பதிவில் உள்ளனவற்றைச் சிற்றிதழ்-பேரிதழ்களில் வெளியிட விரும்புவோர் - நெடுநாள் நண்பர் எனினும் - முன்-அனுமதி பெற்றாக வேண்டும்.

நிலம் எழுத்து நீர் கலை தீ வரலாறு வளி செயல் விசும்பு சிந்தனை சூன்யம் மோனம் --- நாகார்ஜுனன் வலைத்தளம்

30.4.08

பதிவுகளும் நானும் இதுவரை - 4

திணை இசை சமிக்ஞை என்ற இந்த என் பதிவின் பின்னூட்டங்கள் கடந்த ஒரு மாதமாய் அனுமதிக்கப்பட்டு வருகின்றன்.

இதை ஒரு பரிசோதனை முயற்சியாகவே மேற்கொண்டேன். இதனால் பிரச்னை எழவில்லை என்பதால் பின்னூட்டங்கள் இனியும் தொடரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன். ஒட்டியும் வெட்டியும் வரும் கறாரான கருத்துக்கள் நிச்சயம் இடம்பெறும் என்று உறுதியளிக்கிறேன்.

"பிரபல எழுத்தாளர்கள்" பின்னூட்டங்களை அனுமதிப்பதில்லை ஏன் என்பது பற்றி வெங்கட் தொடங்கிய பதிவில் நடந்த விவாதத்தை அடுத்து, அவர் எழுப்பிய கேள்விகளை சவாலாக ஏற்று, இந்தப் பரிசோதனையைத் தொடங்கினேன்.

இந்த ஒரு மாதத்தில், மட்டுறுத்தல் என்பதைப் பயன்படுத்தி நான்கு பின்னூட்டங்களை மட்டுமே நிராகரிக்க வேண்டியிருந்தது. அதில் வருத்தமுண்டு. நான்குமே பெயரற்ற நண்பர்களிடமிருந்து வந்தவை. அவற்றில் மூன்று ஆங்கிலத்தில் இருந்தன; இரண்டு நல்ல கருத்துள்ளவை, தமிழில் எழுதியிருந்தால் நிச்சயம் வெளியாகியிருக்கும், எழுதுங்கள் என்று கேட்டிருந்தேன், பதிலில்லை. ஆக, நிராகரித்தவை இரண்டே. காரணம், எழுதியோர்ககுத் தெரியும்.

இந்தப் பதிவைப் பொறுத்தவரை மட்டுறுத்தல் என்பது இப்போதைக்குத் தொடரும். ஒருகட்டத்தில் அதுவும் நீக்கப்படலாம்.

பிப்ரவரி ஆறாம் நாள் தமிழில் பதிவுகள் எழுதத்தொடங்கி மூன்று மாதங்கள் ஆகப்போகின்றன். கடந்த 88 நாட்களில் 88 பதிவுகளை எழுதியிருக்கிறேன். ஆக, நாளுக்கு ஒரு பதிவு என்ற விகிதம் தொடர்கிறது. பல பணிகளுக்கிடையில் இப்படி அயராமல் தினமும் எழுதுவதில் எனக்கே ஆச்சர்யம்.

என் முந்தைய ஆக்கங்களில் நான்கை மாத்திரமே இந்தப்பதிவில் வாசிக்க முடியும். பிறர் எழுதியது ஒரேமுறைதான் மறுபதிவாக வந்திருக்கிறது. ஆக, இணையத்துக்காகப் பிரத்யேகமாக நிறைய எழுதுவது தொடர்கிறது - அரசியல், இலக்கியம், அறிவியல், தத்துவம், இசை, ஊடகம் என துறைச்சட்டகங்களை மீறி எழுதுகிறேன். கவிதையாககங்கள் நிறைய - குறிப்பாக ஃப்ரெஞ்சு மொழியிலிருந்து.

கடந்த 66 நாட்களில் இநத்பபதிவுகளை 2,500 பேருக்கு மேல் வாசித்திருக்கிறீர்கள், வாசகருக்கு தலா மூன்று பக்கங்களுக்கு மேல் என 8,100 முறை இந்தப்பக்கங்கள் காணப்பெற்றிருக்கின்றன. ஆக, பின்னூட்டப்பெட்டி திறந்திருக்கும் கடந்த ஒரு மாதத்துக்கும் அது முன்பு மூடியிருந்த காலகட்டத்துக்கும் வாசிப்பு-அளவு என்ற வகையில், பெரிய வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லை! அதே நேரம், எந்தப்பதிவுக்குப் பின்னூட்டம் வரும் அல்லது வராது, வந்தால் அதில் என்ன இருக்கலாம் என்பதைக் கணிக்காமல் எழுதத்தொடங்குவதே நலம்.

பதிவு எழுதும் மற்ற "பிரபல எழுத்தாளர்களிடம்" பின்னூட்டங்களை அனுமதிக்கச் சொல்வீர்களா என்று பொய்யன் கேட்டிருந்தார். இந்த என் பரிசோதனையின் நோக்கில் பார்த்தால் அவர்களும் செய்யலாம் என்றுதான் நினைக்கிறேன். அழுத்தம் கூடினால் காலப்போக்கில் நடக்கும்.

இந்த மூன்று மாதங்களாக என் பதிவை வாசித்துவருவோர்க்கும் பின்னூட்டம் எழுதுவோருக்கும் தமிழில் எழுதும் யாருக்கும் நான் இன்னும் இணைப்புத்தரவில்லை என்றாலும் என் தளத்துக்கு இணைப்புக் கொடுத்திருப்போருக்கும் நன்றி.

நான் அவ்வப்போது வாசிக்கும் தமிழ்த்தளங்கள் பற்றித் தனியாக எழுதுகிறேன்.

பகுப்பு -ஊடகம்


பதிவுகளும் நானும் இதுவரை - 3
பதிவுகளும் நானும் இதுவரை - 2
பதிவுகளும் நானும் இதுவரை - 1

29.4.08

எழுத்தாளருக்குப் பதிலடி - ஹிப்பி அம்மாவின் புத்தகம்

ஃப்ரெஞ்சு இலக்கியத்தின் "அடங்காப்பிடாரி", சுத்த-சூன்ய எழுத்தாளர், பிறரைக் கோபமுறச் செய்பவர், அனல் பறக்கும் சர்ச்சைகளைச் சந்திக்கத் தயங்காதவர், இனவெறியைத் தூண்டியதான வழக்கில் நீதிமன்றம் சென்றவர், பெண்ணியவாதிகளை வெறுப்பேற்றியவர், பதிப்பக உலகத்தைக் கடுமையாகச் சாடியவர் - மிஷெல் வெல்பெக் (Michel Houllebecq).

ஆனால் தற்போது இதையெல்லாம் விட ரொம்பக்காயப்படும் ஒரு பகிரங்க மோதலை இவர் சந்திக்க வேண்டியிருக்கலாம் - இந்த மோதல் தம் தாயாருடன்.

"விபச்சாரி போன்றவர் என் அம்மா" என தாயார் மீது வெறுப்பை மறைக்காமல் கக்குபவர் வெல்பெக்.

வெல்பெக் ஜனித்தது, இந்துமாக்கடல் பகுதியில் ஃப்ரான்ஸ் வசமிருக்கும் ரேயூனியன் தீவில். இயற்பெயர் மிஷெல் தோமஸ். ஐந்து வயதான போது பாரீஸில் தாத்தா-பாட்டியுடன் வசிக்க அனுப்பப்பட்டார் - மருத்துவரான தாயாரும் மலைப்பகுதி-வழிகாட்டியான தந்தையும் ஹிப்பி வாழ்க்கையை ஜாலியாகக் கழித்தார்கள். சிட்ரன் வாகனத்தில் ஆப்பிரிக்காவைச் சுற்றிவந்தார்கள்.

பாரீஸின் அழுதுவடியும் சிமிட்டிப் புறநகர்ப்பகுதி ஒன்றில் (தந்தைவழிப்)பாட்டியாரால் வளர்க்கப்பட்டதால் அவரை ஆராதிக்கும் வகையில் வெல்பெக் என்ற அவர் பெயரை ஏற்றார்.

வெல்பெக்கின் பெயர்பெற்ற நாவல் Les Particules Elementaires. Atomised என்று ஆங்கிலத்தில் வெளியாகியிருக்கிறது. இரண்டு ஆண்டுகள் முன்பு படமாகியும் இருக்கிறது. அதில் வெறுக்கத்தக்க அளவு சுயநலங்கொண்ட தாயார் ஒருவரை உருவாக்கியிருந்தார். காம வேட்கை மிகுந்த அந்தப்பாத்திரத்துக்கு இவர் சூட்டிய பெயர் - ஸெக்கால்டி.

வெல்பெக்கின் தாயாரின் பெயர் - லூஸி ஸெக்கால்டி.

நாவலில் வரும் தாயார், பிள்ளை-வளர்ப்பை சுமையெனக் கருதுகிறார். தம் சுதந்திரத்துடன் அது பொருந்தாது என்று நினைக்கிறார். வீட்டுமாடியிலுள்ள சிறிய அறையில் மகனைத் தனியாக விட்டுவிட்டு வெளியே அலைகிறார். இறுதியில் இளைஞர்களுடன் பாலுறவு கொள்ள வேண்டி, தம் பிள்ளைகளைக் கைவிடுகிறார். ரெண்டுங்கெட்டான் கம்யூன் ஒன்றில் சேர்வதற்குத்தான்.

லூஸி ஸெக்கால்டிக்கு வயது இப்போது எண்பத்திமூன்று. ரேயூனியன் தீவு கடற்கரைக்குடிசையில் வாசம். எழுதியிருப்பது L'Innocent என்ற நாவல். ஆங்கிலத்தில் The Innocent. இதில் தாயார்-மகன் உறவுபற்றிய தம் தரப்பு விளக்கத்தை அளிக்கிறார்.

"Les Particles Elementaires புத்தகத்துடன் மிஷெல் தெருவுக்குப் போய், 'நான் ஒரு பொய்யன், நடிகன், என் வாழ்க்கையில் உடன் இருந்தவர்களுக்குத் தீங்கைத் தவிர வேறெதையும் நான் இழைத்ததில்லை, இதற்கெல்லாம் மன்னிப்புக்கோருகிறேன்' என்று மிஷெல் கூறும் நாள் வரட்டும். அப்போது நாங்கள் இருவரும் மீண்டும் பேசத் தொடங்கலாம்" என்று புத்தகத்தின் பின்னிணைப்பில் கடுமையாக எழுதுகிறார் லூஸி.

வெல்பெக்கின் தனிப்பட்ட வாழ்க்கையில் இப்போது அரங்கேறியிருக்கும் இந்தக்காட்சி ஃப்ரெஞ்சு இலக்கிய உலகை நிரடியிருக்கிறது. முப்பதாண்டுகளாக வராத தாய்-தந்தையர், Les Particles Elementaires நாவல் வெளியானபோது இவருக்குக் கடிதம் எழுதினார்கள். ஆனால் இந்தக் கடிதங்களை வாசிக்கவில்லை, பெட்டியில் போட்டுவிட்டதாக வெல்பெக் கூறினார்.

லூஸி ஸெக்கால்டியின் புத்தகத்தில் சில பகுதிகளை, Lire என்ற ஃப்ரெஞ்சு இதழ் இந்த வாரம் வெளியிடத் தொடங்குகிறது. இதுபற்றி Règlement de comptes à Houellebecq Corral என்ற தலைப்பில் L'Express என்ற வார இதழும் எழுதியிருக்கிறது. வெல்பெக் புண்படுவாரோ என்ற பயத்தில் வேறுபல பதிப்பகங்கள் இவற்றை வெளியிட மறுத்துவிட்டதாகவும் செய்தி.

அயர்லாந்து நாட்டில் வசிக்கும் வெல்பெக் என்ன கூறப்போகிறார், தெரியவில்லை.

இருஆண்டுகள் முன்பு தம் சரிதையை அனுமதியின்றி எழுதிப்பதிப்பித்தவர்களை விமர்சித்து "இவர்கள் என்னைக் கொல்வதைப்போல உணர்கிறேன்!" என்று சாடியிருந்தார் வெல்பெக் - தம்முடைய வலைப்பதிவில்; தாயார் லூஸியின் பேட்டி அடங்கிய அந்த சரிதையை இவர் வாசிக்கவுமில்லை.

"வயதான விபச்சாரி போன்றவர் என் அம்மா, தம்மைத் தவிர கணிசமான எதையுமே படைக்கத் தெரியாத அளவு அகங்காரம் பிடித்தவர்" என்ற வெல்பெக், தம் தாயாரால் புதிதாக ஏதும் கூறச் சாத்தியமா என தாம் சந்தேகிப்பதாகச் சொல்கிறார்.

"நான் யார் என்று என் அம்மா புரிந்துகொள்ளவே இல்லை. என் தந்தையையும் அவர் புரிந்துகொள்ளவே இல்லை" என்று எச்சரிக்கிறார் வெல்பெக்.

----------
Revenge of hippy mum on enfant terrible, The Guardian, London, Monday April 28, 2008 செய்தியின் தமிழாக்கம்.

28.4.08

இந்தியாவில் மரண தண்டனை பற்றி - 1

இந்தியாவில் மரண தண்டனை வேண்டாம் என்ற கோரிக்கை அண்மையில் வலுப்பெற இயக்கம் கண்டவர்கள் தமிழகம், கேரளம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்களே என்பது முக்கிய விஷயம்.

இப்போது நான் பணிபுரியும் அம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பின் சார்பில் இந்தியாவில் மரண தண்டனை பற்றிய நீண்ட ஆய்வு, எதிர்வரும் வெள்ளிக்கிழமை, அதாவது மே இரண்டாம் நாள், டில்லியில் வெளியிடப்படுகிறது.

1947-ஆம் ஆண்டுக்குப் பிறகு மரண தண்டனை தொடர்பாக இந்திய உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கும் சுமார் 700 தீர்ப்புக்களை ஆராய்ந்து எழுதப்பெற்றுள்ளது இந்த ஆய்வு. இப்படி ஓர் ஆய்வு வெளியாவது இதுவே முதல்முறை. சுமார் 200 பக்கங்கள் வரை நீளும் இந்த அறிக்கையை எழுதியிருப்பவர், இந்தியாவில் மரண தண்டனை குறித்து பல ஆண்டுகளாக ஆய்வுசெய்துவரும் இளம் வழக்கறிஞர், மனித உரிமை ஆர்வலர் பிக்ரம் ஜித் பாத்ரா.

"இந்திய நீதிமன்றங்கள் மரண தண்டனை வழங்குவது மிகமிக அரிதே - The death penalty in India is awarded in the rarest of rare cases" என்று இந்திய அரசாங்கத்தினர், நீதிபரிபாலன அமைப்பில் உள்ள நீதிபதிகள், வழக்கறிஞர்கள், ஊடகங்கள் எனப் பலரும் கிளிப்பிள்ளை போலக் கூறிவருகின்றனர்.

கடந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை, உலகெங்கும் மரண தண்டனை நிறுத்திவைக்கப்பட வேண்டும் (moratorium) என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது. அதற்கு எதிராக வாக்களித்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் அடக்கம்.

சொல்லப்போனால், உலகில் மரண தண்டனையை ஒழித்த நாடுகளின் எண்ணிக்கை 134. அது இன்னும் வழக்கத்தில் உள்ள நாடுகளின் எண்ணிக்கை 63. 2007-ஆம் ஆண்டை எடுத்துக்கொண்டால், 27 நாடுகளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது - சீனா (குறைந்தது 470 பேர்கள்), ஈரான் (317), பாகிஸ்தான் (135), சௌதி அரேபியா (143), அமெரிக்கா (42), ஈராக் (33), வியத்நாம் (25), ஆப்கானிஸ்தான் (15), யேமன் (15) ஆகிய நாடுகள், மரண தண்டனை நிறைவேற்றலில் முன்னிலை வகிக்கின்றன. வட கொரியா, எகிப்து, மலேசியா, மங்கோலியா ஆகிய நாடுகளில் எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள் என்ற விபரத்தைச் சேகரிக்க முடியவில்லை.

இந்தியாவில் கடந்த பத்தாண்டுக்காலத்தில் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனை ஒன்றே ஒன்றுதான். 1991-ஆம் ஆண்டு கொல்கத்தா சிறுமி ஒருத்தியைப் பாலியல்-வல்லுறவு செய்து, கொலை செய்தவர் என்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்பெற்று மரண தண்டனை வழங்கப்பட்டவர், அந்தச்சிறுமி வசித்த கட்டிடத்தில் காவலாளியாக இருந்த தனஞ்சய் சாட்டர்ஜி. இவருடைய கருணை மனுவை, குடியரசுத்தலைவர் பொறுப்பில் இருந்த சங்கர் தயாள் சர்மா, அப்துல் கலாம் ஆகியோர் நிராகரித்தனர். பிறகு 2004-ஆம் ஆண்டில் இந்திய அரசியல்-விடுதலை நாளான ஆகஸ்ட் 15 விடியும்போது தனஞ்சய் தூக்கில் இடப்பட்டார்.

அதற்கு முன்பு தூக்கில் இடப்பட்டவர்கள், 1995-ஆம் ஆண்டு ஆட்டோ சங்கர் மற்றும் அவருடைய மைத்துனர் எல்டின். ஆனால் 1970-1995 காலகட்டத்தில், சுமார் 40 பேர் தூக்கில் இடப்பட்டார்கள் என்றும் தெரிகிறது.

இந்தியாவில் எதற்கெல்லாம் மரண தண்டனை? கொலைக்குற்றம், சிறாரைத் தற்கொலை செய்யத் தூண்டுதல், தேசத்துரோக மற்றும பயங்கரவாதச் செயல்கள், போதை மருந்து கடத்துவதாக இருமுறை குற்றம் நிரூபிக்கப்படுதல் ஆகியவற்றுக்கு மரண தண்டனை வழஙகப்படலாம்.

இந்தியாவில் இந்த rarest of rare கருத்து முதலில் முன்வைக்கப்பட்ட ஆண்டு, 1980. அப்போதான பச்சன் சிங் வழக்கை விசாரித்த இந்திய உச்ச நீதிமன்றம், கொலைக்குற்றம் என்பது நிரூபிக்கப்படும் பட்சத்தில் மரண தண்டனை அரசியல்-சட்டத்தின்படி செல்லும் என்ற முக்கியத்தீர்ப்பை வழங்கியது. அதே நேரம் மரண தண்டனை மிக அரிதாகவே வழங்கப்பட வேண்டும் என்றும் கூறியது, இந்தத் தீர்ப்பை வழங்கிய 'பெஞ்ச்'. ஆனால், இதே 'பெஞ்ச்'சில் இருந்த நீதிபதி பி.என். பகவதி, இதற்கு மாறுபட்ட தீர்ப்பை அளித்தார்.

அதாவது, மரண தண்டனையை எப்போது வழங்கலாம் என்று தீர்மானிக்கும் நியமங்களையோ வரையறைகளையோ சட்டமன்றம் இயற்றி நீதிபரிபாலன அமைப்புக்கு வழங்கவில்லை, மேலும் இந்த "மிக அரிதான" என்பதற்கான வரையறை ஏதும் நீதிபரிபாலன அமைப்பு செய்யவுமில்லை, மரண தண்டனை என்பது நிறைவேறினால் திருத்தப்பெற முடியாத ஒன்று. இதனால் நிரபராதிகள் தூக்கிலிடப்பட வாய்ப்புண்டு, அப்போது நீதிபதிகள் ஒன்றும் செய்ய முடியாமல் போய்விடும் என்று எழுதினார் நீதிபதி பகவதி.

இந்தக்காரணங்களின் நியாயப்பாட்டை, சுமார் 700 தீர்ப்புக்களை ஆராய்ந்து, இந்த அறிக்கை நிரூபிக்கிறது.

மரண தண்டனை மிக மோசமான குற்றங்களுக்காக, மிக அரிதாகவே வழங்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அன்று கூறியதை மிக அரிதாகவே வழங்கப்படுகிறது என்ற நியமமாக இன்று பொருள்கொள்கிறார்கள் பலர்! ஆக, இப்படித்தான் பொதுப்புத்தி எண்ணம் உருவாகிறது!

இந்தப் பொதுப்புத்தி எண்ணம் உண்மைக்குப் புறம்பானது என்று இந்த ஆய்வின் மூலம் தெரிய வருகிறது. சொல்லப்போனால், இந்தியாவில் மரண தண்டனை வழங்கப்படுவது மிக அரிதாகவே எனக்கூற முடியாது, நிறைவேற்றப்படுவதுதான் மிக அரிதாக நடப்பது - அதுவும் கடந்த பத்தாண்டுகளில், என இந்த ஆய்வு நிரூபிக்கிறது.

இந்த சுமார் 700 தீர்ப்புக்களை வைத்துக்கொண்டு பார்க்கும்போது, ஒரு விஷயம் புலனாகிறது. குற்றம் சாட்டப்பெற்றவர்கள், சட்ட வல்லுநர்களைப் பணியமர்த்தும் வசதி கொண்டிருந்தால் - அதாவது சமுதாயத்தின் உயர்மட்டத்தில் இருந்தால் - அதைப் பயன்படுத்தி மரண தண்டனையிலிருந்து தப்பிக்கும் வாய்ப்புண்டு. அதேவிதக் குற்றத்தைச் செய்திருந்ததாகக் கருதப்பெற்றாலும் பிறர் - அதாவது, நகர்ப்புற வறியோர், தலித் மற்றும் ஆதிவாசி சமுதாயங்களைச் சார்ந்தவர்கள் போன்றோர் - இத்தகைய வசதிகள் அற்ற நிலையில் மரண தண்டனை பெறுவதற்கான வாய்ப்பே அதிகம் என்கிறது இந்த ஆய்வு. அதாவது, அமெரிக்காவில் மரண தண்டனை பெறுவோரில் கறுப்பின மக்கள், வறியோர் அதிகம் இருப்பதைப் போன்ற பிரச்னை இது எனத் தெரிகிறது.

இன்னும் சில செய்திகள் - இந்தியாவில் ஆண்டுதோறும் சராசரி 60 முதல் 100 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுவருகிறது. இப்படி மரண தண்டனை பெற்று சிறையில் இருப்பவர்களின் எண்ணிக்கை-நிலவரத்தை அரசாங்கம் வெளியிடுவதில்லை. அதேவேளை இந்தத்தீர்ப்புக்களில் பல, மேல்முறையீட்டின் போது ஆயுள்தண்டனையாகக் குறைக்கப்படுகின்றன. ஆனால் சில குறைக்கப்பெறுவதில்லை. நிறைவேற்றல் இல்லாத பட்சத்தில் இவர்கள் காலவரையறையின்றி சிறையில் இருந்துவரும் சோகமும் உண்டு. இத்தகையோரின் எண்ணிக்கை-நிலவரமும் தெரியவில்லை. இவர்களில் 44 பேருடைய கருணை மனுக்கள் இந்தியக் குடியரசுத்தலைவரின் பரிசீலனையில் இருப்பதாகத் தெரிகிறது.

இந்தியாவில் மரண தண்டனை என்றவுடனே பொதுப்புத்தியில் உறைந்திருப்பவை இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி படுகொலை வழக்குகள், டிசம்பர் 2001 நாடாளுமன்றத்தாக்குதல் ஆகியவற்றில் குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை பெற்றவர்கள் பற்றிய விவாதங்கள்தாம்.

இவற்றையும் தாண்டி மரண தண்டனை குறித்துப் பொதுவாக யோசிக்க, இப்போது வர உள்ள இந்த ஆய்வு, ஒரு நல்ல தருணத்தை அளித்திருப்பதாகவே நினைக்கிறேன். குறிப்பாக, மரண தண்டனை வேண்டும் என்று நினைப்பவர்கள் இதை வாசிக்க வேண்டும் என்று கூறுவேன். வாசித்தால் அவர்கள் தங்கள் எண்ணங்களை மாற்றிக்கொள்ள முடியலாம்!

27.4.08

ப்ளூட்டோனியப் பாடல் - ஆலன் கின்ஸ்பர்க்

இயல்பில் பிறவாத் தனிமம் எம்முன்
செங்கதிர் கீழ் புதிதாய் இறுதியில்
நவீனத் தொன்மம் விட்மனின் ஆர்வம்
வெடிக்கும் அறிவாய்க் கருத்தாய் ஏதோ
டாக்டர் ஸீபோர்க் விஷக்கை கொண்டு
கவலையு மற்று ஆதியில் எழுதி
யுரேனஸ் கடந்தும் கடலின் ஊடே
சாவின் கிரகமும் அளித்த பெயரில்
யுரேனஸ் நிலத்தான் கனிம வழிவந்த
பாறைக் குழம்பு கிழித்தும் தந்த
பாதல எமனாய் நரகச் செல்வமாய்...

அமெரிக்கக் கவிஞர் ஆலன் கின்ஸ்பர்க் எழுதிய ப்ளூட்டோனியப்பாடல் (Plutonian Ode) கவிதையின் ஒரு பகுதி. தமிழாக்கம் - 2007.

கழைக்கூத்தாடி - ழான் ஜெனே

"தங்கமூலாம் பூசப்பட்டு மையத்தில் துளையிட்ட தகடு. நீரில் மிதக்கக்கூடியது. சிலசமயம் கூத்தாடியின் சுருண்ட முடியிரில் ஓரிரண்டாக ஒட்டிக்கொண்டு தகதகக்கும்.

உன்னைத் தாங்குவதற்குக் கம்பி உனக்குக் காட்டும் சக்திபோன்ற அதே அளவிலான காதலை – அலைபாயும் நளினமான காதலை – அக்கம்பிக்கு நான் வழங்கவேண்டும். பொருட்களின் தன்மை பற்றி – அவற்றின் கொடூரத்தையும் நன்றியுணர்வையும் பற்றி – நன்றாகவே எனக்குத் தெரியும். கம்பியானாலும் அப்படித்தான் - இங்கே செத்துப்போய் விட்டிருக்கிறது. உன் வார்த்தைகளில் சொல்வதென்றால் ஊமையாக இருக்கிறது. நீ தோன்றுகிறாய். தோன்றியவுடன் உயிர்த்துப்பேசுகிறது.

உனக்கோ காதல் அதன்மீது. கிட்டத்தட்ட உடலுறவுக்கான காதல். காலைப்பயிற்சி செய்யுமுன்பே, இறுக்கக்கட்டியதாய் அதிர்ந்துகொண்டிருக்கும் கம்பிக்குக் கொடுக்கிறாய் முத்தம். உன்னை சரிவரத் தாங்குமாறு வேண்டுகிறாய் அதை. உடலுக்கு நளினமும் உறுப்புகளுக்கு அறிவுணர்ச்சியும் வழங்குமாறு கேட்கிறாய். இரவில் பெட்டியில் சுற்றிவைக்கப்பட்டுள்ள அதைப் பார்க்கப்போய் தடவிக்கொடுத்து வாஞ்சையுடன் கன்னத்தை அதனுடன் வைத்து உரசுகிறாய்.

வன்முறையால் வெல்வோரைக் கண்டிருப்பாய். உன் கம்பியை அப்படி அடக்கிப்பார். கம்பியோ சிறுத்தையைப் போன்றது. சுற்றி ஆரவாரிக்கும் கூட்டத்துக்கோ மிகவும் பிடித்தது ரத்தம் என்பது ஏற்கனவே தெரிந்த ஒன்று. எனவே கம்பியை நண்பனாக்கிக்கொண்டுவிட முயற்சிசெய்."

--------------
Jean Genet, Le funambule – Œuvres completes – Tome 5, Paris, 1958.
English translation by Bernard Frechtman: The Funambulists. Evergreen Review 32, April-May 1964.

குறிப்பு - சுமார் பதினைந்து ஆண்டுகள் முன்பு ஆங்கில வழி தொடங்கிய இந்த மொழியாக்கத்தை, சென்ற ஆண்டுதான் ஃப்ரெஞ்சு மூலத்திலிருந்து செய்து முடித்தேன். கதையில் முதல் பகுதி மாத்திரம் இங்கே.

ஜெனேவின் இந்தக்கதையை வாசிக்கும்போது ஒருவிஷயம் - ஃப்ரைட்ரிக்ஹ் நீட்ஷேவின் ஜாரதுஷ்டிரன் சந்திக்கும் முக்கியக் கழைக்கூத்தாடிப் பாத்திரம் நினைவில் வருகிறது. அந்தக் கழைக்கூத்தாடி கம்பியில் நடந்துசெல்வது, நம் காலகட்ட மனிதனின் முயற்சிதான் - அதாவது அறிவின் பெருக்கம், உணர்வின் பதற்றம் இவற்றுக்கு இடையிலான நிலையில் ஏற்படும் கிறுகிறுப்பையே முன்வைத்து மேற்செல்லும் கலை-முயற்சி இது. கீழே சந்தையும் வேடிக்கை பார்க்கும் மக்கட்கூட்டமும். கம்பியில் நடப்பதை இன்னும் வேகமாகச் செய்யவேண்டும் என்று வாதிடும் ஒரு கோமாளி, அந்தக் கழைக்கூத்தாடி மீது பாய்கிறான். கோமாளி ஒரு dabbler. கலையில் அவன் செய்யும் கூத்து, கழைக்கூத்தாடியின், கலையின் வீழ்ச்சியில் போய் முடிகிறது. கீழேவிழும் கலைஞனின் உடலை எடுத்துச்செல்லும் ஜாரதுஷ்டிரன், அதை ஒரு மரப்பொந்தில் புதைக்கிறான். ஜாரதுஷ்டிரனுக்கு இந்த சம்பவம் ஒரு பாடமாகிறது. கழைக்கூத்தாடி போல இனி அவன் மக்களுடன் நேரடியாகப் பேசப்போவதில்லை. ஊரிலிருந்து நீங்கும் அவன் சக கலைஞர்களுடன் மாத்திரம் இனி பேசுவான்.

அண்மையில் ரவி (குவளைக்கண்ணன்) ஆங்கில வழி மொழியாக்கம் செய்திருக்கும் ஜாரதுஷ்டிரன் பேசுகிறான் புத்தகத்தில் இந்தப் பகுதி எவ்வாறு செய்யப்பட்டிருக்கிறது என்பதை வாசிக்க ஆர்வமுண்டு!

கம்பிமேல் நடத்தல் பற்றி இதேபோல ஆராய்ந்திருப்பவர் ஃப்ரெஞ்சு ஆய்வாளர் ரோஜர் கைல்லோய் (Roger Caillois, 1913-1978). விளையாட்டுக்கள் பற்றி இவர் எழுதியிருக்கும் மிக முக்கியப் புத்தகம், Les Jeux et les Hommes. (Man, Play and Games என் ஆங்கிலத்தில் வெளியான மிகப் பிரமாதமான இந்தப்புத்தகத்தை என்னிடமிருந்து யாரோ சுட்டுக்கொண்டு போய்விட்டார்கள்!) அதில் கம்பிமேல் நடத்தல், சிறார் தட்டாமாலை சுற்றுதல் உள்ளிட்ட சிலவகை நாட்டியங்களை கிறுகிறுப்பு-விளையாட்டு என இவர் வகைப்படுத்துகிறார். Ilinx என இவர் கூறும் கிரேக்க மொழிப் பதத்துக்கு கிறுகிறுப்பு எனப் பொருள்.

பிறகான-நவீனத்துவ சிந்தனையில் ழான் போத்ரியார் கூறும் கிறுகிறுப்பும் இதுதான்.

26.4.08

ஜர்னலிஸத்தைத் தாண்டி ஈக்கோவின் நாவல்

ஜர்னலிஸத்தை இலக்கியமாக்குவது என்ற மேற்கத்திய உலக எழுத்தாளர்கள் ஓரு காலத்தில் செயல்பட்டார்கள். இன்றைக்குப் படுவார்களா என்று தெரியவில்லை.

ஜர்னலிஸத்தை வைத்து இலக்கியத்தை சாதா-சமாச்சாரமாக ஆக்கிவிடுவது இந்தியப் பத்திரிகைகளின் வழக்கம். ஞாயிற்றுக்கிழமை காலை அதிக நேரம் குடிக்கப்படுகிற காப்பி, அனுபவித்து வெளியேற்றுகிற மலம் மற்றும் matrimonial இத்யாதிகளின் அணிவகுப்பில் இலக்கியத்தையும் சேர்க்கப் பண்ணிய கைங்கர்யம் தி ஹிந்து பத்திரிகைக்கே உரித்தானது. காலனித்துவ matrix-இல், இந்தோ-ஆங்கில ஜர்னலிஸ அளவுகோல்களை வைத்துக்கொண்டு, அவற்றுக்கு இணையாக இந்திய மொழிகளின் இலக்கியம் உண்டா என்று பரிசோதித்துப் பார்த்துக்கொள்கிற அசட்டுத்தனமும்கூட.

1994 மே முதல் தேதியிட்ட தி ஹிந்து இலக்கிய இணைப்பில் இந்திய மொழிகளிலும் இந்தியாவில் எழுதப்படுகிற நவீன-ஆங்கில இலக்கியத்திலும் (இந்த இடத்தில் ஸல்மான் ருஷ்டி தவிர இதரர்கள் என்ன கிழித்தார்கள் என்பது கேள்வி) எதார்த்தமான நாவல்கள் வரவில்லையே ஏன்று அங்கலாய்க்கிறார் ஓரு விமர்சனப்பிரகிருதி. வரவில்லை ஏன்றால் அது எதனால் ஏன்ற கேள்விக்குப் போகாமல் நவீனத்துவ, பிறகான-நவீனத்துவ நாவல்களைச் சாடுகிறார்.

வெகுகாலமாக பெண்ணின் அழகிய முகத்தை நினைக்கப் பண்ணிய நிலவு, இன்று அவளுடைய குழிகள், தழும்புகள் நிறைந்த (pockmarked) முகத்தை நினைவுபடுத்த வேண்டும் இலக்கியவாதிகளிடத்தில் என்று வாதிடுகிறார் இவர். சரி, நினைவுபடுத்தட்டும்.

ஆனால், உம்பர்ட்டோ ஈக்கோவின் (Umberto Eco) சமீபத்திய நாவலில் நிலவு பற்றி வந்துள்ள விவரணை இவருக்கு வேப்பங்காய். நிலவின் பரப்பாக, ஓடிக் கொண்டிருக்கும் கடிகாரத்தை, உம்பர்ட்டோ ஈக்கோ தன் Foucault's Pendulum நாவலில் எழுதுவது இவருக்குத் தவறாகி விடுகிறது.

நிலவை உருவகமாக (metaphor) ஆக்கிப் பாடிவந்த ரொமான்டிக் நபர்களின் வரிசையில் வருகிற தி ஹிந்து விமர்சனப் பிரகிருதிக்கு, காலப்பரிமாணத்தை உணர்த்துகிறவாறு நிலவையும் கடிகாரத்தையும் metonymy-யாக (அதுதான் ஆகுபெயர்) இணைக்கிற moondial பற்றி எழுதினால் பொறுக்கவில்லை. நிஜக்கடிகாரத்தை நிலவாக மிதக்கிற மாய வான்வெளியில் (imaginary space) தொங்கவிட்டால் தாங்கிக்கொள்ள முடியவில்லை!

கற்பனைத்தோட்டத்து மரக்கிளைகளிலும் பாறைகளிலும் நிஜ கடிகாரங்களைக் காயப்போட்டு ஸால்வடோர் டாலி வரைந்த ஓவியங்களுடன் தொடங்குகிற நவீனத்துவம் இன்றுவரை வந்திருக்கிற பாதை அறியாமல் எழுதுகிற இத்தகையோர்தாம் இந்தோ-ஆங்கில இலக்கிய விமர்சகர்கள். இவர்கள் வழிமொழியும் அசட்டு ஜர்னலிஸம்தான் ஆங்கில இலக்கியம் மற்றும் இந்திய மொழிகளின் இலக்கியம். ஐயோ பாவம்!

"பார்க்கிற ஓவ்வொரு பொருளிலும் ஏதோ சில குறியீடுகளைத் தேடிக்கொண்டிருந்தேன். குறியீடுகளைச் சேர்த்தும் இணைத்தும் பொருத்திப்பார்த்தும் பழக்கப்பட்டுப்போகின்றன நமது மூளைகள். இப்படியான விளையாட்டை (game of association) நிறுத்தவே முடியாமல் போகிறது" என்கிறான் Foucault's Pendulum நாவலின் கதைசொல்லி காஸபான்.

Templars என்கிற ரகசிய அமைப்பினர் பற்றி அறிவதற்காக ஐந்து ஆண்டுகளாக ஃப்ரான்சிலும் போர்ச்சுகல் நாட்டிலும் அலைந்து, பாரீஸ் நகரத்தின் தெருக்களில் நள்ளிரவில் தனியாகத் திரிந்து, medieaval magic மற்றும் occult பற்றி சுமார் 1,500 புத்தகங்களைப் படித்து வெற்றிக்காக அன்றி பரிசோதனைக்காகவே எழுதப்பட்ட Foucault's Pendulum நாவல் பற்றி தாறுமாறாக எழுதும் கைகள் இலக்கியம் அறியுமோ என்னவோ, தினம் 300,000 பிரதிகளை மலத்துக்குள் அனுப்பித்தருகிற திமிரைத் தம் சொத்தாகக் கொண்டவை இக்கைகள்.

ஆறுதலாக ஓரே விஷயம். இந்தத் திமிருக்கு தமிழ் ஆங்கிலம் என்ற பாகுபாடில்லை.

வித்யாசம் இதழ் 1, சென்னை, 1994.


குறிப்பு -
மேலே காட்டமாகக் குறிப்பிடப்படும் விமர்சகர், அப்போது Penguin India-வுக்குப் பொறுப்பாக இருந்த எழுத்தாளர் டேவிட் டேவிதர்.

இன்று தமிழில் எழுதும் பல எழுத்தாளர்கள் - தங்கள் கருத்துக்கள் எப்படியிருப்பினும் - என்னைப்போல இருப்பதில்லை, நல்ல diplomacy கடைப்பிடிப்பவர்கள் என்று கூறத்தோன்றுகிறது!

படம் -
பாரீஸ் நகரின் பாந்தியான் நினைவகத்தில் உள்ள Foucault's Pendulum - 2000-ஆம் ஆண்டு சென்ற போது எடுத்தது.

25.4.08

மருத்துவர் ஸென் - சிறைதேடிவரும் விருது

கடந்த ஓராண்டாக இந்திய மாநிலம் சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் மருத்துவர் பினாயக் ஸென், உலக உடல்நலம் மற்றும் மனித உரிமைகளுக்கான ஜொனாதன் மான் விருதுக்கென தேர்வாகியிருக்கிறார் (பத்தாண்டுகள் முன்பு விமான விபத்தில் மரணமடைந்த ஜொனாதன் மான், எய்ட்ஸ் நோய்ப்பரவல் தடுப்புக்காகப் பெரிதும் உழைத்தவர், பதவிகளைத் துறக்கத் தயங்காதவர்).

மருத்துவர் ஸென் சுமக்கும் குற்றச்சாட்டுகள் பல - அரசு தடைசெய்த நக்ஸலைட் அமைப்பான மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்புகொண்டவர், குறிப்பாக நாராயண் ஸன்யால் என்ற அந்த அமைப்பின் முக்கியத்தலைவரை அதே ராய்ப்பூர் சிறையில் 33 முறை சந்தித்து, முக்கியச்செய்திகள் பரிமாறக் காரணமாக அமைந்தவர் (courier) என்பவை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள். இதுதொடர்பான நீதிமன்ற வழக்கு விசாரணை, ஏப்ரல் 30-ஆம் நாள் அதாவது வரும் புதன்கிழமை, ராய்ப்பூரில் தொடங்க இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலத்தின் வறிய- மற்றும் பழங்குடி மக்களுக்கு ஆற்றிய சேவைக்காகவும் மனித உரிமைகள் தொடர்பான உறுதியான கடப்பாட்டுக்காகவும் இந்த விருதுக்கு மருத்துவர் ஸென்
தேர்வாகியிருப்பதாக விருது தரும் நிறுவனம் Global Health Council கூறியிருக்கிறது.

மருத்துவர் ஸென்னையும் இவர் துணைவியார் இலினா ஸென்னையும் பல ஆண்டுகளாக நான் நன்கறிவேன். ஆனால் நேரில் சந்திக்கும் வாய்ப்பு தவறியிருக்கிறது. பியூஸிஎல் எனப்படும் மக்கள் சிவில் உரிமை அமைப்பின் துணைத்தலைவர் என்ற முறையில் இவருடன் எனக்குத் தொடர்புண்டு. இவருடைய சமுதாய-மருத்துவப்பணி மிக முக்கியமானது. கடந்த மே மாதம் இவர் கொல்கொத்தா நகரிலிருந்து ரயிலில் ராய்ப்பூர் வரும் வழியில் கைதுசெய்யப்படுவதற்கு சற்றுமுன்புவரை இவருடன் தொலைபேசினேன்.

1974-ஆம் ஆண்டில் தமிழகத்தின் வேலூர் கிறித்துவ மருத்துவக் கல்லூரியில் சிறார் உடல்நலம் குறித்த மேற்படிப்பு வரை படித்தவர், ஸென். பிறகு காந்தியார், தாகூர், ஸி. எஃப். ஆண்ட்ரூஸ் போன்றோர் குறித்த புத்தகங்களை எழுதியவரான மர்ஜோரி ஸைக்ஸ் அம்மையாரின் Quaker கருத்துக்களால் கவரப்பட்டு சேவைநோக்கில் மருத்துவப்பணியை மேற்கொண்டவர், ஸென்.

1984-ஆம் ஆண்டின் தொடக்கத்தில், அப்போது மத்தியப்பிரதேச மாநிலமாக இருந்த தல்லி-ராஜ்ஹரா பகுதியில் பத்திரிகைப்பணி நிமித்தம் பயணம் செய்து, பெயர்பெற்ற தொழிற்சங்கத் தலைவர் சங்கர் குஹா நியோகியைச் சந்தித்துப் பேட்டிகண்டேன். அப்போது நியோகி, மருத்துவர் ஸென் பற்றிப் பாராட்டிப் பேசினார். பிறகு சில ஆண்டுகள் கழித்து அப்பகுதி சுரங்க முதலாளிகளின் குண்டர் படை நியோகியைச் சுட்டுக்கொன்றது. அதையடுத்து அவர் துணைவியார் ஆஷா குஹா நியோகி சென்னை வந்தபோதிருந்து எனக்கு மருத்துவர் ஸென்னுடன் தொடர்பு இருந்துவந்திருக்கிறது.

பிறகு 2004-ஆம் ஆண்டுவாக்கில் ஸல்வா ஜுடும் என்ற அமைப்பு சத்தீஸ்கர் அரசாங்கத்தின் மறைமுக/நேரடி ஆதரவுடன் உருவானது. இந்த அமைப்புக்கு ஆயுதங்களும் கிடைத்தன - அரசுத்தரப்பிடமிருந்துதான். பாரதீய ஜனதா, காங்கிரஸ் தலைவர்களின் ஆதரவும் உண்டு. இந்த அமைப்பும் மாவோயிஸ்ட்களும் காட்டுப்பகுதிகளில் பல இடங்களில் மோதியிருக்கிறார்கள். மாவோயிஸ்ட்ளை ஆதரிக்கும் பழங்குடியினரை வேட்டையாடுவதும் ஒடுக்குவதும் தீவிரமானபோது, அங்கு நடந்த கொலைகள், உள்ள நிலைமைகளை வெளியுலகம் அறியச்செய்தவர்களில் மருத்துவர் ஸென் முக்கியமானவர்.

மருத்துவர் ஸென் மீது சத்தீஸ்கர் அரசாங்கம் சுமத்தியிருக்கும் குற்றச்சாட்டுகள் உள்நோக்கம் கொண்டவை, ஆதாரமற்றவை, எனவே அரசாங்கம் இந்தக் குற்றச்சாட்டுகளை விலக்கிக்கொண்டு நிபந்தனையின்றி இவரை விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்று வருகின்றன.

அதே வேளை, இத்தகைய குற்றச்சாட்டுகள் தீவிரமானவை என்று கூறி உச்சநீதி மன்றம் இவருக்குப் பிணையும் வழங்க மறுத்திருக்கிறது.

தீவிர இடதுசாரி அமைப்புக்களுடன் தொடர்பிலிருப்பதே குற்றம் என்றால் மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகைக்காரர்கள், அரசியல்வாதிகள் இன்னும் பலரும் சிறைக்குத்தான் செல்லவேண்டும். அதனாலென்ன, இப்படிப் பலரும் சிறைக்குப் போகக்கூடிய காலம் வருவதற்கு முன்னோடியாகத்தான் மருத்துவர் ஸென் அங்கே போயிருக்கிறார் என்று நினைக்கிறேன்!

மருத்துவர் ஸென் கடந்த மே மாதம் கைதான உடனாகவே நான் பணிபுரியும் Amnesty International சார்பாக வெளியான அறிக்கை.

தற்போது அது பற்றிய செயல்


மராட்டிய மாநிலம் வார்தாவில் செயல்படும் மகாத்மா காந்தி சர்வதேசப் பல்கலைக்கழகத்தில் மகளிர் ஆய்வுத்துறை தலைவராக இருக்கும் இலினா ஸென்னின் பேட்டி, தமிழில் தலித முரசு ஜனவர் 2008 இதழில்.

மருத்துவர் ஸென் சிறைவாசம் குறித்து மாலன் எழுதியது.

24.4.08

போதலேரைத் தமிழாக்குவதில்...

களிமிகும் அவளுக்கு

குழைக்காடொத்த அழகில்
உன் சிரசம் சைகை பாங்கு.
வெளி விசும்பின் புதுக்காற்று
நகையாடும் உன் முகம்.

நீ உரசும் சருவரிப் பயணி
உன் உடல் கரம் தோளினின்றும்
நலமெனப் பாயும்
ஒளிபட்டுக்கூசுவான் கண்.

ஆடையில் நீ சிந்திய
கணீரெனப் பல வண்ணம்
கவிபலர் மனதில் ஊடுருவும்
பலமலர்க் களிநடப் படிமம்.

அணங்காய் நீ அணியும்
பித்தமெனும் ஆடைபல
ஆன்மா உனதின் சின்னம்.
என்னைப் பித்தாக்கும் பிச்சியே!
வெறுக்கிறேன்
அதே அளவு
நேசிக்கிறேன் உன்னை.

அசோக வனத்தில்
அவ்வப்போது என்னைத்
தளர்வுடன் நான் தள்ள,
மார்புத்தசை
சூரியன் கிழிக்க,
உணர்வேன்
முரண்நகையாய்.

இதயமெனதை
பசிய வசந்தம்
இத்தனைக்கு இழிபாட,
இயற்கையின்
இறுமாப்பு கண்டு
தண்டித்தேன்
மலரொன்றை.

அதேபோல ஒரிரவு
உன்மத்தமாய்க்
களியாட்டம் பல
ஒலிக்கும் நேரமாய்
உடலுனதன் பொக்கிஷம் பல
நோக்கித் தவழ்வேன்
கோழையாய். ஏன்?

ஊன் களிக்கும் உனை ஒறுத்து
பொறுத்த உன் முலை இடறி
திகைக்கும் உன் விலாவில்
ஆழமாய் அகலமாய்க்
காயப்படுத்தத்தான்.

கிறுகிறுக்கும் களிப்பே!
என் சகோதரியே!

இன்னும் அழகாய்ச் சுடரும்
உன் புதிய உதடுகளில்
கொஞ்சம்
நஞ்சூட்டத்தான்.

Charles Baudelaire, À celle qui est trop gaie, Les Fleurs du mal

போதலேரைத் தமிழாக்குவதில் பிரச்னைகள் பல. குறிப்பாக செந்தமிழ்ச் சொற்களைத் தேடித்தான் அடைய முடிகிறது.

போதலேரின் இந்தக் கவிதை முதலில் தடைசெய்யப்பட்டிருந்தது. காரணம் என்ன என்பதை வாசிப்பவர்கள் ஊகித்துக்கொள்ளலாம். இப்போது இதைத் தமிழில் கொண்டுவருவதில் பிரச்னையில்லை என்று நினைக்கிறேன்.

23.4.08

மிஷெல் ஃபூக்கோ விரிவுரைகள், புத்தகங்களாக

பாரீஸ் நகரில் இயங்கும் Collège de France என்ற பிரத்யேக உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைப்பில் 1969-ஆம் ஆண்டு தொடங்கி தம்முடைய வாழ்நாள் இறுதிவரை - அதாவது 1984-ஆம் ஆண்டு வரை - பேராசிரியாரகப் பணியாற்றினார் மிஷெல் ஃபூக்கோ. "சிந்தனை-அமைப்புக்களின் வரலாறு குறித்து ஆராயும் பேராசிரியர்" என அவருடைய பொறுப்பு வர்ணிக்கப்பெற்றது.

Collège de France கல்வி-அமைப்பில் பேராசிரியர்கள், தங்கள் ஆய்வுகளை, ஆண்டுக்கு ஒரு முறை என விரிவுரையாற்ற வேண்டும். வேறு பணி என ஏதுமில்லை. விரிவுரைகள் சில வாரங்கள் வரை செல்லும். அதை யாரும் கேட்கலாம்.

ஆண்டுதோறும் முக்கிய மாணவர்கள் சிலரை வைத்துக்கொண்டு தாம் நடத்திய ஆய்வுகளை, இந்த விரிவுரைகளின் போதே முன்வைத்துவந்தார் ஃபூக்கோ. இந்த விரிவுரைகளைக் கேட்பதற்கென பலரும் திரண்டனர் - இதேபோல Collège de France அமைப்பில் விரிவுரைகளை நிகழ்த்தியவர், ரோலான் பார்த்.

ஃபூக்கோவின் இந்த விரிவுரைகள் கடந்த சில ஆண்டுகளாக ஃப்ரெஞ்சிலும் ஆங்கிலத்திலும் புத்தகங்களாக வரத்தொடங்கியிருக்கின்றன. இந்த விரிவுரைகளின் வரிசை ஆச்சர்யமான ஒரு செய்தியை நமக்குச் சொல்கிறது - அதாவது, தம்முடைய புதிய சிந்தனைக்கூறுகளை இந்த விரிவுரைகள்வழி உரசிப்பார்த்து அதில் வரும் feedback என்பதைப் பிரமாதமாக உபயோகித்து அடுத்த ஓரிரு ஆண்டுகளில் ஒரு புத்தகத்தை எழுதிவிடுகிற அசாத்தியப் பணியைச் சாதித்திருக்கிறார் ஃபூக்கோ என்று தெரிகிறது. அதே சமயத்தில் தம்முடைய அடுத்த பரிசோதனையை முன்வைக்கும் களமாக அடுத்த விரிவுரை என இவருடைய பணி சென்றிருக்கிறது.

1970-ஆம் ஆண்டு ஃபூக்கோ நிகழ்த்திய முதல் உரை - L'Ordre du Discours அதாவது சொல்லாடலின் ஒழுங்கு. (இதன் சில பக்கங்களை நேரடியாக ஃப்ரெஞ்சிலிருந்து தமிழில் ஆக்கியிருக்கிறார், வெ. ஸ்ரீராம். சுமார் பத்தாண்டுகள் முன்பு என நினைக்கிறேன். இந்த உரை க்ரியா வெளியீடாக வரவும் இருந்தது. என்ன காரணத்தினாலோ நடக்கவில்லை). இதற்கு அடித்தளமாக அமைந்த ஃபூக்கோவின் L’Archéologie du savoir - அறிவுக்கான தொல்பொருளியல் புத்தகத்தின் சில பகுதிகளை, நான் ஆங்கில வழி தமிழாக்கியிருந்தேன் - பதினெட்டு ஆண்டுகள் முன்பே.

1971-ஆம் ஆண்டு ஃபூக்கோ நிகழ்த்திய உரை - La volonté de savoir - அறிவுக்கான சங்கற்பம். இதன் அடிப்படையில் 1976-ஆம் ஆண்டு வெளியானதே Histoire de la Sexualité - பாலியல்நிலையின் வரலாறு புத்தகத்தின் முதல்பாகம்.

1972, 1973-ஆம் ஆண்டுகளில் நிகழ்த்திய உரைகள் முறையே - Théories et institutions pénales - தண்டனை குறித்த கோட்பாடுகள், தண்டனை நிறுவனங்கள் மற்றும் La société punitive - தண்டிக்கும் சமுதாயம். இவற்றின் அடிப்படையில் 1975-ஆம் ஆண்டு வெளியானது Surveillir et punir - கண்காணிப்பதும் தண்டிப்பதும் புத்தகம்.

1974, 1975-ஆம் ஆண்டுகளில் நிகழ்த்திய உரைகள் முறையே - Le pouvoir psychiatrique -மனோவியலின் அதிகாரம் மற்றும் Les anormaux - இயல்பு-மீறியவர்கள்/மீறியவை. இவை ஃபூக்கோ ஏற்கனவே எழுதியிருந்த Histoire de la Folie - பைத்தியமும் நாகரீகமும் புத்தகத்தின் சிந்தனையை மறுவரையறை செய்கிற முயற்சி.

1976, 1977, 1978-ஆம் ஆண்டுகளில் நிகழ்த்திய உரைகள் முறையே - Il faut défendre la société - சமுதாயத்தைப் பாதுகாக்கும் உறுதி, La gouvernementalité - அரசாங்கத்துவம் மற்றும் Sécurité, territoire et population - பாதுகாப்பு, பிரதேசம், மக்கட்தொகை. ஃபூக்கோ ஏற்கனவே எழுதியிருந்த Histoire de la Sexualité - பாலியல்நிலையின் வரலாறு புத்தகத்தின் முதல் பாகத்தின் முக்கிய நீட்சி இவை எனக் கொள்ளலாம். குறிப்பாக, நவீன அரசு-எந்திரத்தின் உருவாக்கம், அத்துடன் அறிவுத்துறைகளுக்குள்ள உறவு பற்றி ஃபூக்கோ ஆராய்கிறார்.

1979, 1981-ஆம் ஆண்டுகளில் முறையே Naissance de la biopolitique - உயிர்-அரசியலின் தோற்றம் மற்றும் Du gouvernement des vivants - உயிர்வாழ்வோரின் அரசாங்கம் குறித்து என விரிகின்றன ஃபூக்கோவின் உரைகள்.

1980-ஆம் ஆண்டில் சாலை விபத்தில மரணமடைந்த தம் நண்பர் ரோலான் பார்த் குறித்து ஃபூக்கோ உரையாற்றியிருக்கிறார்.

இறுதியாக, 1982-ஆம் ஆண்டில் Subjectivité et vérité - தன்னிலையும் உண்மையும், பிறகு 1983-ஆம் ஆண்டில் L’herméneutique du sujet - தன்னிலையின் வரலாற்றுப்பொருள் கொள்ளல் என நிகழ்த்தப்பட்ட உரைகளும் உண்டு. இவை, பாலியல்நிலையின் வரலாறு புத்தகத்தின் இரண்டாம், மூன்றாம் பாகங்களுக்கு அடித்தளமாக அமைந்தவை. பண்டைய கிரேக்கத்தின் தன்னிலை, உண்மை, பாலியல்நிலை குறித்த ஆய்வுகள் இவை.

தமிழில் எழுதவேண்டியவற்றின் பட்டியலில் ஃபூக்கோவின் விரிவுரை-உத்திகள் பற்றிய கட்டுரையையும் சேர்க்கவேண்டியதுதான்.

சாவைக்கோரும் உரிமையும் வாழ்வு மீதான அதிகாரமும் - மிஷெல் ஃபூக்கோ
உயிர்-எழுத்து இதழில் மூன்று பகுதிகளாக் என் மொழியாக்கத்தில் வந்த கட்டுரை

ஃபூக்கோவும் சையதும் – சந்திப்பும் விவாதமும் - தீராநதியில் வந்த என் கட்டுரை

22.4.08

திடீர் வலிப்பு: ஆயிரமாண்டின் முடிவும் முடிகிற நேரக்கணக்கும் - ழான் போத்ரியார்


இந்தப் புத்தாயிரமாண்டை முடித்துவைக்க மனமில்லாது போகும்நிலையில் - ஏன், இந்த இருபதாம் நூற்றாண்டையே முடித்துவைக்க மனமில்லாது போகும்நிலையில் - அதை எப்படித் தாண்டப்போகிறோம்? இந்த நூற்றாண்டின் சுவடுகளில் நடந்த நிகழ்வுகள், கருத்துருவங்கள், வன்முறைகள் ஆகியவற்றுக்காக வருந்தி இரங்குகிற முடிவற்ற பணியில் நாம் ஈடுபட்டுவரும் நிலையில், அதை எப்படித்தான் நம்மால் தாண்ட முடியும்? இனி நமக்கில்லை என்றாகிவிட்ட ஒன்றான நிழலைப் பன்மையில் எப்படித் தாண்டப்போகிறோம்?

இந்த நூற்றாண்டின் வெளியாகிற அனுதாபங்கள், கிட்டத்தட்ட ஒழுக்க வேடத்தனமான நினைவுகூரல்கள், பின்வாங்கல்கள் இவையெல்லாம் காட்டுவது எதை? இந்த நூற்றாண்டின் நிகழ்வுகளை நம் நினைவை வடிகட்டிப் பின்னோக்கியோட்டிப் பார்க்க முற்படுகிறோம் என்ற உணர்வை இவை வருவிக்கின்றன.

அதே நேரம், இந்த நூற்றாண்டின் நிகழ்வுகளுக்கு அர்த்தம் கற்பிப்பது நம்முடைய நோக்கமல்ல. இந்த நிகழ்வுகளின் அர்த்தம் என்பதே இவற்றின் வழியில் எங்கோ தவறிப்போய்விட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது. மாறாக, இந்த நினைவுகளைச் சலவைசெய்து மீள்-புழக்கத்தில் விடுவதே நம்முடைய நோக்கம் என்பேன். இன்னும் சொல்லப்போனால், இப்படி இவற்றைச் சலவைசெய்து புழக்கத்தில் விடுவதே இந்த நூற்றாண்டின், இந்த யுகத்தின், முக்கியச்செயல்பாடு. அதாவது, கறைபட்ட வரலாற்றை, கணக்கில் வராத பணத்தை, அழுகிய பிரக்ஞையை, மாசுபடிந்த நம்முடைய புவிப்பரப்பை இப்படித் துப்புரவுசெய்து, சுத்திகரிப்புசெய்து புழக்கத்தில் விடுவதே இந்தச் செயல்பாடு.

ஆக, நினைவைச் சலவைசெய்வதும் சுகாதாரம் வேண்டி சுற்றுச்சூழலைத் துப்புரவு செய்வதும் இனங்களையே சுத்திகரிப்பு செய்வதும் பரஸ்பரம் தொடர்பு கொண்டவையே – நினைவைக் கரைப்பது என்ற நிலையில். "முன்னேறுவதே வரலாறு" என்ற நம்பிக்கையும் செயல்பாடும் கொண்டுவருகிற எவ்விதப்பிரச்னைகளையும் தீர்க்காமல் அவற்றிலிருந்து நாம் விலகிச்செல்வதும் இப்படித்தான் நடக்கிறது. பின்னிறங்கும் வரலாறு ஒன்றில், அது சரியான அரசியலுக்கு இட்டுச்செல்லும் என்ற நினைவேக்க நம்பிக்கையில், நாம் மூழ்குவதும் இப்படித்தான்.

நினைவின், சாவின் பின்னிறக்க விரிப்பு என்பது இப்படியாகத்தானே நம்மை ஆட்டிப்படைக்க, எதிர்கால நிகழ்வுகள் இயல்பாக நடப்பதற்கான எவ்வித வாய்ப்பையும் இழந்துவருகிறோம் நாம். "இரண்டாயிரமாம் ஆண்டு வரப்போவதேயில்லை" என்ற கருத்தை நான் முன்வைத்துப் பேசியது இதனால்தான். காரணம் இந்த இருபதாம் நூற்றாண்டின் வரலாறு ஏற்கனவே முடிந்துவிட்டது என்கிறேன், இந்த இடைப்பட்ட காலத்தை முடிவற்றதாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்கிறேன்!

எனவே, உருவக நிலையில் சொல்லப்போனால், நாம் எதிர்காலத்துக்குச் செல்லப்போவதே இல்லை. ஆக, புத்தாயிரமாண்டு பிறக்கும் நாள் முன்பாக நின்றுகொண்டே, அது பற்றியதாக நாம் பேசி எதிர்கொள்வது நாளை என்பதேயற்ற ஒரு புத்தாயிரமாண்டு. இதுவே புத்தாயிரமாண்டு பற்றிய நம்முடைய புரிதல்.

ஆனால் மேற்கத்திய கலாச்சாரத்தின் ஆயிரமாமாண்டு வந்தபோதோ நிலைமை முற்றிலும் வேறாக இருந்தது. அப்போது பீதியும் பதற்றமும் தோன்றின என்றாலும் அவையென்னவோ ஏசுநாதரின் இரண்டாம் வருகைக்கும் கடவுளின் சாம்ராஜ்யத்தின் எழுச்சிக்கும் முடிவற்ற சொர்க்கம் என்ற உறுதிமொழியானது நிறைவேற்றப்படுவதற்கும் கட்டியங்கூறுவதாக இருக்கலாம் என்றும் உணரப்பட்டது அப்போது.

ஆனால் நாம் கணக்குத்தீர்வையாக எதிர்கொள்ளும் இந்தப் புத்தாயிரமாண்டு என்பது, தனக்குள்ளாகவே வளைந்துகொள்கிற, மூடிக்கொள்கிற ஒன்றாக நம்முன் நிற்கிறது. ஆக, புத்தாயிரம் என்ற வகையில் நம்மிடம் விஞ்சியிருப்பது, அந்தப் பூஜ்யத்தருணத்தை நோக்கிய நாள்கணக்கு மற்றும் நேரக்கணக்கு மட்டுமே.

- Baudrillard, Jean. The End of the Millennium or the Countdown, Economy and Society 26/4, November 1997, pp. 447-455

1999
-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னையிலிருந்து லண்டன் வருவதற்கு சற்றே முன்பாகச் செய்த மொழியாக்கத்தின் ஒரு பகுதி.


படம் -
The Four Horsemen of the Apocalypse.(1498)
ஜெர்மன் மறுமலர்ச்சிக் கலைஞர் ஆல்ப்ரெச்ஹ்ட் டூரர் மரத்தில் செதுக்கியது.

21.4.08

இணையத்தில் இலக்கியமும் பிற நூல்களும் தேட - 2

இணையத்தில் உலக இலக்கிய, அறிவியல் நூல்களைத் தேடுவோர், வாசிக்க விரும்புவோருக்கு சுவாரசியமான தளங்கள் பல உண்டு. எனக்குப் பயன்தரும் சிலதைத் தருகிறேன்.

Athena - ஆங்கிலம், ப்ரெஞ்சு உள்ளிட்ட மொழிகளில நூல்கள். தலைப்பு, ஆசிரியர், மொழி எதைவைத்தும் தேடலாம்.

Bartleby - செவ்வியல் ஆங்கில இலக்கியம், தத்துவம் மற்றும், அறிவியல் பிற நூல்கள் தேடி வாசிக்கலாம். சீன, ஜப்பானிய நூல்களும் உண்டு.

EServer - வாஷிங்கடன் பல்கலைக்கழகம் சார்பான இணையதளம். கலை இலக்கியம், தத்துவம் தொடர்பான சிற்றிதழ்கள், சஞ்சிகைக்ள் நிறைய.

Internet Public Library - சுமார் 15,000 புத்தகங்கள், குறிப்பாக பத்தொன்பதாம் நூற்றாண்டு ஆங்கில இலக்கியப் புத்தகங்கள்.

WESSWEB - ஆங்கிலம் தவிர பிற ஐரோப்பிய மொழிகளில் புத்தகங்கள்.

Bibliomania - உலகின் செவ்வியல் இலக்கிய நூல்கள், பெரும்பாலும் ஆங்கில மொழியாக்கத்தில் தேடி அடையலாம்.

Philosophy Alex Catalogue - தத்துவ நூல்களின் வரிசை.

இப்போதைக்கு இது போதும் என்று நினைக்கிறேன்! ஆக, நிறைய வாசிக்கலாம். நிறைவாக் எழுதலாம்.

இணையத்தில் இலக்கியமும் பிற நூல்களும் தேட - 1

19.4.08

புறப்பாடு - ஆர்தர் ரைம்போ

போதும்.
பார்த்தாகிவிட்டது,
சந்தித்தாகிவிட்டது
யாவகையும்
பார்வை.
போதும்.
நகரம் பலதின்
மாலையதன்
ஒளிஞாயிறதன்
சந்தடி
போதும்.
எப்போதைக்குமாக.
போதும்.
அறிந்தாகிவிட்டது
வாழ்வின்
நிறுத்தம் பல
ஓசை பல
பார்வையும்.
இனி
புறப்பாடு
ஆதரம்
இரைச்சலில்
புதிது நோக்கி.

- Arthur Rimbaud, Départ, Les Illuminations, 1886

பகுப்பு - கவிதை

18.4.08

ஊழிக்குப்பின் - ஆர்தர் ரைம்போ

ஊழி என்ற எண்ணம் அடங்கியவுடனே சிறுபுள்ளடிப் புல் மற்றும் அசையும் மணிமலரிடை முயலொன்று ஒடாநின்று பிறகு சிலந்திவலை வழியே பிரார்த்தித்து வானவில்லிடம்.

ஓ, மறையத்தொடங்கின மாணிக்கம் பல. ஏற்கனவே மொட்டவிழ்ந்த மலர் தேட. அசுத்தத் தெருவில் எழும்பின கடை பல. பலதளப்பபடகு பல இழுக்கப்பெற்றதோ கடல்நோக்கி, பழம்நூல் பலதின் அச்சுப்படமதில் காண்பதைப் போல.

நீலவண்ணத் தாடிக்காரன் கடையில் பெருகியது குருதி - கசாப்புக்கடை, ஸர்க்கஸ் பல வழியே. அங்கு ஜன்னல் பலதில் வெந்த முத்திரையோ கடவுளினது. பெருகின குருதியும் பாலும்.

நீர்நாய் பல தோண்டியமைத்தன பொந்துபல. 'பார்', உணவகம் பலதில் கொதித்தது பல்வகைக் கடுங்காப்பிப் பானம்.

பெரும் கண்ணாடிவீட்டின் ஜன்னல் பலதிலும் நீர் சொட்டச்சொட்ட, மரணத்துக்கு இரங்கும் குழவியர் கண்டதும் அற்புதப்படம் பல.

பட்டெனச் சாத்தியது கதவு. கிராமச்சதுக்கத்தில் கையாட்டினான் அந்தச்சிறுவன். அதைப் புரிந்தன, எங்கும் கோபுரம் பலதில் பருவநிலை காட்டும் சேவல்மானி பல, பளீரென வெடிக்கும் மாரிபட்டு.

ஆல்ப்ஸ் மலையில் பியானோ ஒன்றை நிறுவினாள் மதாம் எக்ஸ்... பேராலயப் பீடம் நூறாயிரமும் கொண்டாடின திருப்பலியை, முதல் திருவிருந்து பலதை.

கிளம்பின வணிகச்சாத்து பல. துருவ இரவின் பனிக்குழப்பத்தில் கட்டப்பெற்றது அதீதப்பிரகாசமெனும் பெயர்கொண்ட விடுதி.

பிறகெப்போதும் நரியதன் ஊளை புதினாப்பாலை பலதின் ஊடே கடக்க, அதைக் கேட்டது நிலவு. பழத்தோட்டத்தில் மரப்பாதுகை அணிந்து முணுமுணுத்த முல்லைப்பாடல் பல. இலைபடர்ந்த மரமடர்ந்த வயலெட் தோப்பு. வசந்தமிது என்றாள் யுக்காரிஸ் என்னிடம்.

குளமே, எழு! நுரைத்து அலைபுரண்டு பாலத்தைக் காட்டைத் தாண்டிச் செல். கறுத்த பாடைத்துணி, திருக்கின்னரம் பல. மின்னல், இடி. எழுந்து புரண்டு செல்! நீரும் துக்கமும் பல. அலையெழுந்து ஊழியாய்ப் பீறிடு மீண்டும்!

அலை பல பீறிட்டு, ஓ, அமிழ்ந்தன மாணிக்கம் பல! மொட்டவிழ்ந்த மலர் பலவும்தாம்! பரவசம் யாவும் போயின. என்ன அயர்வு! மட்கலத்தில் விளக்கேற்றும் யோகினியெனும் ராணி, தானறிந்த நாமறியா ஒன்றை, நமக்கிரங்கிச் சொல்லப்போவதுமில்லை இனி.

Arthur Rimbaud, Après le Déluge, Les Illuminations, 1886


இது 1871-ஆம் ஆண்டின் பாரீஸ் கம்யூன் கிளர்ச்சியை ஒட்டி, ஆர்தர் ரைம்போ எழுதிய கவிதை.

ரைம்போ பங்கேற்றதாகக் கருதப்படும் பாரீஸ் கம்யூன், இந்தக்கவிதைக்கான உடனடி உந்துதல். அதைவைத்து எழுதும்போது ஊழியின், உலகத்தின் வரலாறு வருகிறது. ஒருவகையில் நாமறிந்த நாகரீகத்தின், கலாச்சாரத்தின் வரலாறும் கூட. ஆக, இந்த மூன்றின் வரலாறும் இயையும் புள்ளி, இந்தக்கவிதை எனலாம்.

இதில் ennui என்ற ஷார்ல் போதலேரின் பெயர்பெற்ற வார்த்தையைத் தமிழாக்காமல் அப்படியே விட்டிருக்கிறேன். நகுலன் எழுத்தைப் படித்தவர்கள் இதை உணரலாம்.

மே 1968 பாரீஸ் கிளர்ச்சி நாற்பதாண்டுக்காலம் நிறைவடைவதை ஒட்டி, தமிழாக்கம்.

ஆர்தர் ரைம்போவின் உயிரெழுத்துக்கள் கவிதை மற்றும் ரைம்போ-பாரதி ஒப்பீடு பற்றி


பகுப்பு - கவிதை வரலாறு

17.4.08

மிஷெல் ஸெர் கட்டுரை - 1

"வேகத்துக்கு செய்மதி, சக்திக்கு அணுகுண்டு, வெளிக்கு இணையம், காலத்துக்கு அணுக்கழிவு என இவை நான்கும் world-objects, அதாவது உலகுதழுவும் பொருட்கள் என்க."

- மிஷெல் ஸெர்


இந்தக் கட்டுரையைப் படிக்கும் முன்பாக, உலகுதழுவும் மேற்கண்ட நம்காலத்திய பொருட்கள் தெற்காசிய-, இந்திய-, தமிழ்ப்பரப்புக்களில் எப்படி இயங்குகின்றன என்பதை ஒருமுறை நினைத்துக்கொள்வோம்.

இன்று செய்கோள்கள்/மதிகள் ஏராளம். அடுத்த மதியை விடப்போவது யார், எப்போது என்பது செய்தியல்ல, தவறி விழுந்தால் செய்தியதிர்ச்சி; பேரழிவு என்பது ஒருபுறமும் தேசப்பெருமை என்பது மறுபுறமுமாகப் பரவும் அணுகுண்டின் அழிவுமகிழ்ச்சி; கழிவெனும் கதிரியக்க எதிர்காலக் கவலை தவிர்த்த அணுசக்தி என்ற கடனட்டைப் புளகாங்கிதம்; இணையப்பரப்பில் இயங்கும் virtual எசப்பாட்டு அல்லது இரைச்சல் (நன்றி - வெங்கட்) எனப்போய்க்கொண்டிருக்கிறது பலருக்கு.

இந்த இருபத்தோராவது நூற்றாண்டின் – அதாவது மனிதம்-தாண்டிய கலாச்சாரம் குறித்த காலகட்டத்தின் - முக்கிய சிந்தனையாளர் மிஷெல் ஸெர் என்பதை ஏற்கனவே பார்த்திருக்கிறோம். சிந்தனைப்படைப்பின் விளிம்பில் நின்றவாறே தீவிர, புவி-தழுவும் தளத்தில் எழுதி, விவாதிப்பவர் மிஷெல் ஸெர். தம்முடைய பல புத்தகங்களில் இத்தகைய புவி-தழுவும் பொருட்களின் வரலாற்றை (history of world-objects) எழுதத் தொடங்கியவர் மிஷெல் ஸெர் எனலாம்.

இரண்டு ஆண்டுகள் முன்பு கனடா நாட்டில் இவர் ஆற்றிய ஓர் உரை ஃப்ரெஞ்சு மொழியிலிருந்து இங்கே பகுதிபகுதியாகத் தமிழாக்கப்படுகிறது. C-Theory என்ற இணையத் தத்துவ இதழில் முதலில் வெளியானது (1). 1990-ஆம் ஆண்டு வெளியான தம்முடைய இயற்கை-ஒப்பந்தம் என்ற புத்தகத்தின் (2) மீள்பார்வை என்று இந்தக் கட்டுரையைக் கூறுகிறார்.

இனி மேற்கொண்டு படிக்கலாம். குறிப்பாக, விஞ்ஞானிகள், சட்டவியல் நிபுணர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் என யாரும் பின்வரும் கட்டுரையைப் படிக்கலாம்!


இயற்கை-ஒப்பந்தம் புத்தகம் - ஒரு மீள்பார்வை

1. Ecology:

Ecology - அதாவது சூழல்/சூழலியல். Écologie என்ற இந்தச்சொல் ஃப்ரெஞ்சு மொழியில் புழக்கத்துக்கு வந்தது 1874-ஆம் ஆண்டு வாக்கில். இதற்கு எட்டாண்டுகள் முன்பு oekologie என ஜெர்மன் மொழியில் பாவித்தவர் இயற்கை-விஞ்ஞானி எர்னெஸ்ட் ஹாக்கல் என்று தெரிகிறது. ஆனால் 1852-ஆம் ஆண்டே, அமெரிக்க எழுத்தாளர்-சிந்தனையாளர் ஹென்றி டேவிட் தோரோ இந்தச் சொல்லைக் கண்டறிந்தார் என்று தோன்றுகிறது.

Ecology என்ற சொல்லுக்குப் பொருள் இரண்டு:

1. Ecology என்பது உயிரினங்கள் சிலதின் தொகுதிகள் அவற்றின் சூழலுடன் இடையிடுவம் செயல்பாட்டை ஆராயத் தலைப்படும் விஞ்ஞானத்துறை. ஃப்ரான்ஸ் நாட்டில் இது வென்டூ மலைப்பகுதியின் (Mount Ventoux) ஒட்டுமொத்தமான ஆய்வுடன் தொடங்கியது எனலாம். அதே காலகட்டத்தில் அமெரிக்காவின் விஸ்கான்ஸின் மாநிலத்தின் பக்கமுள்ள ஏரிகளின் ஆய்வுடன் வளர்ந்தது என்ற துறை. அதாவது, உயிரினங்கள் மற்றும் அஃறிணைப்பொருட்கள் இணைகிற முழுமையை ஆராயப்புகுந்த இந்தப் புதியதுறை, ஏற்கனவே செயல்பட்ட மரபான துறைகள் மற்றும் அண்மைக்காலத் துறைகள், கணிதம் (அதாவது, வகையீட்டுச் சமன்பாடுக் கணிதம்), வெப்ப-இயக்கவியல், மூலக்கூற்று-உயிரியல் போன்றவற்றை இணைத்து இயங்க முயல்கிறது.

2. சுற்றுச்சூழலைப் பல்வேறு வழிகளில் பாதுகாக்க முற்படும் மனிதர்/கள் குழு/க்களுக்கேற்றவாறு மாறுபடும் சர்ச்சைக்குரிய அரசியல்-சித்தாந்தமும் Ecology என்றே அழைக்கப்படுகிறது.

சட்டவியலின் வரலாறு மற்றும் தத்துவம்

எண்பதுகளின் எழுதப்பெற்று 1990-ஆம் ஆண்டு வெளியான என் இயற்கை-ஒப்பந்தம் புத்தகத்தில் சூழலியல் என்ற சொல் ஒருமுறைகூட இடம்பெறவில்லை! இதற்குக் காரணம் என்ன? என் புத்தகம், சட்டவியலின் வரலாறு மற்றும் தத்துவம் பற்றிப் பேசுவதுதான் காரணம். இன்னும் குறிப்பாக, "தன்னிலை" என்ற நிலையை எய்த யாருக்கு உரிமை இருக்கிறது என்பதே என் புத்தகத்தின் கேள்வி.

சட்ட நடவடிக்கையொன்றை முன்னெடுக்கிற, அதற்காக வாதிடுகிற உரிமையைப் பெற்றிருந்தவர்கள், மேற்கத்திய உலகின் உயர் மத்தியதர வர்க்கத்தைச் சார்ந்த வயதுவந்த ஆண்கள் மாத்திரமே - அதாவது, பண்டைய கிரேக்க, ரோமாபுரி அரசுகளின் குடிமகன் அந்தஸ்து பெற்றவர்கள், பிரபுக்கள், பூர்ஷ்வா வர்க்கத்தினர் ஆகியோர். அடிமைகள், அந்நிய நாட்டவர், பெண்கள், சிறார், வறியவர், கதியற்றவர் போன்றவர்க்கு இந்த உரிமை இருக்கவில்லை. வரலாற்றுப்போக்கில் கட்டம்கட்டமாக நிகழ்ந்த விடுதலையின் பேரில், இவர்களுக்கெல்லாம் சட்டரீதியில் "தன்னிலைகள்" ஆகிற இந்த உரிமை கிடைத்தது. அதாவது, சட்டத்தின் மற்றும் பிற பொது நிறுவனங்களின் பார்வையில் இவர்கள் "வயதுவந்தோராகக்" கருதப்படுவது நிகழ்ந்தது மெதுவாகவே எனலாம்.

என்னைப் பொறுத்தவரை, எல்லோருக்கும் வாக்குரிமை பற்றி பள்ளியிலே எனக்குக் கற்பிக்கப்பட்டது என்றாலும் 1944-ஆம் ஆண்டில்தான் என் நாட்டின் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தது என்பதைக் கூற வெட்கப்படுகிறேன். பெண்ணொருவர் வங்கியில் கணக்கு வைக்கக்கூட கணவர் கையொப்பமிட்டு ஒப்புதல் தரவேண்டிய நிலைமை இருந்தது.

1789-ஆம் ஆண்டு ஃப்ரெஞ்சுப்புரட்சியை ஒட்டி வெளியான மனித உரிமை, குடியுரிமைப் பிரகடனத்துடன் இந்த வரலாறு முடிவுக்கு வந்திருக்க வேண்டும் - குறைந்த பட்சம் கோட்பாட்டுரீதியாக முடிவுக்கு வந்திருக்க வேண்டும். ஒருவழியாக இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு வெளியான ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பிரகடனத்துடன் இந்தக் கோட்பாட்டுரீதியான மாற்றம் உணரப்பட்டது. ஆக, இன்று மனிதத்தன்னிலைகள் அனைவரும் சட்டரீதியில் தன்னிலைகளாக உணரப்பட்டாக வேண்டும்.

இயற்கை-ஒப்பந்தம் என்ற என் புத்தகத்தில் இதைத் தாண்டி ஒரு வாதத்தை முன்வைத்திருக்கிறேன். - அதாவது இந்தப் பிரகடனம் பொதுப்படையாக இன்னும் ஆகவில்லை, ஆக வேண்டுமென்றால் இயற்கையின் அத்தனை உயிரினங்கள், அஃறிணைப்பொருட்களும் தன்னிலைகளாக சட்டரீதியாக ஏற்கப்பட்டாக வேண்டும் என்கிறேன்.

அப்படியானால், இயற்கையின் சார்பில் இந்த ஒப்பந்தத்தில் யார் கையொப்பமிடுவது, அதாவது இயற்கையின் பிரதிநிதியாக யாரை, எப்படி ஏற்பது என்ற கேள்வி வருகிறது. அப்படி ஒப்பமிட இயற்கைக்குக் கையென்று ஒன்றுமில்லையே, அந்த நோக்கத்துக்கான புரிதலும் இல்லையே என்பது என் புத்தகம் மீது வைக்கப்பெற்ற முக்கிய விமர்சனம், எதிர்ப்பு.

இயற்கையை ஒரு நபராகக் கருதும் அளவுக்குப் பித்தமில்லை எனக்கு. முன்னோரின் ஆவிகள் உலவுவது இயற்கையின் வடிவில் என்று கருதும் மரபும் எனதல்ல!

இப்போது என் புத்தகம் மீது வைக்கப்படும் இதே விமர்சனம், ஃப்ரெஞ்சுப் புரட்சிக்காலத்துக்கு முற்பட்ட ழான்-ழாக் ரூஸ்ஸோவின் சமுதாய-ஒப்பந்தம் என்ற புத்தகத்தின் (3) மீதும் வைக்கப்பட்டது என்பதைச் சுட்டிக்காட்ட என்னால் முடியும். அதாவது, சமுதாய-ஒப்பந்தம் என்ற அந்த ஒப்பந்தத்தில், நாள்-இடம் குறித்த ஒரு சடங்கில் வைத்து யாரும் கையொப்பமிடவில்லை. அப்படி ஒரு நிகழ்வு நடந்ததான ஆவணமும் வரலாற்றில் இல்லை! ரூஸ்ஸோ எடுத்தாண்ட சமுதாயத்தின் பொது-சங்கற்பம் அல்லது பொது விருப்ப-உறுதி (General Will) என்பதன் சார்பிலும் அன்று கையொப்பமிட யாரும் இருந்திருக்கவில்லைதான். ஆக, இன்று நான் கூறும் இயற்கை-ஒப்பந்தம் போலத்தான் அன்றைய சமுதாய-ஒப்பந்தமும்!

எனவே இந்த ஒப்பந்தங்கள் முன்நிபந்தனைகளாகக் கருதப்பட வேண்டியிருக்கிறது. அதாவது, குறிப்பிட்ட முறைகளின்படி நாம் கூட்டாக வாழ்கிறோம் என்றால், இந்தச் சமுதாய- ஒப்பந்ததத்தில் நாம் கையொப்பமிட்டது போலவே அனைத்தும் நடக்கிறது. இன்று அழிவின் விளிம்பில் இருக்கும் சில உயிரினங்களைக் காக்க நாம் முற்படுகிறோமென்றால், அவற்றின் வாழ்வுரிமையை அங்கீகரிக்கிறோம் என்று பொருள்; சில இடங்களில் செயலளவிலும் பல இடங்களில் தோற்ற அளவிலும் இது சாத்தியமாகியிருக்கிறது.

ப்ரிட்டிஷ் காலனியாதிக்கக் காலத்தை எடுத்துக்கொண்டால், அவர்கள் வங்கப்பகுதியில் புலி-இனம் அழிவின் விளிம்புக்குச் செல்கிறவரை, அதை வேட்டையாடிக் கொன்றார்கள். ஆக, புலிகளின் வாழ்வுரிமை என்பது அந்த இன-அழிவு ஏற்படும்வரை அங்கீகரிக்கப்படவேயில்லை. இப்போதோ, குறிப்பிட்ட ஒரு வனப்பகுதியைப் பாதுகாக்க் வேண்டும், ஒரு சதுப்புநிலப்பகுதியைக காக்க வேண்டும், அதை மாசுபடுத்துவோரை எதிர்க்க வேண்டும் ஆகிய காரணங்களை முன்வைத்து வழக்குகள் போடப்படுகின்றன. இந்த வழக்குகள் சாத்தியமாகிற பட்சத்தில் புலி-இனம், வனம், சதுப்புநிலம் போன்றவை சட்டத்தன்னிலைகளாக அங்கீகரிக்கப்படுகின்றன - சொல்லப்போனால், இந்த மறைமுக அங்கீகாரம் இருப்பதால்தான் வழக்குகளே சாத்தியமாகின்றன.

ஆக, நம்முடைய இந்த செயல்பாடுகளை நோக்கும்போது - குறிப்பாக சூழல்கள் பல அழிந்துவிடலாம் எனபதைக் கருத்தில் கொண்டு நாம் செயல்படுவதைக் கவனிக்கும்போது - இயற்கை என்பதே கொஞ்சம்கொஞ்சமாக் ஒரு சட்டத்தன்னிலையாக மாறிவருவதை முன்நிபந்தனையாக ஏற்றிருக்கிறோம் என்பது தெரியும்.

அடிக்குறிப்புகள்

1. Michel Serres, Revisiter le Contrat Naturel, paper presenté à l'Institute des Humanities de l'université Simon Fraserm Vancouver, Canada, 4 mai 2006.
2. Michel Serres, Le Contrat Naturel, Paris, 1990.
3. Jean-Jacques Rousseau, Du Contrat Social, Principes du droit politique, 1762.


(இன்னும் வரும்)

16.4.08

அறியும் அவாக் கொண்டவன் கனா - ஷார்ல் போதலேர்

சுவைக்கும் சோகமே,
சாகப்போகிறேன் என
என்னைப் போலவே
அறிவாயோ நீயும்.
"அதோ விநோத மனிதன்" என
உன்னையும் கூறுகிறார்களோ!

மோகமுற்ற
ஆன்மா எனதில்
ஏதோ நோயாக
பயங்கரம் கலந்த ஆசை,
பதற்றமும் கூர்ந்த எதிர்பார்ப்பும்
கலக நகைச்சுவையற்று.

நேரக்குடுவையின் மணல்
விதியாய் விழ விழ
என் சித்திரவதையோ
கொண்டது கடுஞ்சுவை.
அறிந்த இவ்வுலகத்தினின்றும்
கிழிந்துசெல்லும்
என் முழுஇதயம்.

அரங்கம் விழையும் குழவியென
வெறுத்தேன் தடையாய்த் திரையை.
இறுதியில் உறைப்பதாய்
வெளிப்பட்டது உண்மை.

பிரமிப்பின்றிச் செத்திருந்தேன்.
என்னைச் சூழ்ந்தது
பயங்கர விடியல்.
அவ்வளவுதானா!
திரைவிலகிக் காத்திருந்தேன்
இன்னும்.


- Charles Baudelaire, La Rêve d’un Curieux, Les Fleurs du Mal


15.4.08

Zero State-ஐ எய்துகிற நேபாள வரலாறு...

நேபாளத்தில் மாவோயிஸ்ட் தலைமையில் ஆட்சி அமைய வாய்ப்பு.

இப்படி ஒரு செய்தி வரும் என்று பத்தாண்டுகள் முன்பு யாராவது கூறியிருந்தால் கேட்பவர்கள் சிரித்திருப்பார்கள். அத்தகைய வீச்சுடன் மாவோயிஸ கெரில்லாப் போர் நடந்த காலம் அது. இன்று வந்திருப்பது வேறுவிதச் செய்தி. நம் காலகட்ட வரலாறு இத்தகைய கிறுகிறுப்பு மிக்க ஒன்று.

மலைநாடான நேபாளத்தில் நடந்த தேர்தலில் முடிவு தெரிந்த இடங்களில் பாதியில் மாவோயிஸ்ட்கள் வெற்றி. மீதி, இதுவரை ஆண்டு அனுபவித்த நேபாளக் காங்கிரஸ், நேபாளக் கம்யூனிஸ்ட் கட்சி, பிறகு மாதேசி என்ற தெராய் பகுதி மக்களின் கட்சி, சில சிறிய கட்சிகள் ஆகியனவற்றுக்கு.

புதிய அரசியல் சட்டம் செயலில் வர உள்ள இந்த நேரத்தில் மன்னர்-ஆதரவு பெற்ற வலதுசாரி அரசியல்சக்திகள் சுத்தமாகக் காணாமல் போயிருக்கின்றன. அரசியல்-சட்டத்தில் கழித்துக்கட்டப்பெற்ற முடியாட்சிக்கு அரசியல்ரீதியாகவும் முடிவு ஏற்பட்டிருக்கிறது. மாவோயிஸ்ட்கள் தலைமையில் ஆட்சி அமைகிற சூழல்.

நேபாள அரசியலில் செல்வாக்குச் செலுத்தும் அண்டை-அயல் சக்திகள் - இந்திய அரசு, சீன அரசு, அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகளின் அரசுகள். இவர்களில் யாரும் மாவோயிஸ்டுகள் ஆட்சி அமைக்கும் அளவு இத்தனை கணிசமான வெற்றி பெறுவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை எனத் தோன்றுகிறது.

இந்திய அரசைப் பொறுத்தவரையில் வழக்கம் போல நேபாளக் காங்கிரஸ்-கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு மறைமுகமான ஆதரவு, மாதேசிக் கட்சிக்கும் அத்தகைய ஆதரவு என்ற நிலைப்பாடே இருந்தது.

நேபாளத் தேர்தல் முடிவு, தெற்காசியாவில் பல தரப்புக்கும் புதிய சமிக்ஞைகளைத் தரவல்லது என்றே நினைக்கிறேன் - ஒருபுறம் இந்திய அரசு, பாரதீய ஜனதா முதல் இடதுசாரிக் கட்சிகள், மாவோயிஸ்ட் சக்திகள் ஆகியோர், மறுபுறம் கஷ்மீர், இலங்கை, இந்தியப்பரப்பின் வடகிழக்கு மாநிலங்கள் என ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்டுவருகிற சக்திகள், அங்குள்ள அரசு-அமைப்புகள் என எல்லோரும் இந்தப் புதிய சமிக்ஞைகளைக் காணப் பழகியாக வேண்டும். அதற்கு நாள் பிடிக்கலாம்.

வரலாற்றின் இத்தகைய நிலையைத் திருப்புமுனை, புதிய சகாப்தம் என்றெல்லாம் வர்ணிப்பது உண்டு. என்னைப் பொறுத்தவரை இவை clichés! தவிர, அரசியல்-நிகழ்வுகளை விஞ்ஞானத்தின் மொழியைக் கொண்டும் விஞ்ஞான-உலகைக் கலை-இலக்கியப் பிரச்னைப்பாடுகளைக் கொண்டு அணுகவும் விரும்புபவன் நான்.

இதை வைத்துப் பார்த்தால், நேபாளச்சூழலை Zero-State நிலை எனலாம். அதாவது, எல்லாமே மீண்டும் தொடங்கும் நிலை. இனியான வரலாறு வேறு, இதுவரையான வரலாறும் வேறு.

பகுப்பு - சிந்தனை, வரலாறு

14.4.08

சிற்றிதழ்களின் திசை - கேள்வியும் பதிலும்

நாகார்ஜுனன் அவர்களுக்கு,

நான் ஒரு ஆரம்ப நிலை வாசகன். இன்றைய நிலையில் வாசிக்கக் கிடைக்கும் சிற்றிதழ்கள் அனைத்தும் வேறுதிசையில் செல்ல ஆரம்பித்துவிட்டன. அதற்கான அரசியல் காரணங்கள் அவற்றுக்கு இருக்கலாம்.

ஒரு இலக்கிய வாசகனை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் செல்லக்கூடிய இதழ்கள் வருகின்றனவா?

கல்குதிரை இதழ் கார்ஸியா-மார்க்வெஸ், உலக சிறுகதைத் தொகுப்பு போன்ற சிறப்பிதழ்கள் கொண்டுவந்தது என்று படித்தேன். இன்று அவை சாத்தியமா. அப்படி ஏதேனும் சிற்றிதழை நீங்கள் கருதுகிறீர்களா?

நன்றி.
ச. சர்வோத்தமன்

அன்புள்ள சர்வோத்தமன்

கடந்த பதினைந்து ஆண்டுகளில் சந்தைப்பொருளாதாரம், உலகமயமாதல், இணையத்தின் பெருக்கம், வெகுஜன அரசியல் போக்குகளில் மாற்றம் என ஏகப்பட்ட தாக்கங்கள். எல்லாவற்றுக்கும் மேலாக சிற்றிதழ் நடத்துவோருக்கும் சரி, வாசிப்போர்க்கும் சரி, ஒரளவு ரொமான்டிஸிஸம் போய்விட்டிருக்கிறது. இது தமிழில் மட்டுமன்றி, உலகுதழுவிய நிகழ்வாக இருப்பதாக நினைக்கிறேன்.

தமிழை எடுத்துக்கொண்டால், சிற்றிதழ்களில் இருந்துவந்த பல்வேறு பிரச்னைகளையும் தாண்டி, அவை மூலமாகத்தான் எழுத்துப்பரிசோதனைக்ள் சாத்தியமாயின். இன்று வெகுஜனப்பரப்பில் எழுதக்கூடிய தீவிர எழுத்தாளர்கள் பலரும் எழுபதுகள், எண்பதுகள், தொண்ணூறுகளில் சிற்றிதழ்களில் எழுதியவர்கள், சிலர் இன்னமும் எழுதுபவர்களே.

கோணங்கி போன்ற சிலர் வெகுஜன இதழ்களில் எழுதுவதில்லை, இடைநிலை-இதழ்களில் கூட எப்போதாவதுதான் எழுதுகிறார்கள். என்றாலும் வெகுஜன, இடைநிலை இதழ்கள் இவர்களைப் பயத்துடன் அணுகுகின்றன என்றால் அதற்குக் காரணங்கள் இரண்டு - ஒன்று இவர்களின் தனிப்பட்ட சாதனை, அடுத்தது சிற்றிதழ்களில் இருந்த பல்வேறு பிரச்னைக்ளையும் தாண்டி அங்கே நடந்த பல்வேறு பரிசோதனைகளும் கோட்பாட்டுரீதியான விவாதங்களும்.

சிற்றிதழ்களில் எழுதியவர்கள் நட்த்திய பரிசோதனைகளின், விவாதங்களின் சூட்டை, வெறும் குழுவாதமாக, ஆரவாரமாகச் சித்தரிப்பதில் இடைநிலை-இதழ்கள் வெற்றிகண்டதும் இந்தக்காலகட்டத்தில் நடந்திருக்கிறது.

இத்தகைய விவாதங்களை மேற்கொள்ளும் சிற்றிதழ்கள் இன்று குறைந்துவிட்டன என்பதும் உண்மைதான். ஒருசில இன்னும் வருகின்றன. ஒருகாலம் இல்லாமலும் போகக்கூடும்.

இடைநிலை-இதழ்களைப் பொறுத்தவரை தத்தம் பிரத்யேக agendas என்பனவற்றைத் தாண்டிச் செயல்படுவது எப்போதாவதுதான். இடைநிலை-இதழ்களுக்கு இன்றியமையாதது diplomacy - தேவையற்றவை கோட்பாட்டு விவாதங்கள். மீறிப் போட்டால் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம்.

இதைத்தான் பொதுக்களத்தின் பித்த சூழ்நிலை என்று என் தீராநதி நேர்காணலில் கூறினேன். இனி சிற்றிதழ்கள் நடத்துவோர், பரிசோதனையாக எழுதுவோர், தனிமைவாசத்துக்குத் தயாராக இருக்க வேண்டும் என நினைக்கிறேன்!

நாகார்ஜுனன்

பாரதியின் தத்துவ மரபு பற்றி முப்பால் மணி

பாரதியின் தத்துவ மரபு பற்றி முப்பால் மணி எழுதிய கட்டுரை திண்ணை இதழில் அண்மையில் வெளியானது.

காந்தியார் குறித்து ஜமாலன் தீராநதி ஏப்ரல் 2008 இதழில் எழுதியதில் அ-த்வைதம் பற்றி விமர்சனமாக இருந்ததற்குப் பதிலளிக்கும்போது, திண்ணையில் தமிழில் அ-த்வைத மரபு பற்றி அண்மையில் வந்த சுவாரசியமான கட்டுரை, வாசியுங்கள் எனக் குறிப்பிட்டிருந்தேன்.

தற்போது திண்ணையில் இதைத் தேடித்தான் வாசிக்க வேண்டும் என்பதால் இங்கே மறுபதிவாக இடப்படுகிறது. இதை எளிதில் வாசிக்க சில மாற்றங்கள், அடிக்குறிப்புக்கள் உண்டு. உரிமையுடன் செய்திருக்கிறேன். முப்பால் மணியும் திண்ணை ஆசிரியர் குழுவும் எனனைப் பொறுத்தருள வேண்டும்!

பாரதியின் தத்துவ மரபு குறித்த இந்தக் கட்டுரை முக்கியமானது. இது பற்றிய என்னுடைய கருத்துக்களைப் பிறகு எழுதுகிறேன்.

பாரதியாரது தத்துவ மரபு - முப்பால் மணி

1. தமிழக மரபில் வேதாந்தம்

சங்ககாலத் தமிழகத்தில் வேதங்கள் பயிலப் பட்டன, சங்ககால வேதக்கடவுளர் பலர். அவர்கள், இந்த இகஉலகு சார்ந்தவரே. இந்திரன் கோசிகக்குடியில் பிறந்தவன் (1). இப்படி யாகத்திற்குரிய கடவுளரும் பலர். இவர் பிறப்பும் உருவமும். குணமும் உடையவரே. காலத்துக்கும் இடத்துக்கும் உட்பட்டவரே. எனினும் வேதக்கடவுளரின் துதிப்பாடல்களை, வேத மறைகளை உணர்ந்தவர் தமிழறிந்து தம்முடைய செய்யுட்களைப் புறம், அகம் பிறகு பரிபாடல் சார்ந்து அளித்தது தமிழ்மரபின் தவப்பயன் ஆகும், ஆயினும் துதிப்பாடல்-கருத்தியல்கள் சார்ந்து தமிழ்மொழியில் அப்போதைய தம்முடைய தத்துவத்தைத் தராதது வேதமரபின் தவக்குறை ஆகும்.

பெரியாழ்வார்தான் (2) வேதாந்த விழுப்பொருள் எனத் திருமாலைத் தமிழில் ஏத்துகிறார் (3). இதே காலத்தில் திருமங்கையாழ்வார் தைத்ரீய, சாந்தோக்கிய உபநிடதங்களையும் பவுழியன் எனக் கௌஷிதகீ பிராமணத்தையும் குறிப்பிடுகிறார் (4).

மாணிக்கவாசகர் மாயாவாதம் எனக் குறிப்பது, சௌத்ராந்திக-யோகாசார-பௌத்தத்தை மட்டுமல்லாமல் பிரம்ம சூத்திர அத்வைதத்தையும் ஆகும். மணிமேகலையில் சுட்டுணர்வு எனப் பயிலப்படுவது குறிப்பிடத்தக்கது (5) -"புறநிலைப்பொருளிடத்து வெளிப்பொருண்மை மட்டும் அறியப்படுகிறது. மற்றபடி அப்பொருளுடைய பொருள், பெயர், பண்பு, சாதி, செயல் ஆகியன பஞ்ச கற்பனையாக அப்பொருளுக்கு மனித உணர்வுகளால் கற்பிக்கப்படுகின்றன, உண்மையில் இவை ஐந்தும் அப்பொருளின் இடத்தில் இல்லை."

இது சௌத்ராந்திக-யோகாசார-பௌத்தம் ஆகும். இதிலிருந்து இன்னும் முன்னேறி "புறப்பொருளானது பண்புடையது. அதனால் அது அழியும் எனவும் பிரம்மம் ஒன்று மட்டுமே உண்மை, பஞ்சபூதப்பொருள்கள் இருப்பதாகக் கருதிக்கொள்ளும் எண்ணம் அவித்தை, மாயைத்தன்மையானது" என்பதாக, சங்கரர் தமது அகவய-அத்வைதத்தை விளக்கினார், இதன் பொருட்டு அத்தியாசவாத முறையியலைக் கைக்கொண்டார்.

சௌத்ராந்திக யோகாசார பௌத்தம் மற்றும் சங்கரருடைய அத்வைதத்தை மாணிக்கவாசகர் மாயாவாதம் என்றார். பிரம்ம சூத்திர அத்வைத ஞானமே இப்படி மதிப்பிடப்படுகின்றது. பகவத் கீதை ஆழ்வார்களால் பேசப்படவில்லை. எனினும் நம்மாழ்வாரின் ஐந்தாம் பத்தின் ஆறாம் திருமொழி பகவத் கீதைக் கருத்தியலை நினைவுபடுத்துகிறது.

கி. பி. எட்டாம்-ஒன்பதாம் நூற்றாண்டுக்காலப் பகுதியில்தான் உபநிடதம், பிரம்ம சூத்திரம் சார்ந்த பிரம்மஞானம், அத்வைதம் ஆகியவை இங்கு வழக்கிற்கு வந்திருந்தது. இதைத்தழுவி, தமிழகத்தில் அகவய-அத்வைத வேதாந்தம் கி. பி. எட்டாம்-ஒன்பதாம் நூற்றாண்டுகளில் விளக்கம் பெற்றது. எனினும் தமிழில் அதற்கு நூல்கள் இல்லை. சமஸ்கிருதத்திலேயே உபநிடதங்கள், பிரம்மசூத்திரம் ஆகியன ஓதியுணரப்பட்டன. அகம்-பிரம்மாஸ்மி என அகவயப்பட்ட பிரம்மமே நிறுவப்பட்டது.

எனினும் வைணவ வழியில் உள்ளும்-புறமும், பொருளிலும்-உணர்விலும், இகஉலகிலும்-அப்பாலும் நிறைந்த கடவுளை, நாராயணனை, அடிமை மற்றும் பிரபத்தி (சரணாகதி) நெறிகளுடன், ஆச்சாரியர், தம்முடைய இறையியலிலும் தத்துவவியலிலும் முன்னிலைப்படுத்தினர் (6). சார்வாகம், உலகாயதம், சுதந்தர மரபு (சம்சாரிகள், சங்கர அத்வைதம் மற்றும் செமித்திய நெறியாளர்), பிற- மற்றும் பலதெய்வ-வணக்கம். ஆகியனவற்றை எதிரிட்டுக்கொண்டு தம்முடைய விசிஷ்டாத்வைத்த் தத்துவத்தை உருப்படுத்தினர், உலகியல் பொருட்களும் மற்றும் மனித சம்சார வாழ்வும் துன்பமானவை, பரம்பொருளே இன்பமானது என்றனர், இதனை முன்னிட்டுக் கொண்டு ஆழ்வார்களுடைய திவ்வியபிரபந்தம், உபநிடதம், பகவத்கீதை, பிரம்ம சூத்திரம் ஆகியனவற்றுக்கு ஆச்சாரியர் பேருரை கண்டனர்.

அப்போது உலகப்பொருள்கள் மற்றும் உயிர்கள் அனைத்துமே கடவுளின் வடிவங்கள் என்று ஆயன்பட்டனார் (7) விளக்கினார், பகவத் கீதையைப் பரமார்த்த தரிசனம் எனத் தமிழில் அளித்தார், பிரஸ்தானத் திரயங்களில் இதுதான் முதல் தமிழ் நூல்.

இந்த ஆயன்பட்டனார் காலந்தொட்டு, பொருளுக்கும் உணர்வுக்கும் மற்றும் புறத்துக்கும். அகத்துக்கும் எட்டாத அப்பாலான ஆழ்நிலை-அகவயப் பிரம்மமா, அனைத்துள்ளும் நிலவி, தனக்குள் அனைத்தையும் கொண்ட புறவயப் பிரம்மமா என அத்வைத வேதாந்தத்தில் இரு துறைகள் தமிழகத்தில் நிலவின.

ஆயன்பட்டனாரின் பரமார்த்த தரிசனம் என்னும் பகவத் கீதை, தமிழக அத்வைத வேதாந்த வரலாற்றில் அகவயப் பிரம்ம ஞானத்தையும் அனைத்துமான ஏகாத்மப் பிரம்ம ஞானத்தையும் தன்னுள் சங்கமித்துக்கொண்டு எதிர்காலத்தை நோக்கித் திகழ்ந்தது. இந்த இருவகை அத்வைதங்களும் இக உலகையும். புறநிலைப்பொருளையும். சம்சார வாழ்வையும் மாயை, காட்சிப்பிழை, பொய் என்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

இக-உலக நிலையிலிருந்து அப்பாலை-நிலைக்கும் சம்சார-நிலையிலிருந்து முக்திநிலைக்கும் இருமைநிலையிலிருந்து ஏகத்துவ நிலைக்கும் த்வைதத்திலிருந்து அ-த்வைதத்திற்கும் இந்த இருவகை வேதாந்தங்களும் விளக்கம் உரைத்தன, உலகம், புறப்பொருள் ஆகியன மாயை அநித்தியம் என்பதிலும். உலகின் பன்மைத்தன்மை என்பது தோற்றம் கற்பனை என்பதிலும் பிரம்மம் என்பது மட்டுமே உண்மை என்பதிலும் இந்த விளக்கம் வேர்கொண்டிருந்தது, எனினும் பிரம்மத்தை உணர்வதிலும். விளக்குவதிலும் இந்திய வேதாந்திகள் வேறுபாடு கொண்டிருந்தனர்.

பதினாறாம் நூற்றாண்டில் தத்துவராயர் தமிழக அத்வைத மரபில் "அனைத்தின் உள்ளும் புறமும் பிரம்மமே விளங்குகிறது. உலகும் புறப்பொருளும் இதன் பன்மைத் தன்மை எல்லாம் பிரம்மத்தின் விளக்கங்களே. எதுவும் மாயை இல்லை" எனப் பரமாத்வைதம் என்ற நெறி கண்டார். இதன்பொருட்டுப் பிரஸ்தானத் திரயங்களில் ஒன்றான உபநிடதங்களைச் சொரூபானந்த சித்தி என்ற பெயரில் தமிழில் முதன்முதலில் பிரம்ம கீதை என்ற பெயரில் எழுதினார், இந்த நூலுக்குக் கோடகநல்லூர் சுந்தர சுவாமிகள் பரமாத்வைத மரபில் உரை செய்தார்.

தத்துவராயர் தமிழகச் சைவத்துறையில் வேதாந்தம் என்ற மரபைத் தோற்றுவித்தார் என்பது வரலாறு. இந்த வேதாந்தத்துக்கும் சித்தாந்தத்துக்கும் இடையேதான் தாயுமானவர் தொடங்கி வள்ளலார் உள்ளிட்டு அனைத்து சைவ ஞானிகளும் சமரசம் நாடிப் பாடுபட்டனர். சூத சம்ஹிதை. பிரம்ம கீதை, பாடுதுறை, பெருந்திரட்டு, ஞான வாசிட்டம், கைவல்ய நவநீதம், நிஜானந்த விலாசம், சுவாநுபவ மஞ்சரி. சுவாநுபூதி ரசாயனம், நூற்றொகை விளக்கம், மனோன்மணீயம், நாநாஜீவவாதக் கட்டளை, கோ. வடிவேலு செட்டியார் உரை, வையாபுரிப்பிள்ளையின் இலக்கிய உதயம். தெ. பொ. மீனாட்சிசுந்தரனாரின் கானல்வரி ஆய்வு ஆகியன பரமாத்வைதத்துக்கு உரிய நூல்கள்.

தமிழக அத்வைத மரபு ஆயன்பட்டனாருக்குப் பிறகு (பதினேழாம் நூற்றாண்டில்) செங்கோட்டை ஆவுடையக்காளிடம் நிலைகொண்டது, இந்த அம்மையார் அனுபூதி-அத்வைதத்தை தமிழகத்தில் உருவாக்கினார். அப்போது சமஸ்கிருதத்தில் வித்யாரண்யர் பஞ்சதசி என்ற நூலில் அத்வைதத்தை விளக்கியிருந்தார். இதனை அடியொற்றிக் கைவல்ய நவநீதம் எனத் தமிழில் அத்வைத நூல் உருவானது, தத்துவராயர் மரபில் ஞானவாசிட்டம். நாநாஜீவவாதக் கட்டளை ஆகிய நூல்கள எழுந்தன, இவை பரமாத்வைத வேதாந்தத்தின் பிரமாண நூல்கள்.

அகவயப் பிரம்மமா, அனைத்தையும் அளாவி உள்ளும் புறமும் ஆகவுள்ள புறவயப்பிரம்மமா என்ற இந்த இருதிறமும் 1892-ஆம் ஆண்டில் விவாதப்பொருளாக மனோன்மணீயம் நாடகத்தில் நிட்டாபரர்-கருணாகரர் உரையாடலாகத் திரண்டது. சங்கரர் வழிவந்த அகவய-அத்வைதமா, தத்துவராயரால் பொலிவு பெற்ற புறவய-அத்வைதமா என்பது அந்த உரையாடலின் உள்ளொளி. அடுத்து, கோ. வடிவேலு செட்டியார் என்ற சான்றோரால் தத்துவராயருடைய பரமாத்துவைதம் தொடர்ந்து நிலவியது.

2. பாரதியாருக்கு முந்திய வேதாந்தம்

1880-ஆம் ஆண்டில் சிதம்பரத்திலிருந்து வந்த பிரம்ம வித்யா இதழில் சீனிவாச சாஸ்திரி அத்வைதக் கட்டுரைகளை வெளியிட்டார், சார்வாகம் உலகாயதம் மற்றும் சைவ சித்தாந்தம் ஆகியனவற்றை மறுத்து எழுதினார். ஜான் லாக் (John Locke), தாமஸ் ஹாப்ஸ் (Thomas Hobbes) ஆகியோருடைய ஆங்கிலேய உலகாயதத்தையும் மற்றும் ஜெர்மானிய புஹ்னர் மேற்கொண்டு இருந்த ஆற்றல்-பொருள் பற்றிய உலகாயதமும். அதோடு சமூகம் மற்றும் சோஷலிசத்தின்பால் இயற்கை சார்ந்த தத்துவங்களைக் கொண்டு செலுத்துவது பற்றிய கருத்துக்களையும் அறியப்பெற்று இருந்த கல்வியாளர் 1880 முதற்கொண்டு இங்கே இருந்தனர். மேலும் வோல்த்தேர் (Voltaire), ரூஸ்ஸோ (Rousseau) வழிப்படுத்திய ஃப்ரெஞ்சுப்புரட்சி மற்றும் (????) விவரித்த நாத்திகம் ஆகியனவற்றைப் பயின்ற படிப்பாளிகள் இங்கே நிலவினர்.

1870-ஆம் ஆண்டு முதற்கொண்டு சைவச்சான்றோர்கள் (யாழ்ப்பாணம் கொக்குவில் குகதாசர், ச. சபாரத்தின முதலியார், சூளை சோமசுந்தர நாயக்கர்) இங்கே நேர்க்காட்சிவாதத்தின் ஆன்மிக மற்றும் சமூக விளக்கங்களைக் கைக்கொண்டு புத்தெழுச்சியுடன் திகழ்ந்தனர், கூடவே இங்கே ஜே. எஸ். மில் (J. S. Mill), ஹெர்பர்ட் ஸ்பென்ஸர் (Herbert Spencer), ஆகியோரின் நேர்க்காட்சிவாத வழிப்பட்ட பகுத்தறிவு-நாத்திகக்கருத்துகளும் ஆங்கிலக்கல்வியாளரிடையே வலுவுடன் மேற்கொள்ளப்பட்டிருந்தன (இந்த நேர்க்காட்சிவாதக் கல்விப்பயிற்சி பெற்றவரைத்தான் பாரதி "பேடிக்கல்வி பயின்றுழல் பித்தர்கள்" என வெறுத்தார். பாரதியாரால் "பொய்மைசேர் மதியினில் புலைநாத்திகம் கூறுபவர்" என்று பேசப்பட்டவர் இவர்களாக இருக்கலாம்).

1880 முதல் 1896 முடிய பிரம்ம வித்யா இதழ் இவர்களோடு தத்துவப்போர் புரிந்தது. (கமலாம்பாள் சரித்திரம் நாவல் எழுதிய) பி. ஆர். ராஜம் அய்யர், சென்னை அழகியசிங்கர் தம் பங்குக்குக் கட்டுரைகளைத் தந்தனர். இவர்கள் புல், பூண்டு, மரம், விலங்கு, பறவை, மனிதர், தேவர், எல்லாப்பிறப்பும் பிரம்ம ஸ்வரூபங்கள் என்று முதலில் பேசினர். பிறகு பஞ்சபூதப்பொருட்களும் இல்லை என்றனர். கடவுளானது (பிரம்மானது) தனது மாயை காரணமாகப் புல், பூண்டு, மரம், விலங்கு, பறவை, மனிதர், தேவர் என எல்லாப்பிறப்புமாகத் தோற்றம் தருகிறது, ஆகவே புல், பூண்டு. ஆகியன தோற்றம் மட்டுமே, இருப்பது ஒன்றே, அது பிரம்மம் எனச் சுட்டினர், புறவயப்பொருள்களையும் இயலுலகையும் ஏற்றனர். பிரம்மத்தையும் ஏற்றனர். என்றாலும் அறிவு மட்டுமே உண்மை, பொருள்கள் பொய் என்ற கருத்தியலின்பால்நின்று, பிரம்மம் ஒன்று மட்டுமே உண்மை, புல், பூண்டு, மரம், விலங்கு, பறவை, (நதி. கடல். தீ. காற்று), தேவர் (நாட்டார் குலதெய்வங்கள்) மனிதர் எல்லாப்பிறப்புகளும் தோற்றம் மட்டுமே என்று முடிவாகக் கூறினர்.

இப்படியாக, இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் நின்றனர், அகவயப் பிரம்மமா அல்லது அனைத்தையும் அளாவி உள்ளும் புறமும் ஆக விளங்கும் புறவயப் பிரம்மமா என்ற வரலாற்றுச்சூழ்நிலையில் அகம்-பிரமாஸ்மி என அகவயப் பிரம்மத்திற்கு அத்வைதத் துறையில் விளக்கம் கூறினர்.

அப்போது பிரஸ்தானத்திரயங்களில் ஒன்றான பிரம்ம சூத்திரமானது, முதன்முதலாக 1905-ஆம் ஆண்டில் சங்கர. ராமாநுஜ. நீலகண்ட பாஷ்யங்களுடன் தமிழில் மாடபூசி ராமாநுஜாச்சாரியாரால் வெளியிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் சங்கரரின் அகவய-அத்வைதமே முதலில் பாரதியாரிடம் பிரவேசித்தும் இருந்தது.

3. பாரதியாருடைய வேதாந்தம்

தமிழ்நாட்டு ஸ்மார்த்தப் பிராமணர்கள் பிறப்பாலேயே அத்வைதிகள். இந்நிலையில் மேற்கூறிய அத்வைதக் கருத்தியல் பின்னணியிலேயே முதலில் பாரதியார் இருந்தார். அப்போது “தேகம் என்பது யான் அன்று, மேலும் அகவயமான யானும் பிரம்மம் அன்று, வாழ்வு என்பது கனவு” என ஏற்றிருந்தார் (8). அதாவது சார்வாகம், உலகாயதம் போற்றியுரைத்த தேகாத்மம் என்பதை அப்போது இயல்பாகவே தமது சுயமரபு காரணமாக மறுப்புக்கொண்டிருந்தார், தேகமே ஆத்மாவாக உள்ளது, ஆத்மா எனத் தனியாக ஒன்றும் இல்லை என்பது தேகாத்ம வாதம், ஆனால் பாரதி இதை ஏற்கவில்லை, அவர் தேகம் வேறு, ஆத்மா வேறு, அவை தனித்தனி என்பதையே மேற்கொண்டு இறுதிவரை இப்படியே திகழ்ந்தார், "அகவயமான யான் என்பதே பிரம்மம் மற்றும் வாழ்வு என்பது கனவு" என்பன சங்கரரின் அகவய-அத்வைதம், இது அவருடைய சுயமரபு. இதிலிருந்துதான் அவர் மாறுபாடு அடைகிறார்.

1906 முதல் 1913 வரை அவரது வாழ்வில் பல நிகழ்வுகள் நடந்துவிட்டன. சொந்தக் குடும்பம், அரசியல், பத்திரிகை-எழுத்து என அவை பொலிவுபெற்றன. 1912-ஆம் ஆண்டில் அரசியல், பத்திரிகை ஆகியன தொடர்ச்சியற்றுவிட்டன (9). 1911-ஆம் ஆண்டில் குள்ளச்சாமி பழங்குப்பை, பழம்பொய் எனச் சுட்டிக்காட்ட, பாரதியார் கடந்தகாலத்திலிருந்து விடுதலை பெற்ற புதியவன் ஆனார். புதிய காற்றால் புதிய உயிராய்ப் பிறந்துவிட்டார் (10). கோவிந்த ஞானியின் தொடர்பு கண்ட பின் எல்லாமுமே அனைத்துமே பிரம்மம், பரம்பொருள். தெய்வம், பரசிவம் எனத் தெளிந்தார். இதனோடு நிற்காமல் சம்சார விருத்திகள் பரம்பொருளின் விருத்திகள், செயல்கள் எல்லாம் சிவன் செயல்கள் எனத் தெளிந்து பகவத் கீதைக்கு முன்னுரை எழுதினார். விருத்தி என்பது இல்லையெனில் அழிவு, காதல் போயின் சாதல், விருத்தி என்றால் பிறப்பு-செயல்-மாற்றம்-இன்னொரு பிறப்பை ஈன்று விட்டு ஏகமாதல், இதுவே அத்வைத நிலை, முக்தி ஆகும் என்ற உறுதிக்கு வந்தடைந்தார். இதுவே அவரது மாற்றம், இயலுலக வாழ்வில் விருத்தி என்பது சமூக விருத்தி ஆகும்.

பாரதியாருக்கு (அதாவது 1880-ஆம் ஆண்டுக்காலத்துக்கு) முன்பு இருந்தே புராதன பொதுவுடைமைச் சமூகம், கால்நடை மேய்ப்புச் சமூகம், நிலவுடைமைச் சமூகம் பற்றிய விபரங்களை 1865-ஆம் ஆண்டு முதலே பிரம்ம சமாஜத்தினர் மேற்கொண்டிருந்தனர், மேலும் வோல்த்தேர்-ரூஸ்ஸோ ஆகியோர் அறைகூவிய சுதந்தரம். சகோதரத்துவம். சமத்துவம் மற்றும் ஃப்ரெஞ்சுப் புரட்சி பற்றிய பற்றுணர்வு கொண்ட கற்றோர் இங்கே இருந்து வந்தனர், 1878-ஆம் ஆண்டு முதலே தத்துவ விசாரணி பிறகு தத்துவ விவேசினி பத்திரிகையாளர்கள் (சேமையா பிறகு பு. முனுசாமி, அமரம்பேடு முத்துசாமி, எம். தெய்வசிகாமணி) சார்வாகம், உலகாயதம் சார்பாக நின்று தொழிலாளர் உயர்வை எடுத்துக் கூறி வந்தனர் (11).

இந்தப்பின்னணியில் பாரதி மண்டையம் திருமலாச்சாரியார் தொடர்பால் பொதுவுடைமை என்ற சமூக நோக்கத்துக்குப் பக்குவப்பட்டார், அப்போது பொதுவுடைமையியலின் மற்ற பகுதிகளான இயங்கியல் (12), பொருள்முதல்வாதம் மற்றும் அறிதலியல் (13) ஆகியன தமிழகத்தில் அறிமுகமாகியிருக்கவில்லை. இருந்தாலும் பாரதி உலகியலின் சம்சார நிலையிலிருந்து தொடங்கினார். இதன்பொருட்டு நீண்ட ஆயுள், நோயில்லாமை, அறிவு, செல்வம் எனத் தேகவாதத்தை வந்தடைந்தார். இது அவர் மரபுக்கு உகந்ததாக இருந்தது. பொதுவுடைமை என்ற சமூக நோக்கத்தின் அறிமுகத்தை முன்னிட்டுக்கொண்டு சம்சார விருத்தி என்பது புறநிலையளவில் பாரதியாருக்குப் பொதுவுடைமை பொலிந்த கிருதயுக எழுச்சி ஆகும். தொழிலாளரையும் உழவரையும் போற்றிப் பாடி எழுதினார்.

அதோடு மட்டுமன்றி அதுவே அகநிலையளவில் முக்திநிலை. பரசிவநிலை என்று வேதாந்த மரபுநிலையாகத் தெளிந்தார். இந்த நிலைகள் அப்பாலானவையோ, அகவயமானவையோ அல்ல, இயலுலகுக்குரியன; மனித வாழ்வுக்குரியன; புறநிலைப்பொருளை, பஞ்சபூதத்தால் ஆன இக-உலகப் பொருள்களை, மற்றும் பிறந்து இருந்து இன்னொரு சந்ததியை உண்டாக்கிவிட்டு இறக்கும் இந்த மனித வாழ்வு நிலைமைகளை, கடவுளுக்கு, சிவத்துக்கு முரண், பகை, மறைப்பு என்று அணுகும்போது அவை தீமை தருவன. அப்போது பாவத்தின் ஊற்று, மாயை, காட்சிப்பிழை, பொய் என்ற விளக்கவுரைகள் தோன்றும்.

இதற்கு மாற்றுநிலையாக, தமிழக வேதாந்த மரபு பாரதியார் வழியாகப் பரசிவ நிலையை விளக்கப்படுத்தி உயர்ந்தது, ஆயிரம் தெய்வங்கள் உண்டு என்பதையும் கடந்து பொலிந்தது (14). இந்தப் பிரபஞ்சமாக, இக-உலக வாழ்வாக இயங்கித் தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளுகிறது (15) எனத் தம்முடைய வேதாந்த மரபில் புதியகோலம் இட்டார் பாரதி.

பிறகு, 1918-ஆம் ஆண்டில் கடையத்தில் தங்கியிருந்த காலை, கோமதி மகிமை புனையத்தொடங்கியிருந்தார். இது சூத சம்ஹிதை என்னும் நூல் தொடர்பானது, இதில் சூத கீதை, பிரம்ம கீதை ஆகியன இடம் பெற்றுள்ளன. 1912-ஆம் ஆண்டில் சூத சம்ஹிதையை நா. சு. ராஜாராமையர் வெளியிட்டிருந்தார் (16). ஆர். அனந்தகிருஷ்ண சாஸ்திரியார் மொழிபெயர்த்திருந்தார். இது பாரதியாருடைய வாசிப்புக்குள்ளாகி இருக்கலாம். எப்படியெனில், இந்த ராஜாராமையர் பாரதியாருடைய கருத்தியல்-உணர்வு வழிப்பட்ட சுயகுல உத்தமார்த்த பரோபகாரி, பாரதியாருடைய தத்துவப்புலமையை அறிந்து ஆதரித்தவர்.

பாரதியாருக்குச் சற்று முந்திய ஆண்டுகளில் சூதசம்ஹிதை தத்துவ உலகில் வீச்சுப் பெற்றிருந்தது, கோடக நல்லூர் சுந்தர சுவாமிகள் ஊர்தோறும் பிரசங்கித்து வந்தார். இந்தச் சூத சம்ஹிதையைக் கோமதி மகிமை என்ற பெயரில் புனையத் தொடங்கினார் பாரதி. இது முற்றுப் பெற்றிருந்தால் 1912-ஆம் ஆண்டில் பகவத் கீதையை மொழிபெயர்த்த தத்துவ உணர்வுநிலையிலிருந்து தம்முடைய சொந்தப்போக்கில் பாரதியார் முதிர்ச்சி கண்டிருந்தது இன்னும் துல்லியமாகப் புலப்பட்டிருக்கும்.

சூத சம்ஹிதையிலும் பிரம்ம கீதையிலும் உலகியல் பொருள்கள் மனித ஆத்மாக்கள் வழியாகப் பிரம்மம், பரசிவம். பரம்பொருள் தன்னை விளங்குவித்துக்கொள்ளுகிறது. எதுவும் மாயை இல்லை, காட்சிப்பிழை அல்ல, பொய் இல்லை, அனைத்தும் கடவுளின் விளக்கங்கள், ப்ரத்யக்ஷம் ப்ரஹ்மாஸி (17). பிரம்மம் செயல்பாடுடையது, அனைத்தும் இதன் செயல்களே, தனித்த ஆத்மாவினது சுயச்செயல் என்ற சுய சுதந்தரம் என்பது இல்லை, இதுவே மாயை, பிரம்மம் அல்லாத இரண்டாவதான இன்னொன்று இல்லை, அப்படி இருப்பதாகக் கருதிக்கொள்வதே இந்த நெறியில் மாயை என விளக்கப்படுகிறது, இல்லா மாயை என்பது மனோன்மணீயக் கருத்தியல், இந்த மாயையைப் பாரதி தன் பக்குவப்போக்கினில் ஜீவ கற்பனை என உணர்ந்து புலப்படுத்தினார்.

பரசிவ வெள்ளம் என்ற கவிதையும் ஜீவ கற்பனை என்ற கருத்தியலும் சூத சம்ஹிதையைக் கோமதி மகிமை எனப் பாடத்தொடங்கியதும் பாரதியின் மெய்யியல்-வளர்ச்சிப் பக்குவ வரலாற்றில் ஊன்றிக் காணத்தக்கன ஆகும். 1912-ஆம் ஆண்டுக்குப் பிறகான அவருடைய புத்தாக்க நிலையைத் தெளிய இயலும், உள்ளும். புறமும் எங்குமான பரசிவம் செயல்நிலையில் அனைத்துமாக உள்ளது, சம்சார விருத்தியாக விளங்குகிறது, காலம்-இடம், அகம்-புறம், பொருள்-சக்தி, எல்லாம்-தனி, செயல்-மாற்றம் அனைத்தும் ஈசவெள்ளம், தனிப்பட்ட ஒருபொருளானது உயிரானது தன்னை மட்டும் பெரிதாக வியந்துகொள்வது ஜீவ கற்பனை, மாயை, ஆனாலும் அப்படி ஒரு நிலையானது உண்மையில் இல்லை, அனைத்தும் பிரம்மம் பரம்பொருள் செயல்நிலையில் உள்ள தெய்வ வெள்ளம், இந்த ஆழ்ந்த பொருள்தான் அனைத்திலும் இருப்பதாகப் பரசிவ வெள்ளம் கவிதையில் புலப்படுத்தினார், அவரது அப்போதைய படைப்புகள் அனைத்திலும் இந்த வேதாந்தம் ஒளிவிட்டது, இதையே 1920-ஆம் ஆண்டில் ஹிந்து மதாபிமான சங்கத்தார் பாடலிலும் பொலியவைத்துள்ளார்.

பாரதியாருடைய கருத்தியலின்படி பரம்பொருள் எல்லாப் பொருள்களிலும் உள்ளும் புறமும் புகுந்து நிரம்பியுள்ளது, செயலில் உள்ளது, ஒவ்வொரு தனிப்பட்டதிலும் அதுவே பிரவேசித்துள்ளது, தனிப்பட்டவைகளும் உண்மை, தனிப்பட்ட ஆத்மாவானது பிரம்மத்தின் பிரதிபலிப்பு அன்று, பரம்பொருளே அப்படி உள்ளது என்பதுவே பாரதியாரது சிறப்பியல்பு, இதுவே அவரிடத்தில் பக்குவம் கொண்ட தத்துவம்,அதன் மரபு.

தமிழக வேதாந்த மரபில் ஆயன்பட்டனாருக்குப் பிந்தைய காலங்களில் அகவய பிரம்மமா, எங்குமான பிரம்மமா என்று தொடர்ந்த இருதிறத்தில் பாரதியார் எங்குமான பிரம்மம், கடவுள், பரம்பொருள், பரசிவம் என்ற புறவயத்திறத்தில் (1912-1914) பொலிவு பெற்றிருந்தார், இதனை முன்னிட்டுக் கொண்டே சூத சம்ஹிதை நூலில் பயிற்சிபெற்றார். இந்த நூலின் ஆசிரியர் வியாசருடைய மாணவர் சூத மகரிஷி. இவருடைய வழியில் பதினோராவது குருவாக வந்தவர் சிவப்பிரகாசர். இவருடைய மாணவர் ஸ்வரூபானந்தர். இவரிடத்தில் ஞானம் பெற்றவர் தத்துவராயர். இவர் தமிழகச் சைவத்துறையில் பரமாத்வைதம் என்ற தத்துவ மரபினை முறைப்படுத்தியவர் ஆவார்.

இந்தத் தத்துவ மரபானது சைவத்துறையில் வேதாந்தம் எனப்பட்டது, தத்துவராயரின் இந்த வேதாந்தத்துக்கும் மெய்கண்டாரின் சித்தாந்தத்துக்கும் இடையேதான் சமரசம் நாடித் தாயுமானவர் தொடங்கி வள்ளலார் உள்ளிட்ட சைவ அருளாளர் பெரிதும் தவம் பேணினர்.

இந்த வேதாந்த மரபில் சூத சம்ஹிதை ஒரு பிரமாண நூல் ஆகும். 1914-க்கு பிறகு கோமதி மகிமை எனச் சூத சம்ஹிதையைப் பாடத்தொடங்கியபோது அனைத்தும் கடவுள், பிரம்மம், பரம்பொருளின் நிலைமைகளே என்று பாரதியார் பரமாத்வைதத்துடன் இணக்கம் கொள்கிறார் என்ற மதிப்பீட்டினைக் கைக்கொள்வதற்கு இவருடைய சுயவரலாற்றுத் தொடர்ச்சியானது ஊக்கம் நல்குகிறது. பரம்பொருளான கடவுள் உலகியல்-பொருட்களின் வழியாகத் தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளுகிறது என உணரத்தொடங்கினார். உருவமற்ற அப்பாலான பிரம்மம், பரம்பொருளானது சம்சார விருத்தியின் வழியாக இந்த உலகில் தன்னைத்தானே பொதுவுடைமையாகப் புதுப்பித்துக் கொள்ளுகிறது. இந்தப் புதுப்பித்துக்கொள்ளல் என்ற கருத்தியலால் பாரதியார் தமிழக அனைத்திறை அத்வைதத்தை எல்லையற்றதாக்கினார்.

பாரதியாரின் மனைவி செல்லம்மாவின் சகோதரியின் புதல்வியார் திருமதி கோமதி ராஜாங்கம். இவரது கூற்றுப்படி செங்கோட்டை ஆவுடையக்காளுடைய அனுபூதி-அத்வைதப் பாடல்களைப் பாரதி தனது உயிருக்கு நிகராகக் கொண்டார். அப்பாடல்களை அடியொற்றி அனுபூதி வேதாந்தப் பாடல்களைப் புனைந்தார். பாரதியாருக்குத் தத்துவ முன்னோடி இந்த ஆவுடையக்காள். இவரது தொடர்ச்சியாகப் பாரதியார் காலத்திலும் இடத்திலும் புறத்திலும்-அகத்திலும் பொருளிலும்-உணர்விலும் இக உலகிலும்-அப்பாலும் இருப்பது ஒன்றே, பரசிவ வெள்ளமான, ஏகமயமான பரம்பொருள் அது எனத் தமிழக வேதாந்த மரபுக்குப் பங்களிப்புச் செய்தார். சங்கர அகவய அத்வைதத்தில் இருந்து மாறுபாடடைந்து அனைத்திறை அத்வைதத்திற்கு வந்தடைவதன் மூலம் அதைச் செய்தார்.

சூத சம்ஹிதை வழியான பரமாத்வைதமும் ஆவுடையக்காள் வழியான அனுபூதி-அத்வைதமும் ஒருவழிப்பட்டவை, அதன் தொடர்ச்சியில் (கோமதி மகிமை எழுதிய) பாரதி அதற்குள் அமரர் ஆகிவிட்டார்.

உலகப்பொருள்கள், செயல்கள், பண்புகள், விதிகள் எல்லாம் உண்மை, நித்தியம், சத்தியம் இவையெல்லாம் பரசிவ வெள்ளம், இறைவெள்ளம், உள்ளும் புறமும் ஒன்றுக்கொன்று வேற்றுமை முரணற்றுப் பாய்ந்து ஒரே செயலாக ஊற்றாய்ப் பொழிவது, தனித்த ஒரு சுயசெயல், சுயதீர்மானம், சுய உத்தரவாதம் என்பன இல்லை, பலவாய் வேற்றுமைப்பட்டிருப்பது என்பதுவே நீக்குவதற்கு உரியது என முடிக்கிறார். தனிப்பட்ட குறிப்பான ஒரு பொருளின் சுயாதீனம், சுயச்செயல், சுய தீர்மானம். சுய உத்திரவாதம் ஆகியனவற்றை முன்னிட்டுக்கொண்டு சுய வருமானம், சுய லாபம், சுயப் பிரயோசனம் ஆகியவற்றை வலியுறுத்திய ஆங்கிலேயே நேர்க்காட்சிவாதத்தையும் அதற்கிணையான அகம்பிரம்ம வாதத்தையும் மறுத்தபடி, எங்குமாக நிறைந்துள்ள புறவயப் பிரம்மத்தை நிலைநிறுத்துவது அவருடைய தத்துவத்தின் பங்களிப்பாகும்.

இது இந்திய வேதாந்தத்துக்குத் தமிழகத்திலிருந்து தரப்பட்ட வலுவான பகுதியாகும்.

பிறப்பு என்பது பாபமானதன்று, ஏனெனில் அது பரசிவத்திலிருந்து உண்டாகிறது, உலகை நேசித்திருத்தல் என்பது தீமையோ அறியாமையோ அன்று. ஏனெனில் பரசிவத்தின் இருப்பே இப்படியாக இருக்கிறது, இறப்பு என்பது தண்டனையன்று, ஏனெனில் இயலுலகப்பொருள்களில் பரசிவத்தை உணரும்போது அதனோடு ஒன்றாகிறது, பிறந்து இருந்து மறையும்போது சந்ததித்தொடர்ச்சியைத் தருவது பரசிவத்தின் புதுப்பித்துக்கொள்ளும் செயல்தன்மையே ஆகும். அகத்தில் உள்ளதே புறத்திலும் உள்ளது, அகமும் புறமும் முரணானவையல்ல என்பதிலேயே பாரதியின் தத்துவக்கட்டமைப்பின் சிறப்பும் உள்ளது.

அடிக்குறிப்புக்கள்

1. ரிக் வேதம் 10 மண்டலம் அநுவாகம் 3 சூக்தம் 3 - 10
2. பெரியாழ்வார் - கி. பி. 690-775
3. திவ்வியப்பிரபந்தம் 4 - 3 - 11
4. திவ்வியப்பிரபந்தம் 5 - 5 - 9
5. மணிமேகலை 29 - 49
6. ராமாநுஜர் முதலான வைணவ ஆச்சாரியார்.
7. ஆயன்பட்டனார் - கி. பி. 1100-1200
8. பாரதியாரின் யான் (1906), சுயசரிதை (1910) கவிதைகள்
9. அண்மையில் ஆய்வாளர் ஆ. இரா. வெங்கடாசலபதி கண்டறிந்த, ஹிந்து ஆங்கிலப்பத்திரிகைக்கு பாரதி எழுதிய க்டிதங்கள், 1911-12 ஆண்டுக்காலத்தைத் தாண்டி 1916 வரை நீடிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
10. பாரதியார், யோக சக்தி
11. தத்துவ விவேசினி, 04-04-1885
12. முரணியக்கம் (dialectics)
13. அறிதல்-கோட்பாடு (epistemology, theory of knowledge)
14. பாரதியார், பரசிவ வெள்ளம் (1914)
15. வசன கவிதை – சக்தி, 4.5
16. இவருடைய வீட்டில்தான் 1911 முற்பகுதியில் பாரதியார் இந்த ராஜாராமையருடைய பிதா என். பி. சுப்பிரமணிய சர்மா மொழிபெயர்த்து வைத்திருந்த சங்கர பாஷ்யத்தின் சாராம்சங்கள் அடங்கிய உபநிடதப்பிரதிகளைத் திருத்தங்கள் செய்து செப்பனிட்டார். "இதன் முதல்-நான்கு உபநிடதங்களின் முதல் பதிப்பு 500 பிரதிகளும் முதல்-ஐந்து உபநிடதங்களின் இரண்டாம் பதிப்பு 1,000 பிரதிகளும் 12-12-1911 அன்று ஐந்தாம் ஜார்ஜ் சக்ரவர்த்தி டில்லி பட்டாபிஷேக சின்னமாய் ஜகத்குரு காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கராச்சாரியர் அவர்கள் அருளிய ச்லாகா பத்திரிகையையும் இணைத்து அப்போதே முமுட்சுகளுக்கு இனாமாகக் கொடுக்கப்பட்டன."
17. வசன கவிதை, காற்று, 15.

13.4.08

எட்வர்ட் சையத் எழுதின வரலாறுக்கு மாற்றாக..

Orientalism என்ற மறைந்த எட்வர்ட் சையதின் (Edward Said) பெயர்பெற்ற புத்தகத்தைக் கீழை-உலகவியல் அல்லது கீழை-உலகவாதம் எனத் தமிழில் ஆக்கலாம் என்று ஏற்கனவே கூறியிருக்கிறேன்.

Orientalism என்பதைக் கீழைத்தேயவியல் என ஆய்வாளர் ஆ. இரா. வெங்கடாசலபதியும் வேறு சிலரும் மொழிபெயர்க்கிறார்கள் (உதாரணத்துக்கு, காண்க - காலச்சுவடு மே 2007 இதழ்). தெற்காசியப் பரப்பில் அரசுகள், கலாச்சாரங்கள் இருந்தன, ஆனால் நவீன-தேசம் என்ற கட்டமைப்பே உருவாகாத காலகட்டத்தில் செய்யப்பட்ட ஆய்வுகளை விவரிப்பதில் இந்த "கீழைத்தேயம்" வார்த்தையைப் பாவிப்பதில் அறிவுக்கோட்பாட்டுப் (epistemological) பிரச்னைகள் மற்றும் அரசியல்-பிரச்னைகள் எழுகின்றன, அதனால்தான் கீழை-உலகம் என்று கூற வேண்டும் என்கிறேன்!

1978-ஆம் ஆண்டில் எட்வர்ட் சையத் எழுதிய புத்தகம் Orientalism. அதாவது மேற்குலகமும் கீழை-உலகமும் சந்தித்துக்கொண்டபோது மேற்குலகம் உருவாக்கிக்கொண்ட சொல்லாடல்களம் பற்றிய ஆய்வே இந்தப்புத்தகம். அதாவது, கீழை-உலக சமுதாயங்களைக் காலனிகளாக மாற்றிச் சுரண்டிய மேற்குலகம், அவை பற்றி ஏற்கனவே தனக்கிருந்த அறிவு-அடிப்படைகளின் படி அவற்றை மீண்டும் கட்டியமைத்துக் கொள்கிறது, இதிலிருந்தே கீழை-உலகவியல் என்ற அறிவுக்களத்தின் "உண்மை" உருவாக்கப்படுகிறது, இந்த "உண்மை"யின் அடிப்படையிலேயே கீழை-உலகம் குறித்த கல்வித்துறைகள், ஆய்வுகள், எழுத்துக்கள், நிபுணத்துவம் எல்லாமே உருவாக்கம் பெற முடிகிறது, இந்தக்களத்தைத்தான் கீழை-உலகம் சார்ந்து சிந்திப்பவர்களும் எதிர்கொள்கிறார்கள், இதில்தான் இவர்கள் பலரும் சிக்குகிறார்கள், இதை வைத்தே மேற்குலகம் தன்னுடைய அரசியல்-அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்கிறது, எனவே இது மேற்குலகின் அறிவும் அதிகாரமும் இணையும் களம் என்கிறார் எட்வர்ட் சையத்.

பெரும்பாலும் மத்தியக்கிழக்குச் சமுதாயங்களை வைத்து எழுதப்பெற்ற இந்தப்புத்தகம் பற்றி மேற்குலகிலும் சரி, பிற இடங்களிலும் சரி, ஏகப்பட்ட விவாதங்கள், சர்ச்சைகள் நடந்தன. இன்றும் நடக்கின்றன.

எட்டு ஆண்டுகள் முன்பு இந்தப் புத்தகத்தை எதிர்கொள்கிற மற்றும் ஓரளவு மறுக்கிற முறையில், ழோன்-பௌல் ரூபி (Joan-Paul Rubiés) என்ற போர்த்துக்கீசிய ஆய்வாளரின் ஆய்வு பின்வரும் புத்தகமாக வெளியானது - Travel and Ethnology in the Renaissance: South India through European Eyes 1250-1625.

இதில் சுவாரசியம் என்னவென்றால் இந்தப் புத்தகம், காலனியக் காலத்துக்கு மிக முன்பாக, அதாவது பதிமூன்றாம் நூற்றாண்டு தொடங்கி பதினேழாம் நூற்றாண்டு வரை நம்முடைய தென்னகத்துக்கு வந்த இத்தாலிய- மற்றும் போர்த்துக்கீசியப் பயணிகள், சேசுசபைப் பாதிரியார்கள் ஆகியோரின் குறிப்புக்களை வைத்து எழுதப்பட்டிருக்கிறது. அக்காலகட்ட அரபு-பெர்சியப் பயணிகளின் குறிப்புகளும் எடுத்தாளப்பட்டிருக்கின்றன.

இத்தகைய முதல் பயணி, மார்க்கோ போலோ எனலாம். பிறகு அவரைப் போன்ற இத்தாலியப் பயணிகள், அவர்களில் முக்கியமான நிக்கோலோ தா கான்டி (1395–1469), கோழிக்கோடு-நாகப்பட்டினம்-கொச்சியில் தங்கிய லுடோவிக்கோ வர்த்தமா (1470-1517), விஜயநகர அரசுப்பகுதியில் பயணித்த போர்த்துக்கீசியர்கள் ஃபெர்நோ நூனஸ், தொமிங்கோ பயஸ், தென்னகம் வந்த இத்தாலியப் பயணி பியட்ரோ டெல்லா வால், நாம் நன்கறிந்த மதுரை சேசுசபைப் பாதிரியார் ராபர்ட்டோ தெ நொபிலி, அக்காலத்தில் விஜயநகரத்தில் வசித்து அவ்வளவாக அறியப்படாத சேசுசபைப் பாதிரியார் அந்தோனியோ ரூபிநோ ஆகியோரின் குறிப்புகளாக பத்து அத்தியாயங்கள் என விரிகிறது இந்தப்புத்தகம். இவர்களின் குறிப்புக்களை மேற்குலக மறுமலர்ச்சிக்கால முயற்சிகளாகப் பொருள்கொள்கிறது இந்தப் புத்தகம்.

தென்னகத்துக்கு வந்த இந்த மேற்கத்தியர் குறிப்புக்களை ஆராயும் இந்தப் புத்தகம் முன்வைக்கும் முக்கியமான வாதம் இதுதான் - அதாவது, கீழை-உலகம் பற்றிய நீண்ட தேடல் மேலை-உலகத்துக்கு ஏற்கனவே - அதாவது காலனியக் காலத்துக்கு வெகுமுன்பாக இருந்த ஒன்றே. மேலும் ஏற்கனவே கீழை-உலகம் பற்றி மேலை-உலகில் இருந்த பிம்பங்கள், எண்ணங்களைத் தாண்டி இவர்கள் வரவேண்டி இருந்தது. காலனியக் காலத்துக்கு முன்பாக என்று எடுத்துக்கொண்டால் கீழை-உலகம் பற்றித் தனக்கிருந்த பிம்பங்களுடன் மேலை-உலகம் செயல்பட்டது எனக் கூற முடியாது. இந்தப் பயணிகளின் குறிப்புக்களை ஆராய்ந்தால் அப்படிப் பொருள்கொள்ள முடியவில்லை என்கிறார்.

இன்னும் சொல்லப்போனால், இந்தப் பயணிகள், ஏற்கனவே தங்களுக்கு இருந்த புரிதலை இடைநிறுத்தி வைத்துத்தான் கீழை-உலகைப் புரிந்துகொள்ள முற்பட்டார்கள். தங்கள் சாய்வுகள், அச்சங்கள், அகவயப்பார்வைகள், முடிபான கண்ணோட்டங்கள் போன்றவை பயன்தரா என்பதை ஓரளவு உணர்ந்து செயல்பட்டிருக்கிறார்கள் என்கிறார் இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கும் ஆய்வாளர் ரூபி..

இருவேறு கலாச்சாரங்களைச் சார்ந்தவர்கள் சந்திக்கும்போது ஏற்படும் பரிமாற்றப்போக்கை அணுக மொழி-விளையாட்டு (language-game) என்பதான வரையறையைப் பயன்படுத்திப் பார்த்திருக்கிறார் ஆய்வாளர் ரூபி. அதாவது தானற்ற மற்ற-கலாச்சாரத்தை தன்னுடன் ஒப்புநோக்குவதை மட்டும் செய்யாது, மற்ற-கலாச்சாரத்தின் மொழி-விளையாட்டைப் பயின்று அந்தக் கலாச்சாரத்தை வாசிப்பது எனலாம்.

இருபதாம் நூற்றாண்டில் மொழியியல்-கணிதம்-தத்துவம் ஆகியவற்றில் பெயர்பெற்ற லுட்விக் விட்கென்ஸ்டின் (Ludwig Wittgenstein) மற்றும் அவரையொட்டி பிறகான-நவீனத்துவ சிந்தனையாளர் ழான் ஃப்ரான்ஸ்வா ல்யொத்தார் (Jean-François Lyotard) ஆகியோரின் தாக்கத்தில் மொழி-விளையாட்டு என்ற வரையறை வந்திருக்கிறது என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.

இந்தப்போக்கு, பியட்ரோ டெல்லா வால்லின் பயணக்குறிப்புக்களில் ஓர் முக்கியக்கட்டத்தை எட்டுகிறது என்கிறார் ஆய்வாளர் ரூபி. வால், பதினேழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தென்னகத்தில் பயணித்தவர். அப்போது இக்கேரி எனப்படும் துளுநாட்டுப் பகுதி ராணி அப்பக்காவைச் சந்தித்தார். இவர் போர்த்துக்கீசியப் படையினரை எதிர்த்து வெற்றிகரமாகப் போராடியவர் - வால்லின் புத்தகத்தில் உள்ள அந்த சந்திப்பின் சித்தரிப்பை இங்கே காணலாம். இந்த ராணியைப் பாராட்டி விளக்கமாக எழுதினார், வால். தவிர, அப்பகுதியில் நடந்த ஒரு சதி தீக்குளிப்பு சடங்கை தாம் கண்டுவருந்தியதையும் எழுதினார், வால். இந்த எழுத்துக்களை "வாசிக்கிறார்" ரூபி.

ரூபியின் வாசிப்பு சரிதானா என்பது பற்றி தற்போது விவாதங்கள் நடந்து வருகின்றன.

இப்படி வந்த மேற்கத்தியர் பற்றித் தென்னக மக்கள் என்ன நினைத்திருப்பார்கள், அதுவும் யோசிக்கப்பட வேண்டிய விஷயம்தான்!

பகுப்பு - சிந்தனை, வரலாறு

கடலும் மனிதனும் - ஷார்ல் போதலேர்

எப்போதும் கடலைப் போற்றுவாய் நீ!
மனிதா,
கடலே
உன் கண்ணாடி.
அனந்தமாய்ப் புரளும் அலையில்
தேடுவாய்
உன் ஆன்மா.
அதற்கும் குறைவற்ற
வேதனைப் பாதாளம்
உன் மனம்.

உன் போன்றதன் இதயத்தில் மூழ்குவதில்
உன் மகிழ்ச்சி.
கண்ணாலும் கரத்தாலும்
தழுவுகிறாய் அதை.
அடங்காத அதன்
ராட்சத ஒப்பாரியால்
விலகும்
உன் இதயம்
தன் ஓசையினின்றும்.

மங்குவதும் நீ
மனமறிவதும் நீ.
மனிதா,
உன் பிலம்
பல
ஆழம் அறிவதில்லை
யாரும்.

கடலே,
உன் உற்ற செல்வம்
பல
அறிவதில்லை
யாரும்.

அத்தனை கவனமாய்
நீ வைத்திருக்கும்
ரகசியம் பல.

இருந்தும்
எண்ணற்ற ஆண்டுநூறாய்ப்
பரிவற்றுப் பொருதுகிறீர்!
நித்திய எதிரிகாள்,
போரை விட இயலா
சோதரர் நீவிர்!
அத்தனைக்கு
மரணம் படுகொலை மேல்
உங்கள் நேசம்.

- Charles Baudelaire, L'Homme et la Mer, Les Fleurs du Mal.

(த்ஸுநாமிக்கு முன்பாக 2004-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழகம் சென்ற போது தரங்கம்பாடியில் எடுத்த புகைப்படம்)


பகுப்பு - கவிதை

11.4.08

இசை - ஷார்ல் போதலேர்

கடல்போல்
அடிக்கடி என்னை அழைக்கும் இசை
என் வெளிறிய விண்மீன் நோக்கி.
பயணிக்கிறேன் விரிவிசும்பின்
பனிமூட்டக் கூரையடியில்.

மார்பு முன்தள்ள பாய்மரம்போல,
என் நுரையீரல் காற்றடைக்க,
கூடும் அலைபல மீதேறுவேன்
என்னில் இரவல் திரையிட்டு.

என்னுள் சுழலத் தெரிகிறேன்.
சுமைசிக்கும் கப்பலின்
உணர்வெலாம்.

தென்றலோ சூறாவளியோ
உயிரின் படுபாதாளத்தில்
தாலாட்டும் என்னை.
மற்றாங்கே
ஒளிருமென் சஞ்சலம்
பூதக்கண்ணாடியாய்.
புயல்முன்
பேரமைதி.



- Charles Baudelaire, La Musique, Les Fleurs du Mal


போதலேரின் மற்ற கவிதைகள் ஃப்ரெஞ்சிலிருந்து நேரடியாக தமிழில் -

நாள் முடிய
கலைஞர்களின் மரணம்

10.4.08

புனைவும் எதார்த்தமும் குழம்பிய சுயசரிதை

இன்று வாழும் அறிபுனை எழுத்தாளர்களில் முதன்மையானவர் ஆங்கிலத்தில் எழுதும் ஜே. ஜி. பல்லார்ட் (J. G. Ballard).

78 வயதாகும் பல்லார்ட், இங்கே லண்டன் அருகே ஷெப்பர்ட்டன் என்ற இடத்தில் வசிக்கிறார். இந்த இடம், ஒருகாலத்தில் ப்ரிட்டனின் பெரிய ஸ்டூடியோக்கள் இயங்கிய இடம். ஹெச். ஜி. வெல்ஸ் எழுதிய பெயர்பெற்ற The War of the Worlds நாவலில் ஷெப்பர்ட்டன் குறிப்பிடப்படுகிறது.

சிறுபிராயத்தில் சீனாவின் ஷாங்காய் நகரில் வசித்தவர் பல்லார்ட். இரண்டாம் உலகப்போர்க் காலகட்டத்தில் ஜப்பானியர் வசமிருந்த இந்த நகரில் வசித்த அமெரிக்க-ப்ரிட்டிஷ் குடும்பத்தினர் அப்போது மொத்தமாகத் தடுத்துவைக்கப்பட்டனர். அவர்களில் பல்லார்ட்டும் ஒருவர். இதுபற்றி அவர் எழுதியதே The Empire of the Sun நாவல். ஒருபுறம் இது அந்தப்பையனின் வளர்பருவ சரிதை. மறுபுறம் உலகப்போர் வரலாற்றின் மாறு.

இந்த நாவலை இருபதாண்டுகள் முன்பு ஸ்டீவன் ஸ்பீல்பர்க் படமாக்கியிருக்கிறார். வழக்கமான் ஸ்பீல்பர்க் படங்கள் பார்ப்பவர்களுக்கு இந்தப்ப்படம் புது அனுபவம். அந்தப்பையனின் அப்பாவித்தனம் மோதுவது மரணத்துடன். இதில் வெற்றி-தோல்வி என ஏதுமில்லை! ஆனால் பையனுக்கு எங்கோ புதுத்தெளிவு ஏற்படுகிறது... முதலில் ஜப்பானியப் போர-விமானிகளுடன் அவன் பேசுகிறான், அவர்கள் தற்கொலைத்தாக்குதல்களுக்குத் தயாராகிறார்கள். நாவலோ படமோ அவர்களை மோசமாகச் சித்தரிப்பதில்லை. காரணம், பையனின் மொழியில் முதலில் எல்லாமே விளையாட்டாக இருக்கிறது. அவர்களுடைய மரண விளையாட்டில் இணையவும் விரும்புகிறான்... இறுதியில் போரில் காயமுற்று மரணத்தை எதிர்நோக்கும் துன்பமுறும் ஒரு சிறுபெண்ணின் உருவத்தில் உண்மையை உணர்கிறான். விளையாட்டு முடிவடைவதைக் குறிக்கும் வகையில் ஒரு பெரும் வெளிச்சமும் வருகிறது - அதில் அவள் மறைகிறாள். பிறகு அந்தப் பெரும் வெளிச்சம் ஹிரோஷிமா நகர் மீதான அணுகுண்டுவீச்சு என்று தெரிகிறது. அந்தச்சிறுமியைக் கடவுள் சுவர்க்கத்துக்கு அழைத்ததாக் அவன் பொருள்கொள்கிறான்.

பிறகு பல்லார்ட் எழுதிய சிறுகதைகள், நாவல்கள் பல. எனக்குப் பிடித்த நாவல் The Crystal World. ஆப்பிரிக்கக் கண்டத்தில் காட்டுப்பகுதி ஒன்று ஸ்படிகமாக, பளிங்காக மாறுவது.

பல்லார்ட்டின் அறிபுனை எழுத்துக்களைச் சிறப்பாகப் பாராட்டி எழுதியிருக்கிறார், மறைந்த ஃப்ரெஞ்சு சிந்தனையாளர் ழான் போத்ரியார். புனைவும் எதார்த்தமும் குழம்பி ஒருவித அதி-எதார்த்தமாக உலகம் மாறிவிட்டது என்பதை எழுபதுகளிலேயே கண்டுவிட்ட எழுத்தாளர் பல்லார்ட் என்பது போத்ரியாரின் துணிபு. போர்ஹெ, பல்லார்ட் ஆகியோர் குறித்த போத்ரியாரின் பாராட்டு பற்றி சூடான விவாதங்கள் நடந்திருக்கின்றன.

தொண்ணூறுகளில் வித்யாசம் சிற்றிதழ் நடத்தியபோதே பல்லார்ட் பற்றி எழுத முற்பட்டோம். விமர்சகர் எஸ். சண்முகம் இதில் ஆர்வமாக இருந்தார். ஆனால் கைகூடவில்லை.

அலைவரிசை 12 என்ற பல்லார்டின் சிறுகதை எம். எஸ். ஆக்கத்தில் உயிர்மை இதழில் இரண்டு ஆண்டுகள் முன்பு வெளியானது. பல்லார்ட் பற்றித் தமிழில் வேறுயாராவது விரிவாக எழுதியிருக்கிறார்களா, பத்தாண்டுகள் தனிமைவாசத்தில் இருந்ததால் தெரியவில்லை!

கார் விபத்தொன்றில் மனைவியை இழந்தவர் பல்லார்ட். கார் வாகனம்-பாலுறுவு-மரணம் குறித்து பல்லார்ட் எழுதிய Crash நாவல் சில ஆண்டுகள் முன்பு டேவிட் க்ரோனன்பர்க் என்ற இயக்குநரால் படமாக்கப்பட்டு மிகுந்த சர்ச்சை ஏற்பட்டது. கார் வாகனம் குறித்து சிந்திப்பவர்களுக்கு முக்கியமான நாவல்-படம் இது. இப்போது ஜகுவார் மற்றும் லாண்ட் ரோவர் கார்களை இந்தியாவின் டாட்டா நிறுவனம் வாங்கியிருப்பதால் இந்தியாவைச் சேர்ந்தவர்களும் இதுபற்றி சிந்திக்கலாம்!

பல்லார்டுக்குப் புற்றுநோய் இருப்பது சென்ற ஆண்டு தெரிந்தது. மரணத்தை எதிர்நோக்கிய நிலையில் ஆறு மாதங்களில் தம் சுயசரிதையை எழுதியிருக்கிறார். The Miracles of Life என்ற இந்தப்புத்தகம் கடந்த மாதம் வெளியாகியிருக்கிறது. வாசித்து எழுத வேண்டும்.

பகுப்பு - அறிவியல், சினிமா, வரைமொழி

9.4.08

பாரதியின் கடிதங்களில் ஃப்ரெஞ்சு மொழி

1904-1916 காலகட்டத்தில் பாரதி, ஹிந்து பத்திரிகைக்கு எழுதிய கடிதங்கள் 16, திறந்த மடல்கள் இரண்டு, கட்டுரைகள் இரண்டு ஆகியவற்றை, ஆய்வாளர் ஆ. இரா. வெங்கடாசலபதி தற்போது வெளிக்கொண்டு வந்திருக்கிறார். இதுபற்றிய செய்திகளை அண்மையில் வாசிக்க முடிந்தது.

Early views of nationalist-poet Subramania Bharati

Subramania Bharati’s Letters: a treasure trove

இந்தக் கடிதங்கள், பாரதி கருவூலம் - ஹிந்து நாளிதழில் பாரதியின் எழுத்துக்கள் என்பதாக காலச்சுவடு பதிப்பக வெளியீடாக வர இருப்பதாக, சலபதி தெரிவித்திருக்கிறார்.

இதற்காக சலபதியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்! ஏற்கனவே காந்தியார் தமிழ் கற்றுக்கொண்டது பற்றிய விபரங்களை, அவருக்குத் தென்னாப்பிரிக்க-வாழ் தமிழர்களுடன் இருந்த தொடர்பை வைத்து வெளிக்கொண்டுவந்தவர் சலபதி. வ. உ. சி. பற்றிக் காந்தியார் தமிழில் எழுதிய அந்தக் கடிதங்கள் வரலாற்றுரீதியில் மிக முக்கியமானவை. காந்தியார், வினோபா தவிர பிற வடநாட்டுத்தலைவர்கள் தமிழ் அல்லது வேறு தென்னக மொழிகளைக் கற்க முற்பட்டார்களா என்பது சுவாரசியமான ஆய்வாக இருக்கலாம்.

அக்கால பிராமணக்குடும்பத்தில் பிறந்த பாரதியைப் பொறுத்தவரை, ஜாதி-அமைப்பைக் கடந்து வாழ முற்பட்டவர் என்பதற்குப் பல சான்றுகள் உண்டு என்றாலும் எந்த அளவு இதைத் தொடர்ந்து செய்தார் என்பதைக் கறாராகக் கேள்விகேட்கும் காலம் இது! இந்தப் பிரச்னை உள்ளிட்ட பல விஷயங்களை மேலும் அலச, பாரதியின் ஹிந்து கடிதங்கள், கட்டுரைகள் உதவினால் நல்லது.

மேற்கண்ட செய்திகளை வாசிக்கும்போது, இவற்றில் தமிழ்-ஆங்கில இலக்கியம் பற்றி ஏதாவது இருக்கிறதா தெரியவில்லை. ஆனால், ஹிந்து பத்திரிகையின் முதல் நிறுவனர்களில் ஒருவரும் முதல் ஆசிரியருமான ஜி. சுப்பிரமணிய ஐயர் பற்றிப் பாரதி எழுதிய கட்டுரையில் பின்வரும் ஃப்ரெஞ்சு மொழிப் பிரயோகம் வருகிறது:

Il faut de l’audace; encore de l’audace; toujours de l’audace.

"வீரம் வேண்டும், இன்னும் வேண்டும், எப்போதும் வேண்டும்" என்ற பொருள்கொண்டது இது. தாம் புதுச்சேரி சென்று ஆறாண்டுகள் பிறகு - அதாவது 1914-ஆம் ஆண்டில் - இந்தக் கட்டுரையை எழுதியிருக்கிறார் பாரதி என்பது குறிப்பிடத்தக்கது. இதே ஆண்டு பிரசுரமான மாதா மணிவாசகத்தில் அச்சமில்லை... என்றுவருகிற பண்டாரப்பாட்டு இந்தவரியை ஒத்திருக்கிறது. இது, 1789-ஆம் ஆண்டு ஃப்ரெஞ்சுப்புரட்சி பற்ற்றி வாசித்த தாக்கத்தால் எழுதப்பெற்றிருக்கலாம் என நினைக்கிறேன். அந்தப்புரட்சியில் ஈடுபட்டு பிறகு அதன் பயங்கரப்போக்கில் கொல்லப்பட்ட ழார் ழாக் தாந்தோன் (Georges Jacques Danton) பாரீஸ் நகர அவையில் உரையாற்றியபோது கூறியது இதுவே:

Pour les vaincre, il nous faut de l'audace, encore de l'audace, toujours de l'audace, et la France est sauvée.

அதே ஆண்டு செர்பிய தேசியவாதிகளைப் பாராட்டிப் பாரதி எழுதியது The Heroic Ballads of Servia (Serbia) என்ற கட்டுரையும் இருப்பதாகத் தெரிகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டு ஃப்ரெஞ்சு எழுத்தாளரும் அரசியல்வாதியுமான அல்ஃபோன்ஸ் மாரி லூயி தெ ப்ராத் தெ லாமார்த்தின் (Alphonse Marie Louis de Prat de Lamartine) செய்த செர்பியக் கதைப்பாடல் மொழிபெயர்ப்புக்களை வைத்து இதை பாரதி எழுதியதாக சலபதி கூறுகிறார்.

லாமார்த்தின் தாம் கீழை-உலகத்துக்கு மேற்கொண்ட பயணம் பற்றி எழுதிய புத்தகம் Le Voyage en Orient. 1833-ஆம் ஆண்டு இதன் முதல் பதிப்பும் 1861-ஆம் ஆண்டு இரண்டாம் பதிப்பும் வெளியாயின. இரண்டையும் நான் வாசித்திருக்கிறேன்.

இவற்றில் நீஸ் என்ற செர்பிய நகரில் துருக்கிய ஆக்கிரமிப்புத் தளபதிகள், தம்மை எதிர்த்து மரித்த 952 செர்பியர்களின் மண்டையோடுகளை வைத்துக் கட்டிய கோரமான Skull Tower பற்றிய விவரிப்பு இருக்கிறது. 1995-ஆம் ஆண்டு இந்த இடத்துக்கு நான் சென்றிருப்பதால், அதை என் குறிப்பேட்டில் எழுதியும் வைத்திருக்கிறேன்!

Qu'ils laissent subsister ce monument! Il apprendra à leurs enfants ce que vaut l'independance d'un peuple, en leur montrant à quel prix leurs peres l'ont payée.

"செர்பியர்கள் இந்த நினைவகத்தை அப்படியே வைக்கட்டும். விடுதலை எத்தனை மதிக்கத்தக்கது என்பதை, தங்கள் தந்தையர் அதற்கு என்ன விலை கொடுத்தார்கள் என்பதை அடுத்துவரும் சிறார்கள் கற்றுணர இது உதவும்."

அதேபோல இரண்டாம் பதிப்பில் செர்பியக் கதைப்பாடல்கள் சில ஃப்ரெஞ்சு மொழியில் உள்ளன. ஆனால் அவற்றை ஆக்கியது லாமார்த்தின் அல்லர், ஒரு பெண்மணி என்று நினைக்கிறேன். பெயர் மறந்துவிட்டது. தேடவேண்டும்.

ஃப்ரெஞ்சுத் தேசிய கீதம் La Marseillaise பாடலை பாரதி தமிழில் ஆக்கியிருப்பதால், விக்டர் ஹ்யூகோவை நேரடியாக ஃப்ரெஞ்சிலேயே வாசித்திருப்பதாகக் கூறுவதால், பாரதியின் மொழிப்புலமை ஏற்கனவே தெரிந்த ஒன்றுதான்.

அதேவேளை தேசியவாதத்தைத் தாண்டித்தான் என் சிந்தனை இருக்கிறது! நவீன ஃப்ரெஞ்சுக் கவிஞர்கள் ஷார்ல் போதலேர், ஆர்தர் ரைம்போ ஆகியோரைத் தம்முடைய புதுச்சேரி வாசத்தின்போது வாசித்திருக்க வாய்ப்பு இருக்கிறது என்று மறைந்த காரை சிபி கூறியிருக்கிறார். பாரதியின் காட்சி முதலான வசன கவிதைக்கும் ரைம்போவின் Les Illuminations உள்ள உறவு பற்றியும் எழுதியிருக்கிறார். இதுபற்றிய தேவமைந்தன் கட்டுரையை ஆர்தர் ரைம்போ கவிதையை மொழிபெயர்த்தபோது எடுத்துக்காட்டி எழுதியிருக்கிறேன்.

உயிரெழுத்துக்கள் - ஆர்தர் ரைம்போ

பாரதியின் ஃப்ரெஞ்சுத் தொடர்பு இன்னும் ஆய்வு செய்யப்பட வேண்டும் என்பதையே இவை காட்டுன்றன.

8.4.08

மயிற்கொன்றையும் மறைந்த கணிதமும்

படித்து முடிக்க நீண்ட நாட்கள் எடுத்த புத்தகம், குறிப்பாக என் மாணவப் பருவத்தின் நினைவுகளை மீட்டிய புத்தகம் - The Crest of the Peacock - Non-European Roots of Mathematics.

அதாவது, தமிழில் இதை மயிற்கொன்றை - ஐரோப்பா-அற்ற கலாச்சாரங்களில் கணிதத்தின் வேர்கள் எனலாம். மயிற்கொன்றை என இந்தியப்பரப்பு நிபுணர்கள் வர்ணிப்பது கணிதத்தை என்கிறது புத்தகம். கீழே வைக்கவே முடியவில்லை, என்ன ஒரு புத்தகம்!

இதை எழுதியிருப்பவர், ஜார்ஜ் கீவர்கீஸ் ஜோஸஃப். கேரளத்தைச் சேர்ந்தவர். தற்போது இங்கே மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியாரகப் பணியாற்றுகிறார். இதற்கு முன்பு கென்யா போன்ற பல நாடுகளில் ஆசிரியராக இருந்தவர்.

இந்திய விடுதலைப் போராட்டக்காலத்தில் காங்கிரஸ், நீதிக்கட்சி ஆகியவற்றில் இயங்கி, மதுரையில் வழக்கறிஞராகப் பணியாற்றி, காந்தியார், நேரு, பெரியார், ராஜாஜி ஆகியோருடன் நல்ல தொடர்புடன் இருந்த ஜார்ஜ் ஜோஸஃப் இவருடைய பாட்டனார்.

வைக்கம் போராட்டத் தலைவர்களில் முன்னோடி ஜார்ஜ் ஜோஸஃப். ஆங்கிலேய அரசு குற்றப்பரம்பரையினர் என்று முத்திரை குத்திய இனத்தவரை அதிலிருந்து மீட்கப் போராடியவர் ஜார்ஜ் ஜோஸஃப்.

ஜார்ஜ் ஜோஸஃப்பின் வாழ்க்கை பற்றி ஐந்தாண்டுகள் முன்பு ஒரு நூலும் எழுதியிருக்கிறார், கீவர்கீஸ் ஜோஸஃப் - George Joseph - the Life and Times of a Kerala Christian Nationalist என்ற இந்தப் புத்தகத்தின் பெரும்பகுதியை Google உலாவியில் வாசிக்க முடிகிறது. ஜார்ஜ் ஜோஸஃப் பற்றி பழ. அதியமான் எழுதிய அறியப்படாத ஆளுமை என்ற புத்தகத்தைக் காலச்சுவடு பதிப்பகத்தார் கடந்த ஆண்டு வெளியிட்டதாக அறிகிறேன். ஆனால் அது இன்னும் படிக்கக் கிடைக்கவில்லை.

சரி, பேரனின் புத்தகத்துக்கு வருவோம்.

கணிதத்தின் வரலாறாக எழுதப்படுவது, ஐரோப்பியக்கணிதத்தின் வரலாறாகவே இருக்கிறது என்பது இவர் முன்வைக்கும் வாதம். அதாவது, எகிப்தியக்கலாச்சாரத்தின் கண்டுபிடிப்புக்களை அரூபமாக மாற்றிய கிரேக்கத்தில் தொடங்கிய கணிதத்தின் வரலாறு, அரபுக்கலாச்சாரத்தின் ஊடாக ஐரோப்பாவுக்குச் சென்றது, இடையில் இந்திய-சீன-இஸ்லாமியக்கலாச்சாரங்கள் ஆங்காங்கே சில உதவிகளைச் செய்தன என்பது வழக்கமாகக் கற்பிக்கப்படும் கணித வரலாறு. ஆனால் இது ஒரு மேலாதிக்க வரலாறு என்கிறார் இவர்.

ஆப்பிரிக்கக்கலாச்சாரங்களின் கூட்டல்-பதிவுகள், மத்திய அமெரிக்க மாயன் கலாச்சாரத்தின் எண்-கணிதம், பண்டைய எகிப்தியக் கலாச்சாரத்தின் கணிதம், பாபிலோன், இந்தியப் பரப்பு, சீனம், ஜப்பான் மற்றும் அரபு-இஸ்லாமியர்களின் கண்டுபிடிப்புக்கள் என இந்தப்புத்தகம் பிரமாதமாகச் சுழல்கிறது.

கேரளத்தின் சிரியன் கிறித்துவப் பின்னணியில் வளர்ந்தவர் கீவர்கீஸ் ஜோஸஃப். ஆக, இந்திய-மேற்காசியப் பரப்புகள் இடையிலான ஆதிகாலக் கடல்வழிப்போக்குவரத்து மூலம் கணிதம் வளர்ந்து, இந்த வளர்ச்சி கி.பி. ஏழாம்-எட்டாம் நூற்றாண்டுகளில் ஒரு முக்கியக்கட்டத்தை எட்டியிருக்கலாம் என்கிறார்.

இதை அடுத்து கீவர்கீஸ் ஜோஸஃப் சொல்கிற கணித வரலாறு, அதீதமானது. பதினான்கு-பதினேழாம் நூற்றாண்டுகள் இடையில் வளர்ச்சி கண்ட இந்தக் கணிதத்தில் கேரளத்தின் இரிஞ்ஞாலக்குடா, திருச்சூர், கோழிக்கோடு, பொன்னாணி வாசிகளாயிருந்த நம்பூதிரிகள்-நாயர்கள் ஈடுபட்டதாகத் தெரிகிறது. மாதவன், பரமேஸ்வரன், நீலகண்டன், ஜேஷ்டதேவன், அச்சுத பிஷாரடி மற்றும் நாராயணீயம் எழுதிய மேல்பத்தூர் நாராயண நம்பூதிரி, அச்சுத பணிக்கர் வரையான கணித மரபு பற்றி கீவர்கீஸ் ஜோஸஃப் வியந்து பேசுகிறார். யுக்திபாஷா மற்றும் தந்திர சங்கிரகம் ஆகிய வடமொழி நூல்களையும் பற்றித்தான்...

குறிப்பாக, π குறித்த அனந்த-எண்-தொடர் பற்றியும் மேற்கத்திய விஞ்ஞானிகள் ஐஸக் ந்யூட்டன் மற்றும் வில்ஹெம் கோட்ஃப்ரைட் லைப்னிட்ஸ் ஆகியோர் கொணர்ந்த கால்குலஸை ஒத்திருக்கும் analysis பற்றியும் இவர்கள் ஏற்கனவே அறிந்ததாகத் தெரிகிறது.

கேரளத்தின் இந்த மரபு பற்றி ஏற்கனவே ராஜகோபால், ரங்காச்சாரி ஆகியோர் உள்ளிட்ட சில ஆய்வாளர்கள் எழுதியிருக்கிறார்கள் என்றாலும் கீவர்கீஸ் ஜோஸஃப்பின் ஆய்வு சிறப்பாகத் தெரிகிறது. தற்போது ஸி. கெ. ராஜு, ரஞ்சன் ராய் ஆகியோர் இந்த ஆய்வுகளைத் தொடர்ந்து வருகிறார்கள். ஆனால் இந்த மரபு பதினேழாம் நூற்றாண்டுகளில் தொடக்கத்தின் பிறகு ஏன் மறைந்தது அல்லது மறக்கப்பட்டது என்பது தெரியவில்லை!

இதற்கான காரணங்கள் சுவாரசியமாக இருக்கலாம் - "மேற்கத்திய சதி" என்ற வாதம் எடுபடாது என்று நினைக்கிறேன். இந்தக் மரபின் சில கூறுகள் கேரளத்தில் அப்போது வசித்த சேசுசபைப் பாதிரியர்கள் மூலம் ஐரோப்பாவின் தலைநகரங்களை, கல்விக்கூடங்களை, கணித நிபுணர்களை எட்டியிருக்கலாம் என்றும் கூறுகிறார் கீவர்கீஸ் ஜோஸஃப்.

கீவர்கீஸ் ஜோஸஃப்பின் அணுகுமுறையின் முக்கிய அம்சம், பழம்பெருமை பேசாமல் எல்லாக் கலாச்சாரங்களையும் சமநிலையில் ஆராய்வது - உதாரணமாக், இந்தியப்பரப்பைப் போல சீனத்தில் கணிதத்தையும் விவரிக்கிறார். மாட்ரிக்ஸ் கணிதம், முக்கோணங்கள் மூலம் algebra-வின் உயர்-சமன்பாடுகளை ப்ளெய்ஸ் பாஸ்கால் பிறகு அணுகிய முறை, எதிர்மறை-எண்கள் போன்றவற்றைச் சீனாவின் கணித நிபுணர்கள் அறிந்திருந்தார்கள் என்கிறார் இவர்.

இதே போல, அரபு-இஸ்லாமியர்களின் கணிதத்திறமை பற்றியும் பிரமாதமாக எழுதுகிறார் - பின்னங்கள், எண-கணிதம், algebra மற்றும் யூகளிடைத் தாண்டிய ஜியோமிதி ஆகியவை பற்றி ஒரு முழு அத்தியாயமே உள்ளது.

கீவர்கீஸ் ஜோஸஃப் புத்தகத்தின் சிறப்பு, எகிப்தியக்கலாச்சாரத்தின் கணிதச்சாதனைகளை ஆப்பிரிக்கக்கலாச்சாரங்களில் நீட்சியாகக் காண்பது - வேறு எந்த ஆய்வாளரும் இதைச் செய்து நான் வாசித்ததில்லை!

குறிப்பு - இந்தப்புத்தகம் வெளியாகிப் பதினைந்து ஆண்டுகள் ஆகிவிட்டன். மூன்றாம் பதிப்பு வர இருப்பதாகத் தெரிகிறது. இதன் மலையாள மொழியாக்கம் சென்ற ஆண்டே வந்துவிட்டது என்றும் தெரிகிறது!

நாள் முடிய - ஷார்ல் போதலேர்

ஒளிமயங்கும் மாலையில்
ஓடும்
ஆடும்
வளையும்
வாழ்வு
அறிவற்று
அடங்காமல்
இரைச்சலாய்.
தொடுவானில்
களிப்பாய் எழும் இரவும்
உடன்
பசிக்கும் ஏன் எதற்கும்
ஆறுதல் தர,
வெட்கத்தை
ஏன் எதையும் துடைக்க,
கவி கூறுவதோ
"இறுதியாக,
என் முதுகின்
எலும்புக்கணு
பலவென
இளைப்பு நாடும்
ஆன்மா -
இறுதிச்சடங்குபல
நினைக்கும்
இதயம் -
பிறகென் முதுகும்
கிடத்தி,
புத்துயிர்க்கும் நிழல்களே,
உருள்வேன் உம் திரைகளில்"
என

- Charles Baudelaire, La Fin de la journée, Fleurs du Mal

பகுப்பு - கவிதை


போதலேரின் மற்ற கவிதைகள் ஃப்ரெஞ்சிலிருந்து நேரடியாக தமிழில் -

கலைஞர்களின் மரணம் - ஷார்ல் போதலேர்

4.4.08

மிஷெல் ஸெர் பற்றி - 1

வரலாற்றில் கலையும் அறிவியலும் சிலரிடம் இணைவதைப் பார்க்கிறோம், அவர்களை genius என்றழைத்து அவர்களில் மாத்திரமே இவை இரண்டும் இணைவதாக ஏற்கிறோம். அப்படிப்பட்டவர்களாக நன்கு அறியப்பட்டவர்களில் ஒருவர், இத்தாலிய மறுமலர்ச்சிக்கால ஓவியர்-வடிவமைப்பாளர் லியனார்டோ டா வின்சி (Leonardo da Vinci). அடுத்தவர், ஐரோப்பிய அறிவொளிக்கால ஜெர்மன் கவிஞர்-விஞ்ஞானி யோஹான் வுல்ஃப்காங் ஃபான் கூதெ (Johann Wolfgang von Goethe).

கணிதமும் இசையும் இணைவது கிரேக்க அறிஞர் பைதகோரஸில்; சிற்பமும் இசையும் நடனமும் இணைவது பெயரறியாத சோழர்கால வினைஞர்களிடம்; கணிதமும் தத்துவமும் இணைவது ஃப்ரெஞ்சு சிந்தனையாளர ப்ளெய்ஸ் பாஸ்கால் (Blaise Pascal) மற்றும் ஜெர்மன் சிந்தனையாளர் கோட்ஃப்ரைட் வில்ஹெம் லீப்னிட்ஸ் (Gottfried Wilhelm Leibnitz) ஆகியோரிடம் என்கிறோம்.

இந்த இணைவுகள் அபூர்வம் என்று நினைக்கவும் பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறோம். ஆனால் இது ஒன்றும் அப்படி அபூர்வமல்ல, தனிமனிதர்களிடம் மாத்திரம் நிகழ்வதுமல்ல, நிஜத்தில் கலை மற்றும் அறிவியலுக்கு இடையில் பயணிப்பது, இரண்டின் எல்லைகளை உடைத்துப்போடுவதே சிந்தனை, பரிசோதனை என்பது - இது சமகால ஃப்ரெஞ்சு சிந்தனையாளர் மிஷெல் ஸெர் (Michel Serres) மேற்கொண்டிருக்கும் துணிபு. இத்தகைய அசாதாரணமான பயணமே இவருடைய சிந்தனை.

சுமார் நாற்பது ஆண்டுகளாக, இருபத்தைந்துக்கும் மேற்பட்ட புத்தகங்களையும் எண்ணற்ற கட்டுரைகளையும் எழுதிக்குவித்து எண்பது வயதை எட்டும் நிலையிலும் ஃப்ரான்ஸிலும் அமெரிக்காவிலும் இயங்கும் தம்முடைய மாணவர்களுக்கு வழிகாட்டிக்கொண்டிருக்கும் இளைஞர், மிஷெல் ஸெர்!

என்ன துறை என்றே வகைப்படுத்த முடியாதபடி துறை-எல்லைகள் மயங்குகிற இவருடைய புத்தகங்களில் அறவியல், அறிவியல், தொடர்பியல், கணிதம், இலக்கியம், ஓவியம், சிற்பம், தத்துவம், வரலாறு என்று எல்லாமாகக் கலைத்துப்போட்டபடி கிடக்கின்றன. இவ்வகையில், மிஷெல் ஃபூக்கோ, ழில் டெல்யூஸ் ஆகிய மறைந்த சமகால ஃப்ரெஞ்சு சிந்தனையாளர்களின் சிந்தனையுடன் இணைந்தும் பிரிந்தும் செல்வன மிஷெல் ஸெர்ரின் ஆய்வுகள்.

பத்தாண்டுகள் முன்பு மிஷெல் ஸெர் தம் துணைவியாருடன் சென்னை வந்திருந்த போது இவர் நீண்ட உரையை முதன்முதலாகக் கேட்க முடிந்தது. மிஷெல் ஸெர்ரின் அன்றைய சென்னை உரைக்கு வந்தவர்களில் ஒருவரான வெ. ஸ்ரீராம், சில ஆண்டுகள் முன்பு காலச்சுவடு இதழில் காட்டுப்பன்றியா, நரியா என்ற தலைப்பில் மிஷெல் ஸெர் பற்றிய ஒரு குறிப்பை எழுதியிருக்கிறார்.

மிஷெல் ஸொ் புத்தகங்கள் பற்றி விரிவாக எழுதவேண்டும்.

பகுப்பு - அறிவியல் சிந்தனை வரலாறு

3.4.08

பதிவுகளும் நானும் இதுவரை - 3

திணை இசை சமிக்ஞை என்ற என் பதிவு இப்போது மறு அவதாரம் எடுத்திருக்கிறது.

"நன்கறிந்த எழுத்தாளர்கள்" பின்னூட்டங்களை அனுமதிப்பதில்லை ஏன் என்பது பற்றி வெங்கட் மற்றும் பிரபு ராஜதுரை தொடங்கிய பதிவுகளில் விவாதம், கடந்த இரண்டு நாட்களாகத் தொடர்கிறது.

வலைப்பதிவுகள் செயல்படும் விதம் - 1 என இப்போது வெங்கட் இதுபற்றித் தனியான பதிவே செய்திருக்கிறார்.

செத்த மரங்களில் - அதான் காகிதங்களில் - செதுக்கும் கலைஞர்கள் என வெங்கட் முதலில் எழுதிய பதிவுக்கு, பச்சைமரத்தில் பதியும் பதிவர்கள் என விவாதத்தை மேலெடுத்துச் சென்றிருக்கிறார், ஜமாலன். இதில் பத்தி-எழுத்தையும் படைப்பிலக்கியம், கோட்பாட்டுரீதியான விமர்சன எழுத்தையும் பிரித்துப்பார்க்க வேண்டும் என்ற வாதம் இருக்கிறது.

தமிழில் எழுதிக்கொண்டிருப்பவர்களுக்கு - ஏன் எந்த மொழியாக இருந்தாலும் எழுதிக்கொண்டிருப்பவர்களுக்கு - ஊடக ரீதியில் சவாலாக இருப்பது இணையம், இணையத்தின் துரிதம் என்பது வாசகரின் உடனடி வெளிப்பாட்டை, மறுமொழியைச் சாத்தியப்படுத்திய பிறகு அதைத் தவிர்ப்பானேன், தவிர்த்தால் நீங்கள் காலாவதியாகிவிடுவீர்கள் என்கிறார் வெங்கட்! எழுத்தைத் தாண்டி ஓவியம் போன்ற துறைகளிலும் இது நடக்கும் என்று கட்டியமும் கூறுகிறார்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துக்கு அடுத்துவரும் கனவுலகைக் காட்டி (utopia) நிதர்சன உலகின் பிரச்னைகளைக் கடக்க முற்படும் தன்மை உண்டு! ஆனால் அந்தக் கனவு சாத்தியமாகும்போது அத்துடன் ஒரு எதிர்-கனவும் (dystopia) சேர்ந்து சாத்தியமாகும் நிலைமையை வரலாறாகக் காண்கிறோம்.

அதாவது, ஒருபுறம் நோக்கங்கள் மற்றும் எதிர்பார்த்த-, விரும்பிய விளைவுகள் மறுபுறம் இவற்றைத் தாண்டிய எதிர்-விளைவுகள் எனப் பிரிக்கலாகாது, ஒருங்கே காண வேண்டும் என்கிறேன். அணுசக்தியிலிருந்து விண்வெளி இயல் வரை பலதை வைத்து இதை விளக்க முடியும். ஆதியில் மனித இனம் விளையாட்டையும் கொலைக்கருவிகளையும் அடைந்தது ஒருங்கேதான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அறிவியலும் தொழில்நுட்பமும் இலக்கியமும் தத்துவமும் பயின்றவன் என்ற முறையில் துறைச்சட்டகங்களைத் தாண்டி இயங்கும் நான் என் எழுத்துக்களில் இந்தப் பிரச்னைப்பாட்டை நிறையவே பேசியிருக்கிறேன்.

இணையமும் இதற்கு விதிவிலக்கல்ல. குறிப்பாக, வெங்கட் விவரிக்க முற்படும் படைப்பு-சார் இயக்கம், விவாதம் தவிர்த்த அசட்டுத்தனமான மத-, ஜாதி-, இன- mobilisation என்பதற்கான கருவியாக இணையம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு தமிழ், இந்திய, தெற்காசிய, உலகப்பரப்பில் பல உதாரணங்கள் நமக்குத் தெரியும்.

அதே நேரம் கலையின்-, அறிவியலின் அடிப்படை இயக்கம், பரிசோதனைக்குத் தயாராக இருப்பதாகும். அறிவியல் பயின்றவன் என்ற நிலையில் இந்தப் பரிசோதனைக்கு நான் தயார். இதை அடுத்து என் இணைய தளத்தின் பின்னூட்டப்பெட்டி திறந்திருக்கும் - இன்னும் ஒரு மாதத்துக்கு. ஒட்டியும் வெட்டியும் வரும் கறாரான கருத்துக்கள் நிச்சயம் இடம்பெறும் என்று உறுதியளிக்கிறேன்.

முதலில் மட்டுறுத்தல் இருக்கும். அதுவும் ஒருகட்டத்தில் நீக்கப்படலாம்.

இந்தப் பரிசோதனையின் வெற்றி-தோல்வி இரண்டுமே ஒருங்கே இருப்பது நம் கையில்!

பகுப்பு -அறிவியல், ஊடகம்

2.4.08

இரண்டு கடிதங்கள், இரண்டு பதில்கள்

அன்புள்ள நாகார்ஜுனன்,

சில நாட்களாக உங்கள் பதிவுகளைப் படித்துவருகிறேன். உங்கள் வலைத்தள முகவரி தற்செயலாகத்தான் எனக்குக் கிடைத்தது. எந்தத் திரட்டியிலும் இல்லாமல் உங்கள் பக்கத்தை 1,350 பேர் படித்ததே பெரிய விஷயம்தான். அப்படிப் படிக்கிறவர்கள் ஏதேனும் எழுத நினைத்தாலும் உங்கள் மின்னஞ்சல் முகவரி அனைத்துப்பக்கங்களிலும் தெரிவதில்லை. சில சமயம் உங்களுக்கு எழுத வேண்டும் என்று தோன்றும்போது முகவரியைத் தேட வேண்டியதாகி விடுகிறது. சில சமயம் அது கண்ணில்படும் போது உங்களுக்கு அனுப்ப ஒன்றும் தோன்றியிருக்காது.

இணையத்தில் serious எழுத்துகளுக்கு இடம் இல்லை என்பது வெறும் கற்பனை. எழுத ஆள் இல்லாமல் குப்பைகள் எஞ்சி நிற்கின்றன. உங்களைப் போன்றவர்கள் எழுதத்தொடங்கும்போதுதான் மாறும்.

தொடர்ந்து எழுதுங்கள்.

அன்புடன்
முருகேஷ்


அன்புள்ள முருகேஷ்,

குறைகள் நிவர்த்தி செய்யப்படும். பின்னூட்டங்கள் மட்டுறுத்தலுடன் வெளியாக்வும் விரைவில் ஏற்பாடு செய்யப்படும்.

நன்றி.
நாகார்ஜுனன்

------------------------------

அன்புள்ள நாகார்ஜுனன்,

இந்தியாவில் அரசியல் கைதிகள் பற்றிய உங்கள் பதிவை வாசித்தேன்.

அதில், இந்திய அரசியல்-பொருளாதாரத்தின் தற்போதைய நிலை குறித்த உங்கள் பகுப்புகள் முக்கியமானவை. அத்துடன் இந்தப்பிரச்னையை, குடியுரிமை அல்லது மக்கள் உரிமை சார்ந்த பிரச்னையாக மட்டும் அணுகாமல், கோட்பாட்டளவில் அணுகியிருப்பதும் முக்கியமானது.

கீழை நாடுகளின், குறிப்பாக இந்தியாவின் குற்றவியல் பற்றிய வரலாற்றை ஆய்வதன் அவசியத்தை அனுமானிக்கிறது இந்தப்பதிவு. அதாவது, வரலாற்றுரீதியாக குற்றங்களைப் பற்றிய கட்டமைப்புகள் எப்படி உருவாக்கப்படுகின்றன என்பதும் தற்போதைய சூழலில் குற்றங்களாக மாற்றப்பட்டவை என்ன, அவற்றுக்கான தண்டனைமுறைகள் என்ன, அவை எப்படி மக்களால் ஏற்கப்படுகின்றன என்பனவும் முக்கியமாகின்றன.

“அதே நேரம் இந்தப் பிரச்னையில் வரலாற்றுப்பார்வை முக்கியம் எனலாம். அதாவது, காலனித்துவ- மற்றும் நவீன இந்தியாவின் அரசியல்-வரலாற்றையே இந்த அரசியல்-கைதிகள் நடத்தப்படும் முறைகள் குறித்த வரலாற்றிலிருந்து அணுகலாம் என்கிறேன்” என்கிற தங்கள் வாசகங்கள் முக்கியமானவை. இவை ஒரு புதிய வரலாற்றைக் கட்டமைப்பதற்கான கோட்பாட்டுப்பார்வையைத் தருகின்றன.

சிறைகள், பள்ளிக்கூடங்கள், மருத்துவ மனைகள் மற்றும் "மனநோய்" விடுதிகள் ஆகியவற்றின் கட்டிட அமைப்பும் அவற்றின் கோட்பாட்டு அமைப்பும் ஒருங்கிணைகிற புள்ளிகள் முக்கியமானவை. உடல்களைப் பிரிப்பதும் பயிற்றுவிப்பதும் அதன்வழி சமூக்க்கண்காணிப்பு-எந்திரத்தை கட்டமைப்பதும் முக்கியமானவை. இவை பற்றி உரையாட நிறைய உள்ளது.

இந்திய- மற்றும் தமிழகச் சூழலில் குற்றம்/தண்டனை/கண்காணிப்பு என்கிற முப்பரிமாண-அச்சுகளின் இயக்கம் பற்றிய ஆய்வுகள் அதிகாரத்தைப் புரிந்துகொள்ள உதவும்.

காந்தியைக் கொலை செய்த கோட்ஸேவை அப்போது "மனம் சிதைந்தவன்" என்று நேரு கூறிய வாசகம் முக்கியத்தவம் வாய்ந்த ஒன்று. அந்த வாசகத்தைப் பொய்யாக்க கோட்ஸே எடுத்துக்கொண்ட முயற்சியே அவனுடைய பிந்தைய பேச்சுக்கள். ஆக, குற்றமும் மனச்சிதைவும் ஒருங்கிணைந்து புரிந்துகொள்ளப்படும் புள்ளிகள் முக்கியமானவை.

இந்தப்பதிவு பலவிதங்களில் முக்கியமான ஒரு கோட்பாட்டு அடிப்படையைப் பேசுகிறது. மேலதிகமாக இதன் விரிவாக்கத்தை எதிர்பார்க்கிறேன்.

அன்புடன்
ஜமாலன்

அன்புள்ள ஜமாலன்,

உண்மைதான். அரசியல்-கைதிகள் என்பவர்கள் ஒருபுறம் வெகுஜனப் பிரச்னைகளிலிருந்தும் மறுபுறம் அரசு-எந்திரக் கண்காணிப்பு, வன்முறை, எதிர்-வன்முறை மற்றும் தங்கள் கோட்பாடு ஆகியவை இணையும் புள்ளியிலும் உருவாகிறார்கள். ஊடகச்சித்தரிப்பு வேறு சேர்ந்துவிடுகிறது.

இந்தியப்பரப்பில் அரசியல்-கைதிகளைப் பற்றிய வரலாற்றுநோக்குள்ள ஆய்வாக வந்திருப்பது, நானறிந்த வகையில், ஒரே ஒரு புத்தகம்தான். அது, தற்போது டில்லி பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் உஜ்வல் குமார் சிங் பத்தாண்டுகள் முன்பு எழுதிய Political Prisoners in India என்ற புத்தகம். நெருக்கடிநிலை காலகட்டத்தில் நின்றுவிடும் இந்தப்புத்தகத்தில்கூட குற்றமும் மனப்பிறழ்வு அல்லது மனச்சிதைவு என்று இப்போது அழைக்கப்படும் பைத்தியம் என்ற மர்மமும் இணையும் புள்ளி ஆராயப்படுவதில்லை என நினைக்கிறேன்.

இங்கே குற்றத்தைத் தாண்டி பைத்தியம் என்ற எப்போதுமான மர்மத்துக்குப் பரிமாணங்கள் பல என நினைக்கிறேன். ஒரு பெரும் மக்கட்கூட்டம் சரி என்று சில அரசியல்-செயல்களைத் தீர்மானிக்குமுன்பாக, சிலர் பொதுப்போக்கிலிருந்து விலகி அவற்றைப் பரிசோதனைகளாகச் செய்துபார்க்க வேண்டியிருக்கிறது. அவர்களைப் பொறுத்தவரை, ஒரு பித்த நிலையில்தான் இது சாத்தியமாகிறது. ஒரு முன்னோடி என்ற நிலையில் காந்தியாரின் பலவித அரசியல்-அறவியல் பலவிதப் பரிசோதனைக்ளும் இப்படித்தான் சாத்தியமாயின.

வன்முறை-குற்றச்செயல் என்பதைத் தாண்டியும்கூட பைத்தியத்துக்கும் இந்திய அரசியலுக்கும் நிறையத் தொடர்பு இருப்பதாகவே தெரிகிறது. காலனிய- எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு, காந்தியார் பின்னால் அலைந்த தொண்டர்கள் பலர், ஒரு காலகட்டத்தில் பித்தர்களாகவே அழைக்கப்பட்டார்கள். அவர்களுடைய குடும்பங்கள் சிதைந்தன. காந்தியாரின் குடும்பமும் சிதைந்தது. இதை, காந்தியார்-அவர் மகன் ஹரிலால் குறித்து அண்மையில் வந்திருக்கும் திரைப்படம் பற்றிய தம்முடைய ஆய்வில், பிரேம் பிரமாதமாகச் சுட்டிக்காட்டியிருப்பார். தீராநதியில் அண்மையில் வெளியான இந்தக் கட்டுரையை வாசித்த என் அம்மா, எங்கள் குடும்பத்தாரிடம் இருந்த இதே அனுபவங்களை நினைவுகூர்ந்து என்னிடம் விவரமாகப் பேசியிருக்கிறார்.

தீவிர வலதுசாரியான கோட்ஸேவைப் பொறுத்தவரை, அரசியல்-கோட்பாடு ஒரு paranoia நிலை மூன்றும் அந்த மனிதரிடம் இணைந்தது என நினைக்கிறேன். மனச்சிதைவு என நேரு விவரித்ததும் இதைத்தான் எனக் கருதுவேன். ஆனால் கோட்ஸே தம்முடைய அரசியல்-தத்துவமும்செயல்பாடும் "அறிவார்ந்தவை, பித்தமற்றவை" என நிறுவ முற்பட்டார். காந்தியாரைக் கொல்லும்போது கோட்ஸே, அவரைத் தந்தையாகவே கருதினார், அதாவது "அன்னை பாரதத்துக்குத் துரோகமிழைத்தவர்" என்று கருதினார் என்பதும் காந்தி கொலைக்குற்ற வழக்கை நீதிமன்றத்தில் விசாரிக்கும்போது தெரிந்தது.

கோட்ஸே, அவர் சகா ஆப்தே இருவருக்கும் மரண தண்டனை வேண்டாம் என்று காந்தியாரின் குடும்பத்தினர் சிலர் கடிதமே எழுதினார்கள். ஆனால், கோட்ஸே மரண தண்டனையை விரும்பி ஏற்றார் (ஒரு counterfactual ரீதியில் பார்ப்போம் - நேருவும் ராஜேந்திர பிரசாத்தும் மரண தண்டனை வேண்டாம் என்ற கோரிக்கையை ஏற்றிருந்தால் என்னவாகியிருக்கும்?) கோட்ஸே, தம்முடைய paranoia அரசியல் இந்தியப்பரப்பில் என்றென்றைக்கும் தொடர வேண்டும் என்பதற்காகத்தான் இவ்வாறு செய்தார் எனலாம்! இதை உணர்ந்ததால்தான் காந்தியாரின் அரசியல்-சமுதாய நிலைப்பாடுகளுக்காக அவரைக் கடுமையாக விமர்சித்தும் கண்டித்தும் வந்த பெரியாரும் அம்பேத்கரும் காந்தியாரின் கொலையைச் செய்தது தங்களுக்கெல்லாம் எதிரான அரசியல்-சமுதாய சக்தி என்பதைச் சட்டென்று புரிந்துகொண்டுவிட்டார்கள்.

ஆக, அந்தக்கொலை பெரும் துக்கமாக அன்று புரிந்துகொள்ளப்பட்டது. ஐம்பதுகளில் வந்த பல இந்தி, தமிழ் வெகுஜனத் திரைப்படங்களில், நாயகன் தன்னை "நான் ஒரு பாவி" என அடிக்கடி நொந்துகொள்வதைப் பார்க்கலாம். திராவிட இயக்கத்தில் நாட்டம் கொண்டவர்களின் படங்களில் இது அதிகமாக இருந்தது. ஒருவகையில் இது ஆச்சர்யம்தான் என்றாலும் இன்னொரு வகையில் இது எதிர்பார்க்கத்தக்க ஒன்றே. அதாவது, அந்தத் திரைப்படங்களின் கதையாடல் எப்படியிருந்தபோதும் அதன்வழியாக காந்தியாரின் கொலை, ஒரு பெரும்நிகழ்வாக இந்தச் சமுதாயத்தில் பலரால் பொருள்கொள்ள்ப்பட்டது என்று கூறலாம்.

எட்டாண்டுகள் முன்பு வந்த ஹே ராம் வெகுஜனப்படமும் அதுபற்றி நீங்கள் செய்ய முற்பட்ட ஆய்வும் இதை நேரடியாகப் பேசுகின்றன. தவிர, வலதுசாரி அரசியலின் paranoia நிலை இன்னும் தீவிரப்பட்டிருப்பதை தற்கால அரசியலின் மூலம் அறிகிறோம்.

இடதுசாரி அரசியலில் அதுவும் தலைமறைவு வாழ்க்கையில் ஈடுபடுவதற்கும் ஒருவித பித்த நிலை தேவையாக இருந்திருப்பது எனக்குத் தெரியும். கேரளம், மேற்கு வங்கம் போன்ற இடங்களில் இது தீவிரமாக இருந்திருக்கிறது. இதுபற்றி ஆங்காங்கே இலக்கியத்தில் வாசிக்க முடிகிறது. ஆனால், இதுபற்றித் தீவிர ஆய்வுகள் இல்லை என நினைக்கிறேன்.

தொடர்ந்து எழுதுகிறேன்.

அன்புடன்
நாகார்ஜுனன்

பதிவுகளும் நானும் இதுவரை - 2

"நன்கறிந்த எழுத்தாளர்கள்" பின்னூட்டங்களை அனுமதிப்பதில்லை ஏன் என்பது பற்றி வெங்கட் மற்றும் பிரபு ராஜதுரை தொடங்கிய பதிவுகளில் சூடான விவாதம் நடந்துவருகிறது.

இதில் என் பதிவைப் பற்றியும் எழுதப்பெற்றிருக்கிறது.

பின்னூட்டங்களை ஏன் அனுமதிக்கவில்லை - ஆனால் மின்-அஞ்சல்களை அனுப்பலாம் என்பதை விளக்கி நேற்றுத்தான் எழுதினேன்.

இந்த விவாதத்தில் வெங்கட் இப்படி எழுதியிருக்கிறார்:

"இன்று அச்சு ஊடகங்களில் எழுதுபவர்கள் பலரும் விஷயதானத்திற்கு இணையத்தையே முற்றாக நம்பியிருக்கிறார்கள். வலைக்குறிப்புகளும் இணைய சஞ்சிகைகளும் இவர்கள் எழுதுபனவற்றுக்கு அடிப்படையாக இருப்பதை அடையாளம் காணமுடிகிறது. ஆனால் அச்சிலேறுபவை எல்லாம் இணைய உலகில் வ(வா)சிக்கும் பலரையும் சென்றடைவதை இவர்கள் அறிவதில்லை. இந்த வாசகர்களின் உலகம் வேறு, இங்கே பிம்பங்கள் தொழப்படுவதில்லை. அது எழுத்தாளர்-வாசகர் என்ற இடைக்கோடு அழிந்துபோன வேற்று உலகம் என்பதைப் பழமையில் ஊறிய படைப்பாளிகள் அறிவதில்லை. மேல் நின்று உபதேசிப்பது இங்கே எடுபடாது; எதுவுமே சக-விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவையல்ல. கறாரான விமர்சனங்கள் முன்வரும்பொழுது அவர்களால் அந்த வீச்சை எதிர்கொள்ள முடிவதில்லை. மறுபுறத்தில் இவ்வூடகத்தில் கிடைக்கும் பல வசதிகள் அவர்களைத் தொடந்து கவர்ந்திழுத்துக்கொண்டே இருக்கின்றன. இதனால்தான் இவர்களில் பலரும் மறுபிறவி எடுத்து வலைப்பதிய வருகிறார்கள். இந்த முறை அதீத கவனத்துடன் மறுவினைக்கான வாசலை மூடிவிட்டுத்தான் தங்கள் கடையை விரிக்கிறார்கள்..."

ஒரு விஷயம் - என் எழுத்துக்கு இணையத்தை மாத்திரம் நான் நம்புவதில்லை. புத்தகங்கள் எப்போதும் உண்டு. எல்லாவற்றுக்கும் அடிப்படையாக நான் முக்கியமாகக் கருதும் அறிவியல்-இலக்கிய-தத்துவ-வரலாற்றுப் பிரச்னைப்பாடுகள் என் சிந்தனையில் எப்போதும் இடம்பெறும்.

இருந்தாலும் இணையம் என்பது வேறுவகை வடிவம் என்பதால் வெங்கட் சொல்வதில் ஒரு நியாயம் இருக்கிறது. “பெரிய எழுத்தாளர்களுக்கு” வெங்கட் விட்டிருப்பது நிச்சயம் ஒரு சவால்தான். ஒரு பரிசோதனையாக அதை ஏற்கிறேன்!

என் தளத்தில் பின்னூட்டங்களை இன்றிலிருந்து அனுமதிக்கிறேன் - விரைவில் அதற்கான மாற்றங்கள் செய்யப்படும். அடுத்த ஒரு மாதம்வரை என் இணைய தளத்தின் பின்னூட்டப்பெட்டி திறந்திருக்கும். ஒட்டியும் வெட்டியும் வரும் கறாரான கருத்துக்கள் நிச்சயம் இடம்பெறும் என்று உறுதியளிக்கிறேன்.

அதேவேளை நேற்றுக் கூறியது போல “சூப்பர்!”, “பிச்சிட்டீங்க…”, “பயனுள்ள பதிவு”, “புரியலே”, “post-modernism ஒழிக” போன்ற வகை எழுத்துக்களை வரவழைத்து, போட்டு, நன்றிதெரிவிக்க விருப்பமில்லை; போடவில்லை என்றால் “கருத்து-சுதந்திரத்தை மறுக்கிறீர்களா?” என்ற வம்பை வாங்க வேண்டாமே என்பதால்தான் பின்னூட்டங்கள் இதுவரை இடம்பெறவில்லை. தவிர வேறு காரணங்கள் இல்லை!

1.4.08

பதிவுகளும் நானும் இதுவரை - 1

பிப்ரவரி ஆறாம் நாள் தமிழில் பதிவுகள் எழுதத்தொடங்கி இரண்டு மாதங்கள் ஆகப்போகும் நிலையில் ஒரு review-வுக்கான நல்ல நேரமிது. அதாவது கடந்த 56 நாட்களில் 58 பதிவுகளை எழுதியிருக்கிறேன். இவற்றில் இரண்டு பதிவுகள், விற்பனையில் இல்லாத என் இரண்டு புத்தகங்கள் பற்றியவை. ஆக, நாளுக்கு ஒரு பதிவு எனலாம். மீதமான 56 பதிவுகளில் தீராநதி, உயிர்எழுத்து, பவளக்கொடி இதழ்களில் வெளிவரும் என் ஆக்கங்கள் சில, உடனே இங்கே இடம்பெற்றிருக்கின்றன. ஆங்கிலத்தில் ஒரே ஒரு பதிவு.

என் முந்தைய ஆக்கங்களில் இரண்டை மட்டுமே இங்கு வாசிக்க முடியும். ஆக, ஏற்கனவே அச்சில் வந்த பலவும் இங்கே இல்லை. அந்த வகையில் இணையத்துக்காக பிரத்யேகமாக நிறைய எழுதியிருக்கிறேன் எனலாம் - அரசியல், இலக்கியம், அறிவியல், தத்துவம், இசை, ஊடகம் என துறைச்சட்டகங்களை மீறி இயங்கியிருக்கிறேன்.

இந்த இரண்டு மாதங்களில் பல நிகழ்வுகள் - ஆனால் எவை முக்கியம் என்பதில் ஒரு சமநிலை உண்டு என நினைக்கிறேன். பொதுவாக, தமிழ்பேசும் உலகை, இந்தியச்சூழலைப் புறத்திலிருந்தும் - அதாவது ஒன்றுக்கு இரண்டடி பின்சென்றும் - அஃதற்ற மற்ற உலகை அதிகமாகவும் காண்பதாக இருப்பவை இந்தப்பதிவுகள்.

இன்னொரு விஷயம் - கடந்த 35 நாட்களில் என் பதிவுகளை 1,350 பேருக்கு மேல் வாசித்திருக்கிறீர்கள் என்றும் வாசகருக்கு தலா நான்கு பக்கங்கள்வரை என 4,700 முறை இந்தப்பக்கங்கள் காணப்பெற்றிருக்கின்றன என்றும் தெரிகிறது. இணையத்தில் வாசிக்கும் பழக்கம் சிற்றிதழ் வாசிப்பது போலல்ல, அது வேறுவகை வாசிப்பு என்பதால் உங்கள் கவனத்தைத் தக்க வைப்பதில் இந்தப்பதிவுகள் வெற்றி பெற்றனவா, இல்லையா என்பதை உங்கள் எண்ண ஒட்டத்துக்கு விட்டுவிடுகிறேன்.

தமிழில் பல இணையப்பதிவுகளை வாசிக்கும்போது இணையத்தில் serious எழுத்துக்கு இடம் உண்டு என்று தெரிகிறது. அதே சமயம் சொந்த இணையப்பக்கம் வைத்திருக்கும் மற்ற தமிழ் எழுத்தாளர்களுடன் இந்தப்பக்கத்தை ஒப்பிடாமலிருந்தால் சந்தோஷம்தான்!

இன்னும் சில விஷயங்கள் - எந்த ஒரு தகவல்-திரட்டும் தளத்துடனும் இணையவில்லை நான். தவிர, இங்கே பின்னூட்டங்கள் இல்லை. "சூப்பர்!", "பிச்சிட்டீங்க...", "பயனுள்ள பதிவு", "புரியலே", "post-modernism ஒழிக" போன்ற வகை எழுத்துக்களை வரவழைத்து, போட்டு, நன்றிதெரிவிக்க விருப்பமில்லை; போடவில்லை என்றால் "கருத்து-சுதந்திரத்தை மறுக்கிறீர்களா?" என்ற வம்பை வாங்க வேண்டாமே என்பதால்தான் பின்னூட்டங்கள் இடம்பெறவில்லை. தவிர வேறு காரணங்கள் இல்லை.

ஆனால், விமர்சனங்களை நிச்சயம் வரவேற்கிறேன். இந்தப்பதிவுகளை ஒட்டியும் வெட்டியும் கறாராக எழுதினால் நிச்சயம் பதிலுடன் அவை வரும். இதற்கு உறுதியளிக்கிறேன்! இப்படி சில மின்-அஞ்சல்களை வெளியிட்டிருக்கிறேன். ஒரே வருத்தம், பதிவுகளை வாசிப்போர் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டால், வந்த மின்-அஞ்சல்கள் குறைவே.

இறுதியாக, பதிவு எழுதத்தொடங்கிய பிறகு பழைய நண்பர்கள் பலருடன் பேசக்கிடைத்ததில் மகிழ்ச்சியுண்டு.

தமிழ், ஆங்கிலம் தவிர, இணையத்தில் ஃப்ரெஞ்சு, ஹிந்தி மற்றும் மலையாளத்தில் என்ன வருகிறது என்பது குறித்து வாசிப்பவன் நான் என்பதால், அவை குறித்தும் அவ்வப்போது எழுத விருப்பம். பார்க்கலாம்.

தொடர்ந்து நிறைய வாசிப்போம், நிறைவாக எழுதுவோம். நன்றி.

பதிந்தவை