமிழ்பேசும் மக்களின் அகக்குலைவாக மாறியிருக்கிறது என்பதை ஏற்கனவே சுட்டிக்காட்டியிருக்கிறேன். அதாவது நவீன தேசம் என்பது முகிழாப்பிறப்பு (birth which is arrested, la naissance (s)arrêtée). அதன் நான்காம் அலகாகிய அகதி-முகாம் என்பதாக, தடுப்பு-முகாம் என்பதாக, ராணுவ-முகாம் கையகப்படுத்தல் என்பதாக, இன்னும் பலதாக, தான் முகிழாமலேயே, பிறந்திருக்கிறது. இதைத்தான் இலங்கையில் வடக்கிலும் கிழக்கிலும் இன்னும் சில இடங்களிலும் காண்கிறோம். இதன் தீவிர வடிவம், தடுப்பு-முகாம். இந்த எதிர்கனவுக்கான வழி போர், போருக்கான வழி தற்கொலைச்சடங்கு அல்லது கொலைச்சடங்கு, இத்தகைய சடங்குக்கான வழி மறம், மறத்துக்கான வழி எதிர்ப்பக்கத்தின் கொடூர அழிப்பு அல்லது தன்பக்க அறப்பிறழ்வு என ஒரு நெடும்பாதையை, ஏன் நெடுஞ்சாலையையே இங்கே காண்கிறோம், இதில் யார்யார் எங்கெங்கே எந்தெந்த அளவில் எப்படியெப்படிப் பங்குபற்றினர் என்பதையே நீண்ட உரையாடலாகப் நம்மில் பலர் செய்துகொண்டேயிருக்கிறோம். குறிப்பாக, தமிழ்மக்களின் வாழ்வைக் காப்பாற்றுவதும் அவர்களின் சாவைக் கோருவதுமான உரிமை தமக்குத்தான் எனக் கூறும் விடுதலைப்புலிகளின் தலைமைத்துவத்தார், இவற்றைச் சாத்தியப்படுத்த தற்கொலை மற்றும் கொலை இரண்டையும் நிகழ்த்தினார்கள் - அதாவது பழங்காலத்திலிருந்து தம்மையும் பிறரையும் பலி, தியாகமாகத் தொடரும் சடங்கான ஒன்றுடன் நவீனத்துவப் போர்முறையின் திடீர்த்தன்மையையும் கலந்து புதியதொரு சடங்காக்கம் ஒன்றை நிகழ்த்தினார்கள். எனவே அவர்களைச் சுற்றித்தான் அதிகம் பேசுகிறோம். ஆனால் அப்படிச் செய்துகொண்டேயிருப்பதன் மூலம் இந்த நெடும்பாதையில் எல்லை பற்றிய ஆய்வை இந்தத் தென்னாசிய அளவில் வைத்துக் காணத் தவறிவிடுகிறோம்.
இப்போது இந்தப்பிரச்னையைத் தென்னாசிய அளவில் விரித்து நோக்கலாம்: தென்னாசியப் புலங்களுக்கென பிரத்தியேக அலகுகள் சில உண்டு. எடுத்துக்காட்டாக, மொழியிலும் சமூகச்செயல்பாட்டிலும் தொடர்வது, பலதள வழக்கு அல்லது பலதள வெளிப்பாடு. தவிர, இன்னொரு பிரத்தியேக அலகு, இந்த முகிழாப்பிறப்புக்கான விரிந்த களம்.
எடுத்துக்காட்டாக, இந்தியா-பாகிஸ்தான் எனப் பிரிந்த காலத்தில் இதே களமுண்டு; அதாவது அறிஞர்களும் அரசியல்-சமூக ஆர்வலர்களும் பங்கேற்ற அரசியல்-நிர்ணய சபை என்ற மன்றம் பிரிவினைக்கு முன்பு அரசியல்-சட்டத்தை வரைந்துவிட்டது எனினும் பிரிவினைக்குப் பிறகே அதை அரசியல்-சட்டமாக ஏற்றது. அப்படி ஏற்ற சட்டத்தில் பிரிவினைக்காலத்தின் கொடூரங்கள் மற்றும் புலக்குலைவு பற்றிய அசாதாரண மௌனம் நிலவுவதைக் கவனிக்கலாம். அதேபோல தென்னாசிய அளவில் காலனியக்காலத்தில் நடந்தேறிய புலக்குலைவு பற்றியோ காலனிய-எதிர்ப்புப் போராட்டத்தின் போதான இழப்புக்கள் பற்றியோ அரசியல்-சட்டம் அசாதாரண மௌனத்தைக் கடைப்பிடிப்பதைக் கவனிக்கலாம். அரசியல் நிர்ணய-சபையின் விவாதங்களில் இவை ஓரளவு இடம்பெற்றிருக்கக்கூடும் என்றாலும் அதன் இறுதி வடிவத்தில் இதற்கான அறிகுறி இருப்பதில்லை. சொல்லப்போனால், இன்னும் நிறையப் பிரச்னைகளை எடுத்துக்காட்ட முடியும்: அன்றே அரசியல்-களத்தில் முக்கியத்துவம் பெற்ற தாழ்த்தப்பட்டோர், ஹரிஜன் (தலித்) போன்ற சொற்கள் காணப்படுவதில்லை. இந்தச்சொற்களுக்குப் பின்புலமான வரலாற்றை அரசியல் சட்ட வரைவுகள், கள-நீக்கம் செய்கின்றன - அதாவது, இவற்றை அரசியல் அரங்குக்கு மாத்திரமே உரித்தானவையாக ஆக்குகின்றன எனலாம். இப்படி நிறையச் சொல்லலாம்: இந்திய அரசியல்-சட்டத்துக்குப் பிறகு தோன்றிய வங்கதேசத்தின் அரசியல் சட்டத்திலும் இதே பிரச்னை நீடிக்கிறது. அந்த நாட்டை உருவாக்கிய போராட்டத்தை முன்னெடுத்த முக்கியத் தலைவரின் படுகொலையை விசாரிப்பதற்கான இடம் கூட அங்கே இல்லை... பாகிஸ்தானில் இதேபோல நிறைய பிரச்னைகள்... நேபாளத்தில் அரசியல்-சட்டமே எழுத இயலாத நிலை தொடர்வதைக் கவனிக்க வேண்டும். இன்றுவரை இந்த மௌனத்தின் விளைவுகளே அரசியலில் பங்காற்றி வருகின்றன.
இதையெல்லாம் இங்கே ஏன் கூறவேண்டும்? தேச-அரசு என்பதன் முகிழாப்பிறப்புகான அலகுகள் என்பது இலங்கைத்தீவுக்கோ, ஈழத்துக்கோ மாத்திரம் பிரத்தியேகமானவையல்ல. தென்னாசியப்பரப்பில் வசிக்கும் பல்வேறு மொழிபேசும் மக்கட்தொகுதிகள் தம்முடைய கூட்டு வரலாற்றை மாற்றி எழுத முற்படும் ஒவ்வொரு காலகட்டத்திலும் இது நடக்கத்தான் செய்கிறது என்பதைச் சுட்டத்தான் இதைக் கூறுகிறேன். அதாவது, இவை யாவற்றுக்கும் இந்த எதிர்-கனவாக்கமும் முகிழாப்பிறப்பும் சாத்தியப்பாடுகள்தாம். அடிக்கடி தலைமைத்துவம் பிறரைப் பலியெடுப்பதும் அல்லது அதனைப் பிறர் பலிகொடுக்கும் சடங்காக்கத்தை நிகழ்த்துவதும் இதே முகிழாப்பிறப்பின் அறிகுறிகள்தாம்.
இன்று எதிர்-கனவாம் துயர் நம்மைச் சூழும் இந்நேரத்தில் என்னதான் நடக்கிறது? இந்துமாக்கடலின் ஊடாக நடக்கும் புவிசார்-வர்த்தக அரசியலில் பங்கேற்கும் வல்லரசுகள், அதேவேளை அங்கே நேரடியாக மோத விழையாத, மோத முடியாத நிலையில் இருக்கின்றன. இவை ஒவ்வொன்றும், இலங்கை அரசில் தாக்குதலுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவி வருகின்றன. இதில் நிதியுதவி, ராணுவ உதவி, தளவாட உதவி யாவும் அடக்கம். இந்தியா, சீனா, பாகிஸ்தான், ஈரான், லிபியா, அமெரிக்கா, மேற்குலக நாடுகள், பன்னாட்டு நிதி அமைப்புக்கள் உள்ளிட்டவற்றின் உதவி இருப்பதாகவே கூறலாம்.
இந்த நிலையில், தமிழ்மக்களின் உயிர்மீதான அதிகாரத்தை, இவர்களின் வாழ்வையும் சாவையும் ஒருங்கே தீர்மானிக்கும் உரிமையில் தனக்கிருந்த பங்கை, இன்று இலங்கை அரசு முற்றான ஒன்றாக (absolute) மாற்றும் நிலையை எய்திவிட்டிருக்கிறது. வன்னிப்பகுதியில் இயங்கும் முகாம்கள் தவிர, யாழ்குடாநாட்டின் திறந்தவெளி சிறைச்சாலைகள், கிழக்கு மாகாணத்தில் கடத்தல்கள்-கொலைகள், கொழும்பு நகரக் கெடுபிடிகள் என இந்த அதிகாரத்தையும் உரிமையையும் பலவாறாக வகைப்படுத்த முடியும். இதில் முக்கியமாக நாம் காண வேண்டியது, இந்திய அரசின் பங்கு. கடந்த கால்நூற்றாண்டாகத் தமிழ்மக்கள் அனுபவித்துவரும் சோகம் இந்திய அரசுக்கும் அரசியல் அரங்குக்கும் பெரும் பொருட்டல்ல, இந்த மக்களின் வாழ்வையும் சாவையும் தீர்மானிக்கவல்ல சக்தியென்பது, அறுதியாக, இலங்கை அரசு மாத்திரமே என்ற நிலைப்பாட்டை மீண்டும் உறுதியாகக் காட்டியிருக்கிறது இந்திய அரசு. அதாவது, இலங்கை அரச-அமைப்புடன் எதிர்காலச்சமன்பாட்டுக்கு வரவல்ல சக்திகள் மாத்திரமே இந்தப்பிராந்தியத்தில் நிலவ முடியும் என்பது இந்திய நிலைப்பாட்டின், ராணுவ உதவியின் ஆழமான அடிப்படை. 
ஆக, தான் எத்தனை மனிதாபிமான உதவிகளைச் செய்தாலும் சரி, இலங்கை அரசுக்குத் தான் அளித்துவந்துள்ள கதுவிகள் (ராடார்கள்), கடற்படைக் கண்காணிப்பு, விமானிகளுக்குப் பயிற்சி உள்ளிட்ட எத்தனையோ உதவிகளைச் செய்திருக்கும் இந்திய அரசு இவற்றையெல்லாம் இனியும் மறுத்துக்கொண்டிருக்க முடியாது. அதேவேளை இந்திய அரசின் இந்த நிலைப்பாட்டின் அடிப்படையைக் குலைத்து மாற்றும் சக்தி தமிழ்நாட்டின் அரசியல் அமைப்புக்கு இருந்திருக்கவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். ஈழத்தமிழ் மக்களின் பிரச்னைகளென்ன, கடந்த கால்நூற்றாண்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் சுமார் ஐநூறு பேர் வரை இலங்கைக் கப்பற்பட்டையின் தாக்குதல்களுக்கு ஆளாகி உயிர்விட்டிருப்பதைக்கூட முன்வைத்து இந்திய அரசின் உத்திகளை மாற்ற முடியாத நிலையில் இருந்துவருகிறது, தமிழ்நாட்டின் அரசியல்-அமைப்பு.
இந்த நிலையில் இந்திய அரசின் இந்த நிலைப்பாட்டின் மீதான தமிழ்நாட்டு மக்களின் தற்போதைய சீற்றத்தையெல்லாம் போராட்டங்கள், தேர்தல்-முறை, ஆட்சி மாற்றம் என்று சடங்காக்கம் செய்ய வேண்டிய இக்கட்டில்தான் தமிழ்நாட்டு அரசியலார் மற்றும் திரைத்துறையினர் சிக்கியிருக்கிறார்கள். அதாவது, இந்திய அரசின் வல்லரசு முஸ்தீபுகளுக்கான தண்டனையையும் பரிசையும் மாறிமாறிப் பெற வேண்டிய நிலையில் நிற்பது இவர்களுடைய அதிகாரத்தின் எல்லை எனலாம். ஆனால், இதன் விளைவாக, ஒருபுறம் இலங்கை அரசின் சாவு-எந்திரத்தின் தீவிரம் மட்டுப்படவில்லை, தமிழ்மக்களின் வாழ்வு மீதான அதன் அதிகாரமும் மட்டுப்படவில்லை.
ஆக, குண்டுகளின் சப்தம் இன்னும் ஓயவில்லை, ஒருக்கால் அது ஓயும்போது புலக்குலைவும் கண்காணிப்பின் தீவிரமும் குறையும் வாய்ப்பும் இருப்பதாகத் தெரியவுமில்லை என்று வருந்திக்கூறி உங்கள் சோகத்தில் பங்கேற்க என்னை அனுமதிக்குமாறு விழைகிறேன்.
நாகார்ஜுனன்
படங்கள்
ஃப்ரெஞ்சுப் புரட்சியாளர் ராபெஸ்பியருக்கு மரணதண்டனை
கொலை நிகழ்ந்த சித்திரையின் முழுநிலவு
கொலைப்புலமாம் முல்லைத்தீவின் கடற்கரை.
பதிவில் உள்ளனவற்றைச் சிற்றிதழ்-பேரிதழ்களில் வெளியிட விரும்புவோர் - நெடுநாள் நண்பர் எனினும் - முன்-அனுமதி பெற்றாக வேண்டும்.
நிலம் எழுத்து நீர் கலை தீ வரலாறு வளி செயல் விசும்பு சிந்தனை சூன்யம் மோனம் --- நாகார்ஜுனன் வலைத்தளம்
10.5.09
எதிர்-கனவாம் துயர் சூழும் இந்நேரம்
Subscribe to:
Post Comments (Atom)
பதிந்தவை
-
▼
2009
(261)
-
►
12
(11)
- ஆந்துலேசிய நாய் - திரைக்கதை - 3
- க்ஹஸர் அகராதியின் வரலாறு - மிலோராத் பாவிச்
- சாவில் தொடங்கும் பிறிதான வாழ்வு - பாவிச் மறைவு
- ஆந்துலேசிய நாய் - திரைக்கதை - 2
- ஆந்துலேசிய நாய் - திரைக்கதை - 1
- லட்சம் புத்தகங்களும் இரு நாளிதழ்களும் - 2
- லட்சம் புத்தகங்களும் இரு நாளிதழ்களும் - 1
- கண்ணாடியில் தெறிக்கும் கொலைச்செயல்
- அகர முதல எழுத்தெல்லாம்? - 3 - ஆர்தர் ஸி. க்ளர்க்
- போபால்: கால் நூற்றாண்டுக்காலக் குற்றம்
- அகர முதல எழுத்தெல்லாம்? - 2 - ஆர்தர் ஸி. க்ளர்க்
-
►
11
(8)
- அகர முதல எழுத்தெல்லாம்? - 1 - ஆர்தர் ஸி. க்ளர்க்
- கிழவியின் விரக்தி - ஷார்ல் போதலேர்
- அந்நியன் - ஷார்ல் போதலேர்
- மட்டக்களப்பில் கொங்கைத்தீ - 5 - மரிலின் க்ரிஸ்ல்
- மறைந்த அறிஞர் மா(ங்)ஸாஞ் பற்றி வாசுவின் தமிழாக்கம்...
- மறைந்த அறிஞர் மா(ங்)ஸாஞ் பற்றி வாசுவின் தமிழாக்கம்...
- மறைந்த அறிஞர் மா(ங்)ஸாஞ் பற்றி வாசுவின் தமிழாக்கம்...
- ஃப்ரெஞ்சு அறிஞர் க்ளோத் லெவி-ஸ்ட்ராஸ் மறைவு!
-
►
10
(21)
- மட்டக்களப்பில் கொங்கைத்தீ - 4 - மரிலின் க்ரிஸ்ல்
- மட்டக்களப்பில் கொங்கைத்தீ - 3 - மரிலின் க்ரிஸ்ல்
- மட்டக்களப்பில் கொங்கைத்தீ - 2 - மரிலின் க்ரிஸ்ல்
- எட்டுத்திக்கும் என்ற வலைத்தளத்தில் நான்
- தீய்மை தீண்டாத இலக்கியம் இல்லை - 2 - ழார் பத்தாய்
- முடிக்க வேண்டிய தொடர்கள்
- பதிவுகளும் நானும் - 8
- எழுத்தை வெட்டும் கல் - 20 - சிவத்தம்பி
- எழுத்தை வெட்டும் கல் - 19 - சிவத்தம்பி
- எழுத்தை வெட்டும் கல் - 18 - சிவத்தம்பி
- எழுத்தை வெட்டும் கல் - 17 - சிவத்தம்பி
- லண்டன் ராணிமேரிப் பல்கலைக்கழகத்தில் என் உரை
- எழுத்தை வெட்டும் கல் - 16 - சி்வத்தம்பி
- நாகார்ஜுனரின் நடுவழிக்காரிகை - 1
- காளான் பல - ஸில்வியா ப்ளாத்
- எழுத்தை வெட்டும் கல் - 15 - சிவத்தம்பி
- மனித உரிமை ஆர்வலர் கே. பாலகோபால் மறைவு
- எழுத்தை வெட்டும் கல் - 14 - சிவத்தம்பி
- நளிர் விமர்சனக்கூட்டம் பற்றி அழகியசிங்கர்
- நாகார்ஜுனனின் மூன்றாம் உரையாடல் - 2 - வாசு
- நாகார்ஜுனனின் மூன்றாம் உரையாடல் - 1 - வாசு
-
▼
05
(17)
- மூடநெய் பெய்து முழங்கை வழிவார - மாதவிக்குட்டிக்கு ...
- இலங்கைப்படுகொலைகள் - நவநீதம் பிள்ளையின் தோற்றுப்போ...
- இலங்கைப்படுகொலைகள் இருபதாயிரத்துக்கும் மேல் - லண்ட...
- ஈழத்தமிழ் மக்களுக்கு குர்து இனத்தவர் கடிதம்
- மருத்துவர் பினாயக் ஸென் பிணையில் விடுதலை
- சரண்-பேச்சுவார்த்தை நடத்துமாறு புலிகள் என்னிடம் கோ...
- இந்தியாவைச் சேர்ந்தவன் என வெட்கித் தலைகுனிகிறேன்.....
- உரப்பும் முகடுகள் - ஸில்வியா ப்ளாத்
- கருங்கரட்டுப் பாறைபல - ஸில்வியா ப்ளாத்
- குவலயமயமாதலும் ஈழ இலக்கியமும் - தமிழவன்
- ஒப்பாரி - ஃபெடரிக்கோ கார்ஸியா-லோர்க்கா
- எதிர்-கனவாம் துயர் சூழும் இந்நேரம்
- இன்றைய கொடூரத்திலிருந்து உருவாகும் தமிழ்-உண்மை - த...
- அந்தோனியோ மச்சாதுவின் இறுதிக்கவிதை
- முகாம் என்பது யாது? - 2 - அகம்பென்
- பேரழிவு நாள் - ஸில்வியா ப்ளாத்
- தூதுவர் - ஸில்வியா ப்ளாத்
-
►
12
(11)
பகுப்பு
- 108 (16)
- ஃபூக்கோ (23)
- ஃப்ரெஞ்சு (181)
- ஃஸென் (3)
- அகம்பென் (4)
- அஞ்சலி (27)
- அணுசக்தி (10)
- அறிவியல் (45)
- ஆக்கம் (5)
- ஆங்கிலத்தில் (2)
- இசை (17)
- இணையம் (20)
- ஈக்கோ (2)
- ஈழம் (56)
- உரைமொழி (13)
- ஊடகம் (46)
- ஓவியம் (2)
- கடிதம் (26)
- கண்டனம் (1)
- கவிதை (170)
- குறியியல் (7)
- சாம்ஸ்கி (5)
- சிந்தனை (177)
- சிற்பம் (2)
- சீனம் (8)
- சூழியல் (21)
- செயல் (86)
- ஜெர்மன் (9)
- திரை (30)
- தீராநதியில் (15)
- தெர்ரிதா (1)
- தொன்மம் (10)
- நடனம் (2)
- நட்பு (17)
- நிகழ்வு (6)
- நேர்காணல் (14)
- பயணம் (11)
- போதலேர் (41)
- போத்ரியார் (5)
- போர்ஹெ (7)
- மரண தண்டனை (5)
- மலையாளம் (7)
- மொழி (31)
- மோஸ்தர் (2)
- ரைம்போ (52)
- லண்டன் (11)
- லத்தூர் (8)
- லெவி-ஸ்ட்ராஸ் (9)
- வரலாறு (168)
- வரைமொழி (120)
- வானொலி (3)
- விழியின் கதை (9)
- ஸில்வியா (37)
- ஸெர் (9)
- ஸெலான் (9)
- ஸெஸெர் (2)
- ஸ்பானிஷ் (28)
2 கருத்துகள்:
ஓவென்று கதறியழுது கொண்டே இருக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் ஒவ்வொரு காலையும் விடிகிறது. முடிவதாக இல்லை, முடியப்போவதும் இல்லை. உலகெங்கும் உயிரும் வாழும் உரிமையும் வல்லரசுகளின் நவீனரக ஆயுதங்கள் நிர்ணயிப்பதாகி விட்டிருக்கின்றன, ஈழப்பிரச்னை, அஃப்கான் பிரச்னை, காஷ்மீர்ப் பிரச்னை, ஈராக் பிரச்னை, சூடான் ஆப்பிரிக்க நாடுகளில் பிரச்னை இப்படி தொடர்கிறது.. எங்கும் அதிகமாக பொதுமக்கள்தான் இறந்தும் அகதிகளாகி முகாம்களின அவலத்திலும்
நிறைய யோசிக்கவும், இப்போதுள்ள மனோநிலையோடு ஒன்றிப்போகச் செய்கின்றதுமான உரை. நன்றி.
Post a Comment