பதிவில் உள்ளனவற்றைச் சிற்றிதழ்-பேரிதழ்களில் வெளியிட விரும்புவோர் - நெடுநாள் நண்பர் எனினும் - முன்-அனுமதி பெற்றாக வேண்டும்.

நிலம் எழுத்து நீர் கலை தீ வரலாறு வளி செயல் விசும்பு சிந்தனை சூன்யம் மோனம் --- நாகார்ஜுனன் வலைத்தளம்

22.5.08

இந்தியாவில் மாவோயிஸத்தாக்கம் ஏன்? - அறிக்கை

இந்தியாவின் பல மாநிலங்களில் - குறிப்பாக, மத்திய மற்றும் கிழக்குப்பகுதி மாநிலங்களில் மாவோயிஸ்ட்களின் ஆயுதப்போராட்டத்துக்கு வலுவான ஆதரவு தொடர்வது ஏன், அங்கு வளர்ச்சிப்பணிகள் சந்திக்கும் சவால்கள் என்பன பற்றிய நிபுணர் குழு அறிக்கை சில நாட்கள் முன்பு வெளியாகியிருக்கிறது.

இந்தியப்பிரதமர் மன்மோஹன் சிங்கைத் தலைவராகவும் அவரைப்போன்றே தாராளமயப் பொருளாதாரக்கொள்கையைச் செயலாக்கிய மான்டேக் சிங் அஹ்லுவாலியாவைத் துணைத்தலைவராகவும் கொண்ட திட்ட ஆணையம், இரண்டு ஆண்டுகள் முன்பு, அமைத்த நிபுணர் குழு அளித்திருக்கும் அறிக்கைதான் இது. 95 பக்க அறிக்கை, ஐந்து அத்தியாயங்கள் கொண்டது.

இம்மாதிரி முக்கிய அரசாங்க அறிக்கைக்ள், ஆவணங்கள் ஆங்கிலத்தில் மாத்திரமே வருகின்றன. இவற்றை அடித்தட்டு மக்களுக்கு வேண்டி இந்திய மொழிகளில் ஆக்கும் பணியை அரசு-சாரா அமைப்புக்கள் முன்முயற்சியெடுத்துச் செய்ய வேண்டியிருப்பது இந்தியாவின் பிரத்யேக அவலம், துயரம்!

இருபதாண்டுகள் முன்பு என்று நினைக்கிறேன் - மன்மோஹன் சிங் சென்னை நகர் வந்திருந்தபோது நான் உள்ளிட்ட பத்திரிக்கை நிருபர்கள் சிலர் அவரைச் சந்தித்தோம். அவர், அப்போது தான்ஸானியத்தலைவர் ஜூலியஸ் நைரேரே தலைமையில் இயங்கிய வளர்ச்சியுறா நாடுகள் பற்றிய South Commission-இன் செயலராக ஜெனிவா நகர் சென்று பொறுப்பேற்க இருந்தார். அதுபற்றிக்கேட்டோம். மேலும் பீஹார், ஆந்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் தாழ்த்தப்பட்டவர்கள், ஆதிவாசிகள் எதிர்கொள்ளும் வன்முறைச்சூழல், மாவோயிஸத்தாக்கம் பற்றிய ஒரு நிபுணர் குழுவுக்குத் தலைமையேற்று தம் அறிக்கையை அப்போதுதான் அளித்திருந்தார் மன்மோஹன் சிங். அந்த அறிக்கையின் விவரங்கள் அப்போது வெளியாகவில்லை என்றாலும் அவற்றைத் தயக்கமின்றி எங்களுடன் பகிர்ந்துகொண்டார்! நாங்கள் அளித்த அந்தச்செய்தி பெரிதாக வெளியானது.

இப்போது நினைக்கும்போது, அந்தக்குழுவின் பரிந்துரைகளை அப்போதைய அரசாங்கம் அவ்வளவாகப் பொருட்படுத்தவில்லை எனத் தோன்றுகிறது. விநோத் பாண்டே என்ற இன்னொரு அதிகாரி தலைமையில் அமைந்த இன்னொரு குழுவும் அறிக்கையொன்றை அளித்தது. அதன் பரிந்துரைகள் என்னவாயின என்பதும் தெரியவில்லை.

தற்போதைய நிபுணர் குழு அறிக்கையை வாசிக்கும்போது இதற்கும் அதே கதி ஏற்படக்கூடாது எனத் தோன்றுகிறது. இதுபற்றி Economic and Political Weekly இதழ் தலையங்கமே எழுதியிருக்கிறது.

ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்கள் யுத்தக்குழு உள்ளிட்ட அமைப்புக்களுக்கு வலுவான ஆதரவு இருப்பதற்கான காரணங்களை ஆராயும் இந்த அறிக்கை, அடிப்படையில் இவற்றை அரசியல் இயக்கமாகவே காண வேண்டும் என்கிறது; நிலமற்ற வறிய விவசாயிகள், விவசாயக்கூலிகள், தலித் மற்றும் ஆதிவாசி மக்கள்தாம் இவற்றைப் பெரிதும் ஆதரிப்பவர்கள். சமுதாய நீதி, சமத்துவம், அடிப்படைக்கட்டமைப்பு வசதிகள் ஆகியவையே இவர்களின் முக்கியக்கோரிக்கைகள் என்றும் இது வரையறுக்கிறது. மாவோயிஸத்தின் வளர்ச்சி, இவர்களின் கட்டுப்பாட்டுப்பகுதிகளில் வாழ்க்கை, இவர்களின் நீதிபரிபாலன அமைப்பு பற்றி ஓரளவு இந்த அறிக்கை கூறுகிறது.

இந்த அறிக்கையின் பல விபரங்கள் புதியவையல்ல; என்றாலும் 1991-ஆம் ஆண்டில் தொடங்கிய தாராளமயப் பொருளாதாரத்தில் இவர்களுக்குப் பெரிதாக ஒன்றும் கிட்டவில்லை; மாறாக நிலம், நீர் என இருப்பதும் பறிபோகும் நிலைமை தீவிரமாகியிருக்கிறது என இந்த அறிக்கை வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது. தவிர, மாவோயிஸ்ட்களுடன் ஆந்திர அரசாங்கம் நடத்திய பேச்சுவார்த்தைகள், அவை தோல்விகண்டது ஏன் என்றும் இந்த அறிக்கை ஆராய்கிறது.

இந்த அறிக்கையின் முக்கியப் பரிந்துரைகள் - அரசாங்கப்படைகள், மாவோயிஸ்ட் அமைப்புக்கள் இடையில் சண்டை நிற்க வேண்டும்; மோதல்-கொலைகள் நிற்க வேண்டும்; ஆயுதமற்றவர்கள் மீதான இருதரப்புத் தாக்குதல்கள் நிற்க வேண்டும்; இந்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் முக்கிய மாவோயிஸ்ட் அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்; மாவோயிஸ்ட் அமைப்புக்களும் பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும்; மாவோயிஸ்ட் அமைப்புக்கள் ஆயுதங்களைக் கையளித்தால்தான் பேசுவோம் என்று அரசாஙகத்தரப்பில் கூறிக்கொண்டிருக்க வேண்டியதில்லை என்பனவே. கஷ்மீர், நாகாலாந்து, அஸாமில் பிரிவினை கோரிப்போராடிய அமைப்புக்கள் ஆயுதங்களைக் கையளிக்காமலேயே அவற்றுடன் இந்திய அரசாங்கம் அவ்வப்போது பேசத் தயாராக இருப்பதை இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

என்னைப் பொறுத்தவரை, வளர்ச்சி என்ற பதம் இங்கே இருபொருள் கொண்டதாக அமையும் என நினைக்கிறேன். அதாவது, இந்த மாநிலங்களின் கனிவளம், வனவளம் ஆகியவற்றை எப்படிப் பயன்படுத்தலாம் என்ற இந்திய அரசாங்கத்தின் நோக்கும் அதே சமயம் இங்குள்ள மக்களின் அரசியல்-பொருளாதாரப் பிரச்னைகளை எப்படி அணுகுவது என்ற சிக்கலும் அடங்கியதாக இந்த நிபுணர்-குழு அறிக்கையை வாசிக்க முடியும்.

இறுதியாக - தமிழ்நாட்டைப்பற்றி இந்த அறிக்கையில் பெரிதாகக் கூறப்படவில்லை. என்றாலும் தமிழில் பதிவு எழுதுவோரை வகைப்படுத்தும்போது மாவோயிஸ்ட்களை ஆதரிப்போர், வெறுப்போர், தாராளமயத்தை ஆதரிப்போர் என பலதரப்புக்கள் விவாதத்தில், ஏன் மோதலில், இருப்பது தெரிந்த விஷயம். இவர்கள் அனைவரும் இந்த அறிக்கையை வாசித்து, தத்தம் விமர்சனங்களை முன்வைத்து, விவாதிக்க வேண்டும்.

இதையும் வாசிக்கலாம்

நிலம் உமது நிலத்துக்குக் கீழே இருப்பவை எமது
மருத்துவர் ஸென் - சிறைதேடி வரும் விருது

ஸ்ரீரங்கப்பட்டினத்தில் நடந்த போர்

5 கருத்துகள்:

ஜமாலன் said...

அறிக்கை குறித்த உங்கள் அறிமுகம் சிறப்பாக உள்ளது. குறிப்பாக இந்தவகை இயக்கங்கள் அரசியல் ரீதியானவையாக கருதுவது பற்றிய குறிப்பை நீங்கள் முதன்மையாக சுட்டியிருப்பது.

தமிழ் வலைப்பதிவர்களுக்கு நீங்கள் முன்வைத்திருக்கும் ஆலொசனையும் அவசியமானது.

நாகார்ஜுனன் said...

ஜமாலன்,

இந்த நிபுணர் குழுவில் உறுப்பினர்களில் ஒருவர், எஸ். ஆர். சங்கரன். ஆந்திர மாநில ஐஏஎஸ் அதிகாரியாக இருந்த இவர், பழங்குடியினர் நலத்திட்டங்களை வகுத்துச் செயலாற்றியவர். தொண்ணூறுகளில் மாவோயிஸ்ட்களால் கடத்தப்பட்டு, பிறகு விடுவிக்கப்பட்டவர். ஆந்திர அரசாங்கம் - மக்கள் யுத்தக்குழு அமைப்பு இடையில் பேச்சுவார்த்தைக்கு வழிவகுத்தவர்களில் இவர் முக்கியமானவர். ஆனால் அந்தப்பேச்சுவார்த்தைகள் தோல்வி கண்டன.

அதேபோல இந்த அறிக்கையின் முதல் வரைவை எழுதியவர்களில் ஒருவர், தென்னகத்தின் முக்கிய மனித உரிமை ஆர்வலர் கே. பாலகோபால்.

தமிழில் விவாதம் நடந்தால் தமிழ்நாட்டிலும் இத்தகைய பேச்சுவார்த்தை சாத்தியமாகும். அது என் விருப்பமும்கூட.

நாகார்ஜுனன்

ஜமாலன் said...

உங்கள் அக்கறைக்F என்ன சொல்வது? “இன்ஷா அல்லா” என்றுதான் சொல்லவேண்டும். 6 மாதம் வேலையை தள்ளிப்போட்டு தப்பிக்க அரபிகளும் நம்மவர்களும் பயன்படுத்தும் ஒரு சொல் இது. :)

Raja said...

என்னைப் பொறுத்தவரை இந்த மாவோயிஸ்ட் பொராட்டமே அன்னிய சதி என்றுதான் சொல்வேன்.

இவர்களின் பொதுவான வாதங்கள்:

1. சம உரிமை இல்லை.
2. கூலி இல்லை.

ஆனால் இவர்கள் அனைவருமே இந்திய அதிகாரத்தையும் இந்திய மதத்தையும் எதிர்ப்பவர்களாகவே இருப்பதுதான் எனக்குப் புரியவில்லை.

நாகார்ஜுனன் said...

ராஜா

அறிக்கையை வாசியுங்கள். 95 பக்கம்தான்.

இந்திய அதிகாரம் என்பதுண்டு. இந்திய மதம் என்று ஒன்றில்லை - இந்திய அரசியல் சட்டத்தை வாசியுங்கள்.

பதிந்தவை