பதிவில் உள்ளனவற்றைச் சிற்றிதழ்-பேரிதழ்களில் வெளியிட விரும்புவோர் - நெடுநாள் நண்பர் எனினும் - முன்-அனுமதி பெற்றாக வேண்டும்.

நிலம் எழுத்து நீர் கலை தீ வரலாறு வளி செயல் விசும்பு சிந்தனை சூன்யம் மோனம் --- நாகார்ஜுனன் வலைத்தளம்

16.3.08

திபெத்தில் நடப்பதென்ன?

சரியாக அரைநூற்றாண்டுக்காலமாக இமய மலையின் திபெத் பகுதி சீன அரசின் கட்டுப்பாட்டில் இருந்துவருவதை ஒட்டி, சீன ஆட்சியாளர்களின் கொடுங்கோன்மையை எதிர்த்துப் போராட்டங்கள், கலவரங்கள் வெடித்திருக்கின்றன. மியான்மார் (பர்மா) நாட்டில் அண்மையில் நடந்ததைப்போல இவற்றில் புத்த பிக்குமாரும் ஈடுபட்டிருக்கிறார்களா என்றால் அப்படித்தான் தெரிகிறது.

நடந்த கலவரங்களை அடக்கும் முயற்சியில் சீன அரசு ஈடுபட்டிருக்கிறது. திபெத்தின் லாஸா, க்ஸிஹே நகரங்களில் பலர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பலியானவர்களின் எண்ணிக்கை சரிவரத் தெரியவில்லை இன்னும். ஆனால், அவர்களில் இருதரப்பும் உண்டு என்று தெரிகிறது. நிலைமையைச் சீனா எச்சரிக்கையுடன், பலத்தைப் பிரயோகிக்காமல், கையாள வேண்டும் என்கிறார் இந்தியாவின் தரம்சாலா நகரில் வசிக்கும் தலாய் லாமா.

ஒலிம்பிக் விளையாட்டுப் பந்தயங்கள் முதல்முறையாக சீனாவில் நடப்பதற்கு சில மாதங்களே இருக்கும் பின்னணியில் இந்தப் போராட்டங்கள், கலவரங்கள் நடந்திருக்கின்றன. இவற்றைச் சீனா இப்போதே கடுமையாக அடக்குமா, இல்லை ஒலிம்பிக் பந்தயங்கள் நடந்து அடக்குமா தெரியவில்லை.

ஐம்பதாண்டுகள் முன்பு தலாயின் பிரதானமாக நிலப்பிரபுத்துவமாக இருந்த ஆட்சியைக் கவிழ்த்து அவரை இந்தியாவில் தஞ்சம் புக வைத்தனர் சீன ஆட்சியாளர்கள். அடுத்த மூன்றாண்டுகளில் நடந்த இந்திய-சீனப் போர் வேறு...

இந்த ஐம்பதாண்டுகளில் தலாய் உலகைச் சுற்றிவந்ததுதான் மிச்சம் - அவருக்கு ஹாலிவுட் வரை சீடர்கள் கிட்டினார்கள், ஆனால் திபெத்துக்கு விடுதலை என்ற கனவு பலிக்காமல் போனது. பத்தாண்டுகள் முன்பு இந்தியா அணுகுண்டுப் பரிசோதனை நடத்தியபோது பௌத்தரான தலாய் அதை வரவேற்பதைக் காணவும் முடிந்தது... உலக அரங்கில் சீனாவின் வல்லரசு-அதிகாரத்தை அது குறைக்காதா என்ற நப்பாசைதான் காரணம்! உலக அரசியலின் பல்வேறு அபத்தங்களில் இதுவும் ஒன்று.

தற்போது மேற்கத்திய நாடுகள், இந்தியா உள்ளிட்ட எல்லாருமே சீனாவுடன் நட்புறவு பேணுவதை அடுத்து, திபெத்தின் கதி அதோகதியாகி விட்டது. கம்யூனிஸச் சீனாவுடன் சமாதானம் பேச தலாயும் சில ஆண்டுகளாகவே தயார். ரகசியப் பேச்சுவார்த்தைகளும் நடந்திருக்கின்றன. ஆனால் இதுபற்றிய சீன அரசின் உண்மை நிலைப்பாடு தெரியவில்லை.

சீன அரசு கூறிவருவதுபோல தலாய் இந்திய-அமெரிக்க கைக்கூலியோ இல்லையோ, திபெத்தில் நடந்துவரும் சீன ஆட்சிக்கு எதிரான உணர்வு அங்கே கனன்று வந்திருக்கிறது என்பது மீண்டும் உண்மையாகிவிட்டது. இந்தப் போராட்டங்கள், கலவரங்கள் புறத்திலிருந்து தூண்டிவிடப்பட்டவை மாத்திரமே என்று சீன அரசு கூறுவது நம்பக்கூடியதாக இல்லை.

பகுப்பு - செயல்

பதிந்தவை