பதிவில் உள்ளனவற்றைச் சிற்றிதழ்-பேரிதழ்களில் வெளியிட விரும்புவோர் - நெடுநாள் நண்பர் எனினும் - முன்-அனுமதி பெற்றாக வேண்டும்.

நிலம் எழுத்து நீர் கலை தீ வரலாறு வளி செயல் விசும்பு சிந்தனை சூன்யம் மோனம் --- நாகார்ஜுனன் வலைத்தளம்

2.4.08

பதிவுகளும் நானும் இதுவரை - 2

"நன்கறிந்த எழுத்தாளர்கள்" பின்னூட்டங்களை அனுமதிப்பதில்லை ஏன் என்பது பற்றி வெங்கட் மற்றும் பிரபு ராஜதுரை தொடங்கிய பதிவுகளில் சூடான விவாதம் நடந்துவருகிறது.

இதில் என் பதிவைப் பற்றியும் எழுதப்பெற்றிருக்கிறது.

பின்னூட்டங்களை ஏன் அனுமதிக்கவில்லை - ஆனால் மின்-அஞ்சல்களை அனுப்பலாம் என்பதை விளக்கி நேற்றுத்தான் எழுதினேன்.

இந்த விவாதத்தில் வெங்கட் இப்படி எழுதியிருக்கிறார்:

"இன்று அச்சு ஊடகங்களில் எழுதுபவர்கள் பலரும் விஷயதானத்திற்கு இணையத்தையே முற்றாக நம்பியிருக்கிறார்கள். வலைக்குறிப்புகளும் இணைய சஞ்சிகைகளும் இவர்கள் எழுதுபனவற்றுக்கு அடிப்படையாக இருப்பதை அடையாளம் காணமுடிகிறது. ஆனால் அச்சிலேறுபவை எல்லாம் இணைய உலகில் வ(வா)சிக்கும் பலரையும் சென்றடைவதை இவர்கள் அறிவதில்லை. இந்த வாசகர்களின் உலகம் வேறு, இங்கே பிம்பங்கள் தொழப்படுவதில்லை. அது எழுத்தாளர்-வாசகர் என்ற இடைக்கோடு அழிந்துபோன வேற்று உலகம் என்பதைப் பழமையில் ஊறிய படைப்பாளிகள் அறிவதில்லை. மேல் நின்று உபதேசிப்பது இங்கே எடுபடாது; எதுவுமே சக-விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவையல்ல. கறாரான விமர்சனங்கள் முன்வரும்பொழுது அவர்களால் அந்த வீச்சை எதிர்கொள்ள முடிவதில்லை. மறுபுறத்தில் இவ்வூடகத்தில் கிடைக்கும் பல வசதிகள் அவர்களைத் தொடந்து கவர்ந்திழுத்துக்கொண்டே இருக்கின்றன. இதனால்தான் இவர்களில் பலரும் மறுபிறவி எடுத்து வலைப்பதிய வருகிறார்கள். இந்த முறை அதீத கவனத்துடன் மறுவினைக்கான வாசலை மூடிவிட்டுத்தான் தங்கள் கடையை விரிக்கிறார்கள்..."

ஒரு விஷயம் - என் எழுத்துக்கு இணையத்தை மாத்திரம் நான் நம்புவதில்லை. புத்தகங்கள் எப்போதும் உண்டு. எல்லாவற்றுக்கும் அடிப்படையாக நான் முக்கியமாகக் கருதும் அறிவியல்-இலக்கிய-தத்துவ-வரலாற்றுப் பிரச்னைப்பாடுகள் என் சிந்தனையில் எப்போதும் இடம்பெறும்.

இருந்தாலும் இணையம் என்பது வேறுவகை வடிவம் என்பதால் வெங்கட் சொல்வதில் ஒரு நியாயம் இருக்கிறது. “பெரிய எழுத்தாளர்களுக்கு” வெங்கட் விட்டிருப்பது நிச்சயம் ஒரு சவால்தான். ஒரு பரிசோதனையாக அதை ஏற்கிறேன்!

என் தளத்தில் பின்னூட்டங்களை இன்றிலிருந்து அனுமதிக்கிறேன் - விரைவில் அதற்கான மாற்றங்கள் செய்யப்படும். அடுத்த ஒரு மாதம்வரை என் இணைய தளத்தின் பின்னூட்டப்பெட்டி திறந்திருக்கும். ஒட்டியும் வெட்டியும் வரும் கறாரான கருத்துக்கள் நிச்சயம் இடம்பெறும் என்று உறுதியளிக்கிறேன்.

அதேவேளை நேற்றுக் கூறியது போல “சூப்பர்!”, “பிச்சிட்டீங்க…”, “பயனுள்ள பதிவு”, “புரியலே”, “post-modernism ஒழிக” போன்ற வகை எழுத்துக்களை வரவழைத்து, போட்டு, நன்றிதெரிவிக்க விருப்பமில்லை; போடவில்லை என்றால் “கருத்து-சுதந்திரத்தை மறுக்கிறீர்களா?” என்ற வம்பை வாங்க வேண்டாமே என்பதால்தான் பின்னூட்டங்கள் இதுவரை இடம்பெறவில்லை. தவிர வேறு காரணங்கள் இல்லை!

பதிந்தவை