பதிவில் உள்ளனவற்றைச் சிற்றிதழ்-பேரிதழ்களில் வெளியிட விரும்புவோர் - நெடுநாள் நண்பர் எனினும் - முன்-அனுமதி பெற்றாக வேண்டும்.

நிலம் எழுத்து நீர் கலை தீ வரலாறு வளி செயல் விசும்பு சிந்தனை சூன்யம் மோனம் --- நாகார்ஜுனன் வலைத்தளம்

2.5.09

பேரழிவு நாள் - ஸில்வியா ப்ளாத்

புறங்குதிக்கும்
முட்டாள் பறவை.
குடிமயக்கத்தில்
எட்டிப்பார்க்கும்
உடைந்த
பிரபஞ்சக் கடிகார உச்சியில்.
மணி பதின்மூன்றென
நேரம் மீண்டும் கூவும்.
யாவர் நடிகரும் சாவாய் அதிர
புறங்குதிக்கும்
முட்டாள் பறவை.
குடிமயக்கத்தில்
எட்டிப்பார்க்கும்.

பேரழிவில் நகர
அடுக்கடுக்கும் நொறுங்க
தெருப்பல
மலையிடுக்காய்ப் பிளக்க
மணி பதின்மூன்றென
நேரம் மீண்டும் கூவும்.

உடைந்த கண்ணாடி
சில்லு நூறாய்ப் பறக்கும்.
அதிர்ஷ்டத்தில் தப்பிய
எச்சம் எமதும் முடக்கப்பெறும்.
புறங்குதிக்கும்
முட்டாள் பறவை.
குடிமயக்கத்தில்
எட்டிப்பார்க்கும்.

குரங்கின் குறடும்
எந்திரம் பலதை
வெடித்துவிடும்.
மணி பதின்மூன்றென
நேரம் மீண்டும் கூவும்
புனிதச் சேவலைக் கேட்போமென
எண்ணவுமில்லை யாம்.

முடிவிதை அடையும் வழி
சரியெனவோ கேட்கத் தாமதம்.
குப்புற வீழும்
கடிகாரத்தைக் கணக்கிடவும்
தாமதம்.
புறங்குதிக்கும்
முட்டாள் பறவை.
குடிமயக்கத்தில்
எட்டிப்பார்க்கும்.
மணி பதின்மூன்றென
நேரம் மீண்டும் கூவும்.

-- Sylvia Plath, Doomsday, 1954.

2 கருத்துகள்:

சர்வோத்தமன் said...

பேரழிவின் சலனமேயில்லாமல் கடவுள் பிரபஞ்ச கடிகாரத்தை சுழற்றியபடியே இருக்கிறார். நிறைய பார்த்துவிட்டார் போலும்.
எனக்கு இந்த அரசியல்வாதிகளின் , இதழாளர்களின் கருத்தியல் பிதற்றல்கள் புரியவே இல்லை.ஏன் இவர்களின் கருத்தியலை அறத்தால் வெல்ல முடியவில்லை. அறத்தாறிதுவென... சரியாகச் சொன்னான் வள்ளுவ மாமுனி.
பேரழிவு சார்...பேரழிவு.யாரும் ஒன்றும் செய்யமுடியவில்லை.

நாகார்ஜுனன் said...

அரசியலார்-இதழியலார் கூறுவன தாண்டி அமைப்பாக்கம் நிகழ்வது எப்படி என்ற அடிப்படைக்கேள்வியை நமக்குள் கேட்க வேண்டிய தேவை உண்டு.

பதிந்தவை