பதிவில் உள்ளனவற்றைச் சிற்றிதழ்-பேரிதழ்களில் வெளியிட விரும்புவோர் - நெடுநாள் நண்பர் எனினும் - முன்-அனுமதி பெற்றாக வேண்டும்.

நிலம் எழுத்து நீர் கலை தீ வரலாறு வளி செயல் விசும்பு சிந்தனை சூன்யம் மோனம் --- நாகார்ஜுனன் வலைத்தளம்

13.4.09

தமிழ்நாட்டில் இலக்கியம் பரவுவது கஷ்டம் - தமிழவன்

சமீப காலமாகப் பல்கலைக்கழகங்கள் பலவற்றின் அழைப்பை ஏற்க ஆரம்பித்துள்ளேன். நான் பல்கலைக்கழகத்தில் வேலை பார்த்தபோது அழைப்புகளை ஏற்க முடிந்ததில்லை. காரணம் படித்துக் கட்டுரை தயார்செய்ய நேரம் கிடைத்ததில்லை. இப்போது அப்படியல்ல. எனக்குப் படிக்கவும் எழுதவும் நேரம் கிடைத்து வருகிறது.

சமீபத்தில் கோழிக்கோட்டுப் பல்கலைக்கழகத்தில் எழுத்தாளர் வைக்கம் முகம்மது பஷீரையும் தமிழ்ச்சூழலையும் ஒப்பிட்டு ஒரு கட்டுரை வாசித்தேன். அதற்குச் சில நாட்கள் முன்பு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை அழைத்தது. அதற்கிடையில் சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பேசினேன். நோயல் ஜோஸஃப் இருதயராஜ் அழைத்த பாரதிதாசன் பல்கலைக்கழகக் கருத்தரங்குக்கு இரண்டாம் முறையாகவும் போகமுடியவில்லை.

கோழிக்கோடு பற்றிச் சொல்ல நிறைய இருக்கிறது. அங்கு நான் எதிர்பார்த்ததுபோல் தோப்பில் முகம்மது மீரான் வந்திருந்தார். என் கட்டுரை முதல்நாள் மதியம் படிக்கப்படவேண்டும். என்னுடன் மேடையில் அமர்ந்திருந்தவர் ராஜீவன். திருவனந்தபுரத்திலிருந்து வந்திருந்தார். கல்லூரியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டதைக் கூறினார். நான் அவருடைய மாவோயிஸ்ட் காலகட்டத்தில் அவர் வெளியிட்ட கல்லூரி மலர் எப்படிப் புரட்சித்தீயை கேரளத்தில் மட்டுமன்றி, தமிழர்கள் மத்தியிலும் பரப்பியது என்பதைச் சொன்னேன். நாங்கள் பலமுறை சந்தித்துள்ளதை அவர் நினைவூட்டினார்.

ராஜீவன் சமீபத்திய அனைத்திந்தியப் போக்கை கேரளத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் சீரிய இலக்கிய விமரிசகர். மிகப் பிந்திய கோட்பாடுகள் பற்றிய அறிவுடன் மலையாளத்தின் தனித்தன்மையை வடிவப்படுத்தும் விமரிசகர் என்று அறிந்துள்ளேன்.

நான் தமிழ் மாடர்னிசம் பஷீர் போன்ற நெகிழ்ச்சியான கதைசொல்லியை ஏன் ஏற்காது என்பதுபோல் கட்டுரை அமைத்திருந்தேன். என் கட்டுரையை நான் வாசித்து முடிந்த பின்பு மலையாள இணைப்பேராசிரியரான முனைவர் உமர் கருத்துரைப்பவராய் வந்து என் கட்டுரை அவரைக் கவர்ந்ததாகக் கூறினார். பின்னர் தோமஸ் குட்டி, முனைவரும் பேராசிரியருமான பவித்திரன், பஷீர் மாடர்னிஸ்ட் எழுத்தாளர்தான் என்றனர். உடனே நான் இடையீடு செய்து நான் ’மாடர்ன்’, ’மாடர்னிஸ’, ’மாடர்னிட்டி’ என்ற மூன்று வார்த்தைகளையும் எப்படி வேறுபடுத்துகிறவன் என்று விளக்கி மலையாளத்தில் ஐயப்ப பணிக்கர் போன்ற ஒருவரால் கவிதையில் மாடர்னிசம் தொடங்கப்பட்டாலும் காக்கநாடன் போன்றோ, முகுந்தன் போன்றோர் பஷீர் ஒரு மாடர்னிஸ்ட் என்று கூறமாட்டேன் என்று கூறினேன். தொடர்ந்து, குருக்ஷேத்திரம் என்ற நீள்கவிதை எழுதிய ஐயப்ப பணிக்கரும் கன்னடத்தில் கோபாலகிருஷ்ண அடிகாவும் தொடங்கிவைத்த மாடர்னிஸம் வேறு, கடம்மநிட்ட ராமகிருஷ்ணனிடம் காணப்படும் மாடர்னிஸத்துக்கு எதிரான பண்புகள் வேறு; இவை பிரித்தறியப்பட வேண்டும்; இந்தச் சிந்தனைப்பின்னணியில் பஷீர் மாடர்னிஸப் பிரதிநிதியல்ல என்றேன். பல பேராசிரியர்கள் எங்கள் விவாதத்தில் கலந்துகொண்டனர். பேராசிரியர் அச்சுதன் உண்ணி, அய்யப்ப பணிக்கருக்கு முன்பே அக்கித்தம் மலையாளத்தில் மாடர்னிஸக் கவிதைகளை எழுதினார் என்றார். ஆந்திரத்திலிருந்து வந்த விமரிசகர், என்னுடைய மாடர்ன், மாடர்னிஸம், மாடர்னிட்டி பற்றிய விளக்கம் அவருக்கும் ஏற்க முடிந்ததுதான் என்றார்.

விவாதத்துக்கு இடையில், எழுத்தாளர் சாரு நிவேதிதா தம்மை சுந்தர ராமசாயின் தத்துவ எதிரி என்று கூறும் விஷயத்தை ஒருவர் தெரிவித்தார். (வெளியில் தனியாகப் பேசும்போது `தயிர்வடை` ஸாகித்தியம் என்றால் என்ன என்று இவர் என்னிடம் கேட்டார். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. கேரளத்தில் இப்படித் தமிழ்மொழியைப் பரப்பும் பணி பற்றி தமிழகத்தில் யாரிடமும் கூறாமல் அடக்க ஒடுக்கமாக இருக்கிறாரே சாரு என்று).

மறுநாள் காலை இரண்டு மூன்று கட்டுரைகள் குறிப்பிடும்படியாக இருந்தன. ஒன்று மலையாளப் பெண்ணிய விமரிசகரான சாரதா என்பவர் வாசித்தது. பலர் கவனத்தைக் கவரும்படி முன்னணிக்கு வரும் பெண்ணிய விமரிசகர் என்று என்னிடம் சொன்னார்கள். இவர், ஒரு பெண் காதலியாகவோ, தங்கையாகவோ, மனைவியாகவோ, தாயாகவோ இருக்கலாம். ஆனால் ஒரு பெண் இவற்றுக்கு அப்பால் ஒரு பெண்ணாகத் தன்னை உணர்வதுதான் தமக்கு முக்கியம் என்றார். உலகிலேயே ரோசுக்குட்டி என்ற பாத்திரத்தைப்போல் பார்க்கமுடியாது. ஏனெனில் பஷீரின் ரோசுக்குட்டி வயிற்றில் இருக்கும் குழந்தையைப் பற்றி யோசிக்காமல் தனக்கு டாக்டர் வந்து பேறு பார்க்க வேண்டும் என்பதிலேயே குறியாக இருக்கிறாள் என்றார்.

தமிழ் நாவலாசிரியர் தோப்பில் முகம்மது மீரான் மலையாளத்தில் பேசினார். ஆரம்பத்தில் தம் சுயவரலாற்றைக் கூறினார். ஆரம்பத்தில் மலையாளம் மட்டுமே படித்ததாகவும், பிறகு தமிழைச் சுயமாய்க் கற்றதாகவும் சொன்னார் மீரான். தம்முடைய மலையாளம் ’சின்ன மலையாளம்’ என்றார். அவருக்குச் சரியான பிறந்த தேதியை அவரது தாயாரால் சொல்லமுடியவில்லை என்றார். ஒரு ’அங்ஙத்தை’ மூலம் கிராம நூலகத்திலிருந்து ஒரு கதைப்புத்தகம் கிடைத்ததாகவும் அதைப் படித்தபோது நாமும் ஏன் அந்த நூலை எழுதிய பஷீர் போன்று முஸ்லீம் சமூகம் பற்றி எழுதக்கூடாது என்று தோன்றியது என்றும் கூறினார் மீரான். ஆக, மீரான் தமிழில் கொண்டுவந்த இலக்கியம் இன்னொரு மொழியில் பரவிய இலக்கிய மாதிரியிலிருந்து வந்தது என்பது இலக்கிய வரலாற்றுக்கு மிகவும் உபயோகமான தகவலாகும்.

இந்த மாதிரி பஷீர் மலையாளத்தில் கதையை நீக்குப்போக்காக எழுதிய காலகட்டத்தில் ஜெயகாந்தன், அகிலன் போன்றோர் தமிழில் எழுதினார்கள். கம்யூனிசம் பரவிய கேரளத்தில், ஜெயகாந்தன், நா. பார்த்தசாரதி, அகிலன் போன்றோரிடம் காணப்பட்ட நீதி சொல்லும் முனைப்பு பஷீரிடம் இல்லாமலிருந்தது ஆச்சர்யமான விஷயமாகும். தமிழில் நீதி இலக்கியம் என்பது தமிழ்த் தேசிய உளவியலில் நீக்கமற நிறைந்ததாகும். ஸ்டூவர்ட் ப்ளாக்பர்ன் என்ற அமெரிக்காவில் பிறந்த தமிழ் நாட்டுப்புறவியல் ஆய்வாளர், தமிழ் நாட்டுப்புறக்கதைகளின் அடிப்படை நீதிசொல்வதாகும் என்று கூறுகிறார் (இவருடைய Moral Fictions என்ற நூலில் இதைப் பார்க்கலாம்). தமிழர்களின் பழமையான சமூகம் சிதைவுண்டதைப் பார்த்து நீதி என்ற ஆலமரத்தைத் தமிழர்கள் பற்றிப் பிடித்திருக்கலாம். அகிலனையும் மு. வரதராசனையும் தாக்கி இலக்கியத்துக்கு நீதி சொல்லும் நோக்கமில்லை என்று ஸ்தாபித்தவர் க.நா. சுப்பிரமணியம் என்று நினைக்கிறேன்.

களப்பிரர்களும் பல்லவர்களும் முஸ்லீம்களும் விஜயநகர தெலுங்கர்-கன்னடர்களும் மராட்டியர்களும் தமிழகத்தை ஆக்கிரமித்திருக்கிறார்கள். இந்தக் காலகட்டத்தில் ஒரு பழைய சமூகம், நீதிவாக்கியத்தை-தாயாகவும் தந்தையாகவும் பற்றிப் பிடித்திருக்கிறது. எனவேதான் இலக்கியம் தமிழ்த்துறைகளில் இவ்வளவு நாட்களாகியும் வேர் பிடிக்காமல் இருக்கிறது என்று நினைக்கிறேன். இலக்கியத்தைக் கருத்துத்தொகுப்பாகத்தான் தமிழ்க்குடி பார்க்கிறது. பெரியார் தன் சிந்தனையை உறுதியான கருத்துகளாய்த்தான் பரப்பினார். பெரியாருக்குப் புதிய சிந்தனையான இலக்கியத்தில் நாட்டமில்லை. பெரியாருக்கு மட்டுமல்ல; திரு.வி. க., அயோத்திதாசர் போன்ற தமிழ்ச்சமூகத்தின் முக்கியமான சிந்தனையாளர்கள் யாருக்கும் இலக்கியத்தின் சூட்சுமம் தெரியாது. முதன்முதலாக இலக்கியம் என்ற ’சிந்தனையற்ற சிந்தனை’ பற்றிக் கவலைப்பட்டவர் க.நா. சுப்பிரமணியம்தான் என்றே தோன்றுகிறது. சங்க இலக்கியத்தில் இல்லாத சூட்சுமம் வேறு எங்கும் இல்லை. தொல்காப்பியம் சூட்சுமமான பல கருத்துகளைச் செய்யுள், கவிதை பற்றிச் சொல்கிறது. ஆனால் தமிழ்ச்சமூகம் நீதிபோதனையை அங்கீகரித்த அளவு, நீதிபோதனைக்கு எதிர்ப்பான இலக்கியத்தை அங்கீகரிக்கவில்லை. தமிழ்ச்சமூகத்தின் மனதில் அதன்மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் ஆழத்தில் வடுவாகப் பதிந்துள்ளன. பிற கலாச்சார, பிற ஆட்சியாளர்களின் தாக்குதல்கள் கண்டு பீதியுற்றுள்ளது தமிழ்ச்சமூகம். அதனை இன்றைய சினிமாவில் வரும் நீதிபோதனையாய்ப் பார்க்கிறது தமிழ்ச்சமூகம். வில்லனை அடித்து உதைக்காத தமிழ்சினிமா ஏன் வெற்றி பெறுவதில்லை என்றால் இதுதான் காரணம். கன்னடத்திற்கு ஏழு ஞானபீட பரிசுகள் வந்துள்ளன; கேரளத்தில் இலக்கியவாதிக்கு அதிகமான மதிப்புள்ளது. தமிழில் எந்தப் படைப்பாளி செத்தாலும் செய்தித்தாளில் செய்திகூட வருவதில்லையே ஏன் என்று கேட்டால் இதுதான் காரணம்.

தமிழ்ச்சமூகம் நீதிபோதனையால் இறுகிப்போன சமூகம். அதனால்தான் வன்முறையான சமூகமாகவும் இருக்கிறது. ’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற நீதிபோதனையால்தான் பிராமணர்களின் பூணூலையும் குடுமியையும் அறுக்கலாம் என்ற கருத்து அங்கீகரிக்கப்பட்டது. எதிலும் தமிழ்ச்சமூகத்துக்குச் சந்தேகங்கள் இல்லை. கற்பு பிறழ்ந்த மகளின், மனைவியின் தலையை வெட்டிக்கொண்டு போலீஸிடம் சரண்புகும் சமூகம் இது. சினிமாவில் நியாயத்துக்காகப் போராடுபவன் உண்மையிலும் நியாயத்துக்காகப் போராடுவான் என்ற கருத்து எப்படி வருகிறது? நீதி, நியாயம் என்ற நீதிகள் சமூகத்தின் பிடிவாதம். அல்லது நீதி என்று கருதப்படுவதன்மீதான பிடிவாதம். விட்டுக்கொடுத்தல், அதுவும் சரி இதுவும் சரி என்ற நெளிவுசுளிவு போன்றன வேறு ஒரு சமூகக்குழுவின் குணம், நாம் ’வெட்டு ஒன்று, துண்டு ரெண்டு’ என்று பேசும் சாதி, பேசும் மாவட்டத்தவர் என்று பெருமை அடித்துக் கொள்வதுகூட நீதிசார் மனோநிலையின் விளைவுதான்.

இவற்றின் அடிப்படையால்தான் இலக்கிய உணர்வு தமிழின் ஒரு நிறுவனமாக வரவில்லை. தி.மு.க. இலக்கியவாதிகள் தோற்றுப்போனார்கள் என்று கூறுகிறோமே அது இந்த அடிப்படை சமூக அமைப்பால் ஏற்பட்ட விளைவு. அவர்கள் ஆரியர்களை வில்லன்களாக, மேல்தட்டினரை வில்லன்களாகக் காண்பதற்கான காரணம் நம் சமூகம் நீதிபோதனைச் சமூகம் என்பதால்தான்.

தோல்வியைத் திறமையாய்க் கையாளத் தெரியாத சமூகம் பெரிய பிரச்னைகளை எதிர்கொள்ளவேண்டி வரும். சமீபத்திய வரலாற்றில் இதற்கான அறிகுறி முத்துக்குமார் என்ற இளைஞர் தன் சாவைக் கையாண்ட விதம். நிறைய யோசிக்க வைப்பது இந்தச் சாவு. தமிழ்ச்சமூகம், அதன் தலைவர்கள், இலக்கியம், தியாகம், இலட்சியம், வரலாறு என்று.

மீரான் நாவல்கள் பஷீர் நாவல்களால் உந்துதல் பெற்றாலும் மீரான் நாவல்கள் தமிழின் நீதிபோதனை மனோநிலையை திறமையாகக் கையாள்கின்றன என்பதால்தான் அவை பிரபலமாகியுள்ளன.

கோழிக்கோட்டுப் பல்கலைக்கழக முன்னாள் மலையாளப் பேராசிரியர் வேணுகோபாலப் பணிக்கர், தமிழ்நாட்டில் படித்தவர். மீரானின் ஒரு நாவலை மலையாளத்தில் மொழிபெயர்த்து அதற்காக சாகித்திய அக்காதமியின் மொழிபெயர்ப்புக்கான பரிசைப் பெற்றவர். அவருடைய அழகிய கேரளப்பாணியில் கட்டப்பட்ட வீட்டில் வைத்து, மீரான், தம் நாவல்களில் மூன்று மலையாளத்தில் வந்துள்ள விபரத்தைச் சொன்னார். டி.சி. புக்ஸ் வெளியிட்டுள்ளதாய்க் கூறினார். டி.சி. புக்ஸ் என்ற பதிப்பகம் எல்லோருக்கும் பணம் கொடுப்பதில்லை என்றும் பணம் கொடுக்கும் ஆசிரியர் பட்டியலில் தம் பெயர் இருப்பதையும் சொன்னார்.

மேலும் பேசும்போது பல இலக்கிய ஆசிரியர்களைப் பற்றி மனந்திறந்து பேசினார். நகுலனை உயர்ந்த படைப்பாளி என்றார். கலில் ஜிப்ரானின் தீர்க்கதரிசி என்ற நூலை தனக்கு நகுலன் தந்ததை நினைவுகூர்ந்தார். நான் ’நகுலன் படைப்புகளைப் படித்துள்ளீர்களா’ என்று கேட்டேன். இல்லை, ஒரே ஒரு புத்தகம் படித்தேன், புரியவில்லை என்றார். பின் ’சுரா’ என்பவர் பஷீரின் நாவல்களைப் படித்து மூடிவைத்துவிட்டு மொழிபெயர்ப்பதாகக் கருத்தரங்கில் கூறினீர்களே என்று கேட்டேன். ’ஆமாம், உண்மைதான்’ என்றார்.

தமிழ்நாட்டில் இலக்கியம் பரவுவது கஷ்டம்தான் என்று நினைத்தேன்.

நன்றி - உயிரோசை
படங்கள் - வரலாற்றில் கோழிக்கோடு - பெயர்பெற்ற குட்டிச்சிறா மசூதி, மன்னர் சாமுத்ரியைச் சந்திக்கும் வாஸ்கோ ட காமா

0 கருத்துகள்:

பதிந்தவை