பதிவில் உள்ளனவற்றைச் சிற்றிதழ்-பேரிதழ்களில் வெளியிட விரும்புவோர் - நெடுநாள் நண்பர் எனினும் - முன்-அனுமதி பெற்றாக வேண்டும்.

நிலம் எழுத்து நீர் கலை தீ வரலாறு வளி செயல் விசும்பு சிந்தனை சூன்யம் மோனம் --- நாகார்ஜுனன் வலைத்தளம்

14.4.08

சிற்றிதழ்களின் திசை - கேள்வியும் பதிலும்

நாகார்ஜுனன் அவர்களுக்கு,

நான் ஒரு ஆரம்ப நிலை வாசகன். இன்றைய நிலையில் வாசிக்கக் கிடைக்கும் சிற்றிதழ்கள் அனைத்தும் வேறுதிசையில் செல்ல ஆரம்பித்துவிட்டன. அதற்கான அரசியல் காரணங்கள் அவற்றுக்கு இருக்கலாம்.

ஒரு இலக்கிய வாசகனை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் செல்லக்கூடிய இதழ்கள் வருகின்றனவா?

கல்குதிரை இதழ் கார்ஸியா-மார்க்வெஸ், உலக சிறுகதைத் தொகுப்பு போன்ற சிறப்பிதழ்கள் கொண்டுவந்தது என்று படித்தேன். இன்று அவை சாத்தியமா. அப்படி ஏதேனும் சிற்றிதழை நீங்கள் கருதுகிறீர்களா?

நன்றி.
ச. சர்வோத்தமன்

அன்புள்ள சர்வோத்தமன்

கடந்த பதினைந்து ஆண்டுகளில் சந்தைப்பொருளாதாரம், உலகமயமாதல், இணையத்தின் பெருக்கம், வெகுஜன அரசியல் போக்குகளில் மாற்றம் என ஏகப்பட்ட தாக்கங்கள். எல்லாவற்றுக்கும் மேலாக சிற்றிதழ் நடத்துவோருக்கும் சரி, வாசிப்போர்க்கும் சரி, ஒரளவு ரொமான்டிஸிஸம் போய்விட்டிருக்கிறது. இது தமிழில் மட்டுமன்றி, உலகுதழுவிய நிகழ்வாக இருப்பதாக நினைக்கிறேன்.

தமிழை எடுத்துக்கொண்டால், சிற்றிதழ்களில் இருந்துவந்த பல்வேறு பிரச்னைகளையும் தாண்டி, அவை மூலமாகத்தான் எழுத்துப்பரிசோதனைக்ள் சாத்தியமாயின். இன்று வெகுஜனப்பரப்பில் எழுதக்கூடிய தீவிர எழுத்தாளர்கள் பலரும் எழுபதுகள், எண்பதுகள், தொண்ணூறுகளில் சிற்றிதழ்களில் எழுதியவர்கள், சிலர் இன்னமும் எழுதுபவர்களே.

கோணங்கி போன்ற சிலர் வெகுஜன இதழ்களில் எழுதுவதில்லை, இடைநிலை-இதழ்களில் கூட எப்போதாவதுதான் எழுதுகிறார்கள். என்றாலும் வெகுஜன, இடைநிலை இதழ்கள் இவர்களைப் பயத்துடன் அணுகுகின்றன என்றால் அதற்குக் காரணங்கள் இரண்டு - ஒன்று இவர்களின் தனிப்பட்ட சாதனை, அடுத்தது சிற்றிதழ்களில் இருந்த பல்வேறு பிரச்னைக்ளையும் தாண்டி அங்கே நடந்த பல்வேறு பரிசோதனைகளும் கோட்பாட்டுரீதியான விவாதங்களும்.

சிற்றிதழ்களில் எழுதியவர்கள் நட்த்திய பரிசோதனைகளின், விவாதங்களின் சூட்டை, வெறும் குழுவாதமாக, ஆரவாரமாகச் சித்தரிப்பதில் இடைநிலை-இதழ்கள் வெற்றிகண்டதும் இந்தக்காலகட்டத்தில் நடந்திருக்கிறது.

இத்தகைய விவாதங்களை மேற்கொள்ளும் சிற்றிதழ்கள் இன்று குறைந்துவிட்டன என்பதும் உண்மைதான். ஒருசில இன்னும் வருகின்றன. ஒருகாலம் இல்லாமலும் போகக்கூடும்.

இடைநிலை-இதழ்களைப் பொறுத்தவரை தத்தம் பிரத்யேக agendas என்பனவற்றைத் தாண்டிச் செயல்படுவது எப்போதாவதுதான். இடைநிலை-இதழ்களுக்கு இன்றியமையாதது diplomacy - தேவையற்றவை கோட்பாட்டு விவாதங்கள். மீறிப் போட்டால் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம்.

இதைத்தான் பொதுக்களத்தின் பித்த சூழ்நிலை என்று என் தீராநதி நேர்காணலில் கூறினேன். இனி சிற்றிதழ்கள் நடத்துவோர், பரிசோதனையாக எழுதுவோர், தனிமைவாசத்துக்குத் தயாராக இருக்க வேண்டும் என நினைக்கிறேன்!

நாகார்ஜுனன்

0 கருத்துகள்:

பதிந்தவை